மத்திய அரசின் வெப்சைட்டில் எழுத்துப் பிழை.. என்னது ‘தமிழ் நாயுடு’வா? திமுக ஐடி விங் கொதிப்பு!
மத்திய அரசின் இணையதளத்தில் ‘தமிழ்நாடு’ என்ற பெயரில் எழுத்துப்பிழை இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் நடைபெற்ற அலங்கார ஊர்தி அணிவகுப்பில் பங்கேற்ற ஊர்திகளுக்கு வாக்களிக்க மத்திய அரசின் இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், Tamil nadu என்பதற்கு பதிலாக Tamil naidu என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை திமுக ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது.
குடியரசு தின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் கடமை பாதையில் நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியேற்றி வைத்தார்.
டெல்லியில் நடந்த குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் சிறந்த ஊர்திக்கு இணையத்தில் வாக்களிக்கும் பிரிவில் தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழ் நாயுடு என குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
ஒளவை, முத்துலட்சுமி ரெட்டி.. பெண்களை மையப்படுத்திய தமிழ்நாடு அலங்கார ஊர்தி.. டெல்லியில் கோலாகலம்!
குடியரசு தின விழா
இந்தியாவின் 74வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் படாக் எல் சிசி பங்கேற்றார். டெல்லி கடமைப்பாதையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். ஜனாதிபதி தேசியக்கொடி ஏற்றி கொடி வணக்கம் செலுத்தியவுடன் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது.
அலங்கார ஊர்தி அணிவகுப்பு
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகள் மற்றும் மத்திய அரசுத் துறைகளின் 6 அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தமிழ்நாடு அலங்கார ஊர்தி
தமிழ்நாடு அரசின் சார்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்தியில் தஞ்சை பெரிய கோவில் கோபுரம் இடம்பெற்று இருந்தது. கல்வி, கலை, போர் போன்றவற்றில் தமிழ்நாட்டுப் பெண்களின் வலிமையை உணர்த்தும் வகையில் உருவங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அலங்கார ஊர்தியில் ஔவையார், வேலுநாச்சியார், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி, பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி, பரதநாட்டியக் கலைஞர் பால சரஸ்வதி, விவசாயம் மேற்கொள்ளும் 107 வயது மூதாட்டி பாப்பம்மாள் ஆகியோரது உருவங்கள் இடம்பெற்றிருந்தன.
தமிழ் நாயுடு?
இந்நிலையில், டெல்லியில் நடந்த குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் பங்கேற்ற தங்களுக்கு விருப்பமான ஊர்திக்கு மக்கள் வாக்களிக்கும் வகையில் மத்திய அரசின் MyGov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு (Tamil Nadu) என்பதற்கு பதிலாக 'தமிழ் நாயுடு' (Tamil Naidu) என இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.
திமுக ஐடி விங் காட்டம்
இது தொடர்பாக திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளது. " 'தமிழ்நாடு'ன்னு கூட எழுதத் தெரியாத தற்குறிகளிடம் மாட்டிக் கொண்டு தவிக்கிறது Tamilnadu. தமிழ்நாடு அரசின் 'குடியரசு தின அலங்கார ஊர்தி'க்கு வாக்களிக்கவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.