"மகளிருக்கு ஜாக்பாட்".. ரூ.8,000 கூப்பன் உள்பட பெண்களுக்கு திமுக தந்த டாப் 14 அறிவிப்புகள் – லிஸ்ட்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பெண்களின் ஓட்டுகளை கவரும் வகையில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டு உபயோக பொருட்களான ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி, கிரைண்டர் மிக்சி வாங்கி கொள்ள ரூ.8 ஆயிரம் கூப்பன் வழங்குவது மட்டுமின்றி டாப் 14 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் சீமானின் நாம் தமிழர், அதிமுகவை தொடர்ந்து திமுக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில் மகளிரை குறிவைத்த டாப் 14 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கலைஞர் ஆட்சிக்காலத்தில் அனைத்து வீடுகளுக்கும் கலர் டி.வி.கள் வழங்கப்பட்டது முதல், திராவிட மாடல் அரசு தற்போது செயல்படுத்தியுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வரை, மகளிர் நலம் காக்கும் பல்வேறு முன்னோடித் திட்டங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ரூ.8,000 கூப்பன் திட்டம்
1. இதன் அடுத்தகட்டமாக, மகளிர் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களின் தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இல்லத்தரசிகள் தம் வீட்டில் பயன்படுத்தும் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோவேவ் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைப் புதிதாக வாங்கவோ அல்லது ஏற்கனவே பயன்படுத்திவரும் இத்தகைய பொருட்களுக்கு மாற்றாக வாங்கவோ, "இல்லத்தரசி" என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின்கீழ், வருமான வரி செலுத்தாத குடும்பங்களின் இல்லத்தரசிகள் அனைவருக்கும், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகளிலேயே மேற்கூறிய வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் வழங்கப்படும்.
2. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
3. பெண்கள் உயர்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ. 1000 உதவித்தொகை, ரூ. 1500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
ரூ.5 லட்சம் வரை மானிய கடன்
4. சுயஉதவிக்குழு உறுப்பினராக இருக்கும் பெண்கள், அடுத்தகட்டத்திற்குப் பொருளாதார ரீதியாக முன்னேறும் வகையில், அவர்கள் தொழில்முனைவோராக உருவாக்கப்படுவர். சுயஉதவிக் குழுக்களில் சிறிய அளவில் தொழில் செய்வோர், தொழிலாளர்கள் ஆகியோர் தொழில் முனைவோர்களாக முன்னேறும் வகையில் 5 லட்சம் ரூபாய் வரை முதலீட்டுடன் தொழில் தொடங்க, மானியத்துடன் வங்கிக் கடனுதவி, பிணை எதுவுமின்றி வழங்கப்படும். இதன் மூலம் குறைந்தது 3 லட்சம் கிராமப்புறப் பெண்கள் தொழில் முனைவோராக உயர்வார்கள். இந்தப் புதிய பெண் தொழில்முனைவோர் உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தைப்படுத்தத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்.
5. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நவீன உற்பத்தி முறை பயிற்சிகள் வழங்கப்படும். இத்தகைய பயிற்சி பெற்ற பெண்கள், தொழில் முனைவோராகத் தேவையான நவீனக் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு, ஒரு பொதுநல மையத்தில் (Common Facility Centre) வைக்கப்படும். மூலப்பொருட்களை இம்மையங்களுக்குக் கொண்டு வந்து விற்பனை செய்யத்தக்க முழுமையான பொருட்களாக மாற்றி எடுத்துச் செல்லும் வசதி ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கப்படும்.
விருது - குழந்தைகள் காப்பங்கள்
6. பல்வேறு வகையான தொழில்களில் சிறந்து விளங்கிடும் பெண் தொழில்முனைவோர் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் முதலமைச்சர் விருது வழங்கப்படும்.
7. கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் சுமார் 5 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிற்கும் அவற்றின் தகுதி அடிப்படையில் தேவைக்கேற்ப, அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி அளவிலான வங்கிக் கடன்கள் வழங்கப்படும். இதனால், குழு உறுப்பினர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் உயரும், கிராமப் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.
8. அரசின் கொள்முதலில் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
9. தனியார் நிறுவனங்களில் உயர் நிர்வாக வேலைவாய்ப்புகளைப் பெண்கள் பெறுவதை ஊக்குவிக்கச் சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இப்படி உயர் ஊதிய வேலைகளில் அமர்த்தப்படும் பெண்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 10 விழுக்காடு அந்நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்படும்.
10. தொழிற்சாலைகள் அதிகமுள்ள நகரங்களில், பெண்கள் வேலைக்குச் செல்வதை எளிதாக்கும் பொருட்டு, 1000 குழந்தை காப்பகங்கள் உருவாக்கப்படும்.
சானிடரி நாப்கின் இயந்திரங்கள்
11. இளஞ்சிவப்பு ரோந்துப் பணிகள் அனைத்து நகரப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்துதல், தேவையான இடங்களில் CCTV கேமராக்கள் பொருத்துதல், காவலன் செயலியை மேம்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் பெண்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்வோம்.
12. நகர்ப்புறங்களின் முக்கிய இடங்களில் சானிடரி நாப்கின்களை விநியோகிக்கும் இயந்திரங்கள் நிறுவப்படும்.
13. அடுத்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் பெண்களுக்கு 4 சக்கர வாகனம் மற்றும் பேருந்து ஒட்டுவதற்கான பயிற்சி வழங்கப்படும். இதன் வாயிலாகப் பெண்களுக்குப் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.
14. நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்துத் தேவைகள் அதிகரிக்கும் சூழலில், தகுதி வாய்ந்த சுயஉதவிக் குழுப் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு Share Auto வாங்குவதற்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வசதி ஏற்படுத்தித்தரப்படும்.












Click it and Unblock the Notifications