திமுக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்.17 முதல் விருப்ப மனு தாக்கல்
சென்னை: திமுக சார்பில் தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் (பிப்ரவரி 17) முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுவை சட்டசபை தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. அதிமுக, மக்கள் நீதி மையம் கட்சிகளில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து திமுகவிலும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 17-ந் தேதி முதல் பிப்ரவரி 24-ந் தேதி வரை விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதற்கான விண்ணப்பங்களை ரூ1,000 கட்டணம் செலுத்தி சென்னை அண்ணா அறிவாலயத்தில் பெற்று கொள்ளலாம். பொதுத்தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ25,000 கட்டணமாக செலுத்த வேண்டும். தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் மற்றும் பெண்கள் ரூ15,000 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் துரைமுருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல்: மநீம வேட்பாளராக போட்டியிட பிப் 21 முதல் ஆன்லைனில் விருப்ப மனு- ரூ25,000 கட்டணம்!
அத்துடன் வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும் என்றும் துரைமுருகன் கூறியுள்ளார்.