கட்சி கொள்கைக்கு எதிராக செயல்பட்டால் ‘உற்ற நண்பர்களாக இருந்தாலும்’.. திமுக கொடுத்த மெசேஜ்!
சென்னை : "இனி உங்களுக்கென எந்தச் சாதி அடையாளமும் இருக்கக் கூடாது. திமுகதான் உங்கள் சாதி. கட்சித் தொண்டர்கள்தான் உங்கள் சாதிசனம் என்ற எண்ணத்தோடு பணிகளைத் தொடர வேண்டும்" என திமுகவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கி, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கட்டுரை வெளியிட்டுள்ளது.
திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை அமைப்புகள் என அனைத்து நிலைகளிலும் முடிவடைந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட தலைமைக் கட்சி நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு அக்டோபர் 9-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்கவுள்ள நிர்வாகிகள் தங்கள் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும் என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

திமுக தான் உங்கள் சாதி
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், திமுகவில் 15வது உட்கட்சி தேர்தல் மூலம் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கும் வகையில் முரசொலி செல்வம் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், "புதிய பொறுப்புகளை ஏற்பவர்கள் தலைமைக்கு காட்டும் விசுவாசத்தை விட, கடைக்கோடி கழகக் காவலனுக்கு காட்ட வேண்டிய விசுவாசத்தை மனதில் நிறுத்துங்கள். இனி உங்களுக்கென எந்த சாதி அடையாளமும் இருக்கக்கூடாது. தி.மு.கழகம்தான் உங்கள் சாதி. கழகத் தொண்டர்கள் தான் உங்கள் சாதிசனம் என்ற எண்ணத்தோடு உங்கள் பணி தொடர வேண்டும்.

இடுப்பொடித்த தோல்விகளையும்
உங்களில் பலர், முன்பே பொறுப்பில் இருந்தவர்களாக இருக்கலாம். இன்னும் பலர் பொறுப்புக்கு புதியவர்களாக இருக்கலாம். இருந்தவர்களும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் எதிர்கொள்ள வேண்டிய காலம் சோதனைகள் நிறைந்தவை என்பதை நெஞ்சில் நிறுத்துங்கள். நம் இயக்கத்தைப் போன்று பெரும் வெற்றி பெற்ற இயக்கமும் இல்லை. அதல பாதாள தோல்வியைச் சந்தித்த இயக்கமும் இல்லை. ஆனால் நமது இயக்கம் இடுப்பொடித்த தோல்விகளையும் மிடுக்கோடு எதிர்கொண்டு எழுந்து நின்றுள்ளது. இது தனிமனிதச் செல்வாக்கின் துணை கொண்டு வளர்ந்த இயக்கமில்லை. தனித்துவமிக்க இதன் கொள்களே இதனது வலிவு.

உற்ற நண்பர்களாக இருந்தாலும்
குடும்பப் பாச உணர்வோடு எல்லாரையும் அணைத்துச் சென்றாலும் தன்னுடன் உள்ள நெருக்கத்தைத் தவறாகப் பயன்படுத்தி, கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு எதிராகச் செயல்பட நினைத்தவர்கள் உற்ற நண்பர்களாக இருந்தாலும், தனது குடும்பத்தோடு ஒட்டி உறவாடுபவர்களாக இருந்தாலும், அவர்களை உதறித் தள்ளி கழகக் கட்டுப்பாட்டைக் காத்து வருபவர், இன்றைய தலைவர் தளபதி ஸ்டாலின்!

ஒரே பலம்
பொறுப்பேற்க இருக்கும் ஒவ்வொருவரும் மனதில் பதியவைக்க வேண்டியது. எந்தத் தனிமனிதனின் செல்வாக்காலும் வளர்ந்த இயக்கமல்ல தி.மு.க. இதனை துவக்கியவர்கள் மிகமிகச் சாமான்யர்கள். அவர்களிடமிருந்த ஒரே பலம், லட்சிய பலம்தான்! அதன் முன்னணித் தலைவர்கள் யாருக்கும் பின்னணியில் சாதிப்பலம் கிடையாது! இயக்கத்தை வளர்த்து பதவி, பவுசுகளைப் பெறத் துவக்கப்பட்ட இயக்கமுமல்ல இது; இது துவங்கிய காலத்தில் தேர்தல் அரசியலில் ஈடுபடும் எண்ணம்கூட இல்லை.

சாதியோ, மதமோ
இந்த இயக்கத்தால் அன்று ஈர்க்கப்பட்டு இணைந்தவர்கள் அத்தனை பேரும் ஒரு பஞ்சாயத்துத் தலைவராகலாம் என்ற எண்ணம் கூட இல்லாது, அர்ப்பணிப்பு உணர்வு ஒன்றோடுதான் தங்களை இணைத்துக் கொண்டனர்! நமது இயக்க அரசியல் வளர்ச்சி சாதியையோ, மதத்தையோ சேர்ந்தது அல்ல. அதன் கொள்கை அடிப்படையில் அமைந்தது. சாதி, மத அரசியல் நடத்தி நம்மைப் பிரித்து குளிர்காயலாம் என்று கருதும் கூட்டத்திடம் எச்சரிக்கையாக இருப்போம். 'எல்லாருக்கும் எல்லாம்' - எனும் திராவிட மாடல் ஆட்சிக்கு மேலும் வலுச்சேர்க்கும் விதத்தில் உங்கள் பணி அமையட்டும்!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications