அத்தை கனிமொழி.... உதயநிதி ஸ்டாலின் பேச்சால் ஆர்ப்பரித்த திமுக பொதுக்குழு!
சென்னை: திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகளை உறவுமுறை வைத்து அழைத்த சம்பவம், கட்சித் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க.வில் 15-வது முறையாக உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. முதற்கட்டமாக பேரூராட்சி, ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகரம் வரை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.
மாவட்ட செயலாளர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். கட்சி ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

மீண்டும் திமுக தலைவரான ஸ்டாலின்
இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக தொடர்ந்து 2வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து திமுக துணைச் பொதுச் செயலாளர்களாக ஐ.பெரியசாமி, பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் திமுக எம்எல்ஏ-வும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பொதுக்குழு எப்படி நடத்த வேண்டும் என்று உலகத்திற்கே எடுத்துக்காட்டாக பொதுக்குழு கூட்டத்திற்கு தலைமையேற்று தலைவர் நடத்திக் கொண்டிருக்கிறார். வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் என்ற வசனம் எனக்கு நன்றாக பொறுந்தும் என்று தெரிவித்தார்.

அத்தை கனிமொழி
தொடர்ந்து கழக பொதுச்செயலாளர் மாமா துரைமுருகன், கழக பொருளாளர் மாமா டி.ஆர்.பாலு, அண்ணன் கே.என்.நேரு, அண்ணன் ஆ.ராசா என்று பேசிய உதயநிதி ஸ்டாலின், பொதுக்குழு புதிதாக துணைப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள என்னுடைய அத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலினின் தங்கை, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அன்பு மகள் கனிமொழி கருணாநிதி என்று உறவுமுறை சொல்லி அழைத்து அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தது திமுக நிர்வாகிகளை உற்சாகமடைய வைத்தது.

இதுதான் என் பெருமை
இதன்பின்னர், கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் எத்தனையோ பிரச்சார மேடைகளில் பேசி இருக்கிறேன். ஆனால் பொதுக்குழுவில் பேசுவதுதான் பெருமை. கருணாநிதி வழியில் கட்சித் தேர்தலை நடத்தி காட்டியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதுமட்டுமல்லாமல் தலைவராக அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெற்றுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல்
அதேபோல் திமுகவில் ஒரு 19 அணிகள் இருக்கின்றன. அந்த அணிகளுக்கு ஒரு இலக்கினை நிர்ணயிக்க வேண்டும். இளைஞரணிக்கு எப்படி திராவிட மாடல் பயிற்சி பாசறை நடத்த உத்தரவிட்டுள்ளீர்களோ, அதுபோல் அனைத்து அணிகளுக்கும் ஒரு இலக்கு நிர்ணயிக்க வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியை பெறப் போவது உறுதி. உங்களின் ஆணைக்கேற்ப திமுகவின் அனைத்து அணிகளும் பணியாற்ற காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications