பொங்கல் பரிசுத் தொகுப்பு.. டோக்கன் வழங்குவதில் ஆளுங்கட்சி தலையீடு.. குற்றம்சாட்டும் அண்ணாமலை!
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் திமுகவினர் தலையீட்டை தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பொங்கல் தொகுப்பு டோக்கன்களை திமுகவினரே மக்களுக்கு வழங்கி வருவதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் வழங்கப்படும் பரிசு தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
பரிசு தொகுப்புக்காக கொள்முதல் செய்யப்படும் கரும்பின் உயரம், அளவு உள்ளிட்டவற்றை அரசு வரன்முறை செய்துள்ளது. மேலும் பரிசு தொகுப்புகளுக்கான டோக்கன்கள் மாவட்ட வாரியாக நியாய விலைக்கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்டத்தில் பரிசு தொகுப்பு தொடர்பான பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் கவனித்து வருகின்றனர்.

அண்ணாமலை குற்றச்சாட்டு
இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் ஆளுங்கட்சியினர் தலையீட்டை தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு வழங்குவதில், வழக்கம்போல குளறுபடிகளைச் செய்து வருகிறது திமுக அரசு. பொங்கல் பரிசை பொதுமக்களுக்கு வழங்குவதில் திமுகவினர் கொடுக்கும் இடைஞ்சல்களைக் கண்டும் காணாமல் இருக்கிறார்.

டோக்கன் வழங்கும் திமுகவினர்
கோவை மாவட்டம் பொன்னையா ராஜபுரம் பகுதியில், பொங்கல் தொகுப்பு டோக்கன்கள் மொத்தமும், திமுகவினருக்கே வழங்கியுள்ளனர் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டும் காணொலி வெளியாகி அதிர்ச்சியைத் தருகிறது. அது மட்டுமல்லாது, திருமுல்லைவாயல் பகுதியிலும், ஆளும் கட்சிக் கவுன்சிலர்களிடம் இருந்து டோக்கன்கள் பெற்றுக்கொள்ளுமாறு, பொதுமக்கள் வற்புறுத்தப்படுகிறார்கள் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவுகின்றன.

ரேஷன் கடை ஊழியர்கள்
மேலும் பல்வேறு இடங்களில், பொங்கல் தொகுப்பு வழங்குவதில், ஆளுங்கட்சியினர் தலையீடு இருப்பதாக ரேஷன் கடை ஊழியர்களே வருந்திப் புலம்பும் சூழல் உருவாகியிருக்கிறது. ஆளுங்கட்சித் தலையீடை நிறுத்தத் திறனில்லாத திமுக அரசு, ரேஷன் கடை ஊழியர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுகிறது என்றும் அரசு ஊழியர்கள் வருந்துகிறார்கள்.

அண்ணாமலை வலியுறுத்தல்
உடனடியாக, பொங்கல் தொகுப்பு வழங்குவதில், ஆளுங்கட்சியினர் தலையீடை நிறுத்தி, பொங்கல் தொகுப்பு டோக்கன்களை அரசு ஊழியர்கள் மட்டுமே வழங்க வேண்டும் எனவும், தனது கட்சிக்காரர்கள் செய்யும் தவறுகளுக்கு, அரசு ஊழியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் கண்துடைப்பு நாடகத்தை நிறுத்தி, உரியவர்களுக்குப் பொங்கல் தொகுப்பு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தமிழக முதல்வரை வலியுறுத்துவதாக பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications