"150 நிச்சயம்".. அதுக்குமேல் வருவதே லட்சியம்.. திமுகவுக்கு மறைமுகமாக உதவும் தினகரன், கமல் கணக்கு தனி
திமுக எப்படியும் 150 சீட்களை வெல்லும் என்று கூறப்படுகிறது
சென்னை: ஒரு புது வியூகம் தமிழக அரசியல் களத்தில் ரவுண்டு கட்டி வருகிறது.. அதனடிப்படையில் திமுக நிச்சயம் இந்த முறை மெஜாரிட்டியுடன் வெல்லும் என்று சில கணிப்புகளும் சொல்கிறார்கள்.
10 வருட ஆட்சியை விட்டதை இந்த முறை பிடிக்க திமுக களம் இறங்கி உள்ளது.. கிராம சபை, உங்கள் ஊரில் ஸ்டாலின், பிரச்சாரங்கள், தேர்தல் அறிக்கைகள் என பலவற்றை மக்களிடம் முன்வைத்து வாக்குகளை சேகரித்து வருகிறது.
தேர்தல் சமயங்களில் வழக்கமாக கருத்து கணிப்புகள் வெளியாவது வழக்கமான ஒன்றுதான்.. அதுபோலவே இந்த முறையும் கணிப்புகள் வெளியாகின.. அந்த கணிப்புகளில் பெரும்பாலும் திமுகவே வெற்றி வாய்ப்பை பெறும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
கணிப்புகள்
தனியார் நிறுவனங்கள் நடத்தும் எத்தனையோ கருத்து கணிப்புகள் தேர்தலுக்கு பிறகு வேறு மாதிரியாக பிரதிபலிக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது என்றாலும், அரசியல் நோக்கர்களின் கணிப்புகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்து வருவதை கவனிக்க வேண்டி உள்ளது.
150 தொகுதி
அதாவது 150 தொகுதிகளுக்கு மேல் திமுக வெல்லும் என்கிறார்கள்... இதற்கு இவர்கள் சொல்லும் காரணம், அதிமுகவின் கூட்டணிதான் மிகப்பெரிய மைனஸ் ஆக உள்ளதாக தெரிகிறது.. திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேரும்போது, அந்த கூட்டணி ஒரு முக்கியத்தை கூடுதலாக பெறுகிறது.. ஆனால், இதுவே அதிமுகவுடன் பாஜக சேரும்போது, அதிமுகவின் வலிமை தானாகவே குறைகிறது என்பதே அரசியல் நோக்கர்கள் சொல்லும் கணிப்பு.
ஐகான்
"கூட்டணி ஐகான்" என்பது தேர்தல் களத்தில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.. இதேதான் பாமகவுக்கும்.. வடமாவட்டங்களில் ராமதாஸூக்கு செல்வாக்கு பெரும்பான்மையாக இருந்தாலும்கூட, அதற்கு ஒதுக்கப்பட்ட மற்ற தொகுதிகளில் நிச்சயம் வெற்றி வாய்ப்பை தவறவிடும் வாய்ப்பு உள்ளதாம். இதற்கு காரணம் பாமகவும் பாஜக கூட்டணியில் அங்கம் வகிப்பதுதான்.. மற்ற தொகுதிகளே இப்படி என்றால், சேப்பாக்கம் போன்ற இஸ்லாமியர் தொகுதிகளில் பாமகவுக்கு ஓட்டு விழும் என்றெல்லாம் யோசிக்கவும் முடியாது என்பதே கள நிலவரம்.
பாஜக
இப்போது கேஸ் விலை, பெட்ரோல் விலை உட்பட மத்திய அரசின் அறிவிப்புகளுக்கு அதிமுக கூட்டணி கட்சியால், மக்களிடம் எந்தவித பதிலையும் சொல்ல முடியாத தர்மசங்கடமான நிலைமையும் ஏற்பட்டுள்ளது.. அதிலும் அந்த 2 ஆயிரம் ரூபாய் தருவோம் என்ற வாக்குறுதி, வெறும் கற்பனையாகவே பார்க்கப்பட்டு வருகிறது. ஆக, திமுக செய்கிறதோ இல்லையோ, அதிமுகவின் கூட்டணியே பெரும் தாக்கத்தை திமுகவுக்கு சாதகமாக ஏற்படுத்தக்கூடும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
தினகரன்
தினகரனை எடுத்து கொண்டால், திமுகவை தோற்கடிப்போம் என்று சொன்னாலும், அவர் பிரிக்கக்கூடிய வாக்குகள் என்பது அதிமுகவின் வாக்குகள்தான்.. அமமுகவால் நேரடியாக பாதிக்கப்பட போவது அதிமுகதான்.. முதுகுளத்தூர், கோவில்பட்டி, மேலூர் போன்ற இடங்களில் அமமுக நிச்சயம் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புள்ள தொகுதிகள்தான்.. தென்மாவட்டங்கள் தவிர, ஆனால் மிகப்பெரிய பலமாக நம்பி கொண்டிருக்கும் கொங்கு மண்டலங்களிலும் அமமுக செல்வாக்கு ஓரளவு பரவி உள்ளது..
கமல்
இதுபோக, கமல் ஒரு பக்கம் எல்லா கட்சிகளின் வாக்குகளையும் சிதறடித்து கொண்டிருக்கிறார். எனவே, எப்படி பார்த்தாலும் 150 சீட்களில் திமுக வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு கனிந்து வருகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஆனால், உண்மையிலேயே 150 தொகுதிகளை திமுக வென்றுவருமா? அல்லது உட்கட்சி பூசல், அடுத்தது தாங்கள்தான் என்ற அலட்சிய போக்கு, போன்ற காரணங்களினால், அதை நழுவ விடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.