"அம்மா" போயி "கலைஞர்" வரப்போகிறார்.. ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு.. ஆச்சரியத்தில் தமிழக மக்கள்.. !
திமுகவின் தேர்தல் அறிக்கை மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது
சென்னை: ஏழைகளின் பசி தீர்க்க 500 இடங்களில் 'கலைஞர் உணவகம்' உருவாக்கப்படும் என்று திமுக தலைவர் சொன்னது, தமிழக மக்களை உற்று உற்று நோக்க வைத்து வருகிறது.. இதற்கு காரணம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி சென்ற ஜெயலலிதா தான்..!
சுட சுட இட்லி, திக்கான சாம்பார், சுத்தமான குடிநீர், கம்மியான விலை என அனைத்து தரப்பு மக்களையும் தன் பக்கம் ஈர்த்ததுதான் அம்மா உணவகம் திட்டம். 'ஏழைகளின் பசி தீர்க்கும் மிகச் சிறந்த திட்டம்' என்ற முழக்கத்துடன் ஆரம்பமானது..
ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண அறிவிப்பு போலவேதான் பார்க்கப்பட்டது.. அடித்தட்டு மக்களின் பசியைப் போக்கவே இந்த திட்டம் என்று ஜெயலலிதா சொன்னபோதுதான், இதன் அர்த்தம் விளங்க ஆரம்பித்தது..!
அம்மா
எத்தனையோ கூலி தொழிலாளர்கள் ஒருவேளையும், அரைவயிற்று சாப்பாட்டுக்கும் கஷ்டப்பட்டு கொண்டிருந்த நேரத்தில், அவர்களுக்கு அருமருந்தாக அமைந்தது இந்த அம்மா உணவகம். இதற்கு பிறகு, வேலை தேடுவோர்கள், ஆட்டோ டிரைவர்கள், கல்லூரி மாணவர்கள், வடமாநில தொழிலாளர்கள் என உழைக்கும் வர்க்கத்தின் அத்தனை பிரிவுகளும் சங்கமித்து ஒன்று சேர்த்த இடம் இந்த அம்மா உணவகமாக மாறி போனது என்பதில் சந்தேகமே இல்லை.
தமிழகம்
இந்த புகழ், பக்கத்து மாநிலங்களுக்கும் வேகமாக பரவியது.. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட முதலமைச்சர்கள் தமிழகம் வந்து அம்மா உணவகம் செயல்பாட்டினை நேரிலேயே கண்டு வியந்து போனார்கள்.. விளைவு, அண்ணா கேண்டீன் என ஆந்திரத்திலும், இந்திரா உணவகம் என பெங்களூரிலும் தொடங்கியது.. அவ்வளவு ஏன், ஜெயலலிதாதான் தன்னுடைய ரோல் மாடல் என்று இப்போது வரை சொல்லி கொண்டிருக்கும் ரோஜா, ஆந்திராவில் அரசியல் செய்ய காரணமாக இருந்து வருவதே இந்த இலவச சாப்பாடுதான்.
கடைசி
ஆனால், எல்லாமே ஜெயலலிதா இருந்ததோடு சரி.. அவர் மறைவுக்கு பிறகு இதன் மவுசு குறைந்தது.. தரம் மங்கியது.. இந்த உணவகத்தை நடத்தி வந்த மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு வேலை இல்லாமல் போனது.. ஜெயலலிதா மறைந்த அன்று தமிழகம் முழுவதும் கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்ட நிராதரவற்ற நிலையிலும் அம்மா உணவகம் இலவசமாக உணவளித்தது நெகிழ்வின் உச்சக்கட்டமாகிபோனது.. அதுவே கடைசியாகியும் போனது.
திட்டம்
இப்போது இதே விஷயத்தைதான் திமுக கையில் எடுத்துள்ளது.. கலைஞர் உணவகம் என்ற பெயரில் ஏழைகளுக்கு சாப்பாடு தரும் திட்டத்தை ஸ்டாலின் இன்று தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார்.. நிச்சயம் இந்த திட்டம் மக்களின் ஏகோபித்த வரவேற்பை திமுகவுக்கு பெற்று தர போகிறது... காரணம், இன்றும் அடித்தட்டு மக்களுக்கு வயிறார சாப்பாடு இல்லை என்பதே நிதர்சனம்.. அதிமுக எத்தனையோ அறிவிப்புகளை இந்த 4 வருடங்களில் செய்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.. ஆனால், இந்த விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
கருணாநிதி
பல இலவச திட்டங்களுக்கு பதிலாக, எடப்பாடியார் அரசு, இந்த அம்மா உணவகத்தை ஏற்று நடத்தி இருந்திருக்கலாம்.. செலவோடு செலவாக இதையும் கவனித்திருக்கலாம்.. மக்களின் மனசிலும் மேலும் இடம் பிடித்திருக்கலாம்.. அம்மாவின் ஆட்சி என்று சொல்லி கொண்டிருக்கும் நிலையில், அம்மாவின் பெயர் கொண்ட உணவகத்தை திறன்பட நடத்தி, அம்மாவின் பெயரையும் நிலைநாட்டி இருக்கலாம். இந்த வாய்ப்பை திமுக இப்போது பயன்படுத்தி கொள்ள கன கச்சிதமாக போகிறது.. கலைஞர் உணவகம் ஏழைகளின் பசியை தீர்க்கும் என்று இப்போதே உறுதியாக சொல்லலாம்..!