அண்டிப்பிழைத்த புழுக்கள்.. கருணாநிதி நினைவு சின்ன நிழல் மீது கை வைத்தால் கூட.. டிஆர்பி ராஜா ஆவேசம்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திமுக எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை : "கருணாநிதி எனும் ஆலமரத்தின் அடியில் பிழைத்து வந்த புழுக்களெல்லாம் அவரது நினைவை சீண்டிப் பார்க்க நினைக்கின்றன. கருணாநிதி நினைவிடத்தின் நிழல் மீது கை வைத்தாலும், அப்புறம் ... இருக்காது." என சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளார் திமுக ஐடி விங் செயலாளர் டிஆர்பி ராஜா.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்துப் பணிகளைப் போற்றும் வகையில், கடலில் பேனா நினைவு சின்னம் வைக்கப்படும் என திமுக அரசு அறிவித்தது. மெரினா பகுதியில் கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடந்தது.
கடலில் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் வைத்தால் உடைப்பேன் என இன்று நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடற்கரையில் புதைக்க விட்டதே தப்பு.. கடலுக்குள் கருணாநிதி பேனா சின்னம் வைத்தால் உடைப்பேன்- சீமான்
சீமான் கடும் எதிர்ப்பு
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச் சின்னத்தை சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
உடைப்பேன்
சீமான் பேசும்போது திமுகவினர் மேடைக்கு முன் வந்து கூச்சலிட்டனர். அப்போது சீமான், "உங்களை கடற்கரையில் புதைக்க விட்டதே தவறு. நீங்கள் பேனா வையுங்கள், ஒருநாள் நான் வந்து உடைக்கிறேன். யாருகிட்ட? பேனாவை கடலுக்குள்தான் வைக்கவேண்டும் இவர்களுக்கு. ஏன் அண்ணா அறிவாலயத்துக்கு முன்னால் வையுங்கள், நினைவிடம் கட்டியிருக்கிறீர்களே அதில் வையுங்கள், பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை, பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது?" என கடுமையாகச் சாடிப் பேசினார்.
எதற்கு கருத்து கேட்குறீங்க?
பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், "மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில் கூட்டத்தை நடத்தி, அவர்களுக்கு ஆதரவான கருத்துகளை ஏற்பது, எதிர்க் கருத்து தெரிவித்தால், அதனை எதிர்த்து கூச்சலிடுவது என்பது ரொம்ப அநாகரிகம். அதற்கு எதற்காக கருத்துக் கேட்புக் கூட்டம்? கட்சிக் கூட்டம் என்ற பெயரில் நடத்திவிட்டுப் போகலாம்" என விமர்சித்தார்.
பிளாஸ்டிக்
மேலும் பேசிய சீமான், "கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் வைப்பதை எதிர்க்கவில்லை. ஆனால், கடலுக்குள் வைக்கக் கூடாது. அதுதான் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு. அது சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். கடலுக்குள் கல், மண்ணைக் கொட்டி அதன் மேல் அந்தப் பேனாவை நிறுவ வேண்டும். அதைப் பார்வையிட செல்லும் மக்கள் பிளாஸ்டிக்கை தூக்கி எறிந்து செல்வார்கள். ஏற்கெனவே இந்திய நிலப்பரப்பு அளவுக்கு நம் கடலுக்குள் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதாக கூறப்படுகிறது." எனத் தெரிவித்தார்.
சிலை இருக்காது
உங்கள் எதிர்ப்பை புறக்கணித்து கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த சீமான், "கடலுக்குள் சிலை வைக்கவிடாமல் தடுத்து கடுமையான போராட்டங்களைச் செய்வேன். அதன்பிறகும் கடலுக்குள் சிலை வைத்தால் ஒருநாள் அது எங்கிருக்கிறது என்று தெரியாமலே போகும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
டிஆர்பி ராஜா எச்சரிக்கை
சீமானின் இந்தப் பேச்சு கடும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக ஐடி விங் செயலாளரும் மன்னார்குடி எம்.எல்.ஏவுமான டிஆர்பு ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "கருணாநிதி எனும் ஆலமரத்தின் அடியில் பிழைத்து வந்த புழுக்களெல்லாம் அவரது நினைவை சீண்டிப் பார்க்க நினைக்கின்றன. கலைஞர் நினைவிடத்தின் நிழல் மீது கை வைத்தாலும், அப்புறம் ... இருக்காது. மீண்டும் சொல்கிறேன், நாகரீக அரசியல் எல்லாம் இதுகளிடம் சரி வராது" என கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்துள்ளார்.