துரோகத்தால் தொடங்கியது.. துரோகத்தால் தொடர்கிறது.. அதிமுக பற்றி முரசொலியின் காட்டமான விமர்சனம்!
சென்னை: அதிமுக துரோகத்தால் தொடங்கப்பட்டு, துரோகத்தால் தொடரும் கட்சி என்று யாருக்கும் தெரியாதா? என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளிதழில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழக பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியானது! 7.59 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!! ரிசல்ட் எங்கே பார்க்கலாம்?
கடந்த ஜூன் 23ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் கூச்சல், குழப்பம், சர்ச்சை என பெரும் பரபரப்புடன் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து இதுநாள் வரையில் ஒற்றைத் தலைமை சர்ச்சை முடிந்த பாடில்லை. இதனிடையே அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து முதமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போனார்கள் என்று விமர்சித்திருந்தார். இந்தநிலையில் அதிமுக பொதுக்குழு மற்றும் திமுக சார்பாக நடத்தப்பட்டு வரும் திராவிடப் பயிற்சி பாசறை கூட்டம் குறித்த விமர்சனம் ஆகியவற்றை ஒப்பிட்டு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் விமர்சிக்கப்பட்டு கட்டுரை வெளியாகியுள்ளது.
திராவிடப் பயிற்சி பாசறை
அதில், நம்முடைய அளவுகோல் எப்போதும் உடன்பாடான சக்திகள் என்ன சொல்கிறார்கள் என்பதை விட எதிரிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை வைத்தே அமைய வேண்டும். அதுதான் நமது வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். திராவிட முன்னேற்றக் கழகம் சரியான திசையில்தான் போய்க்கொண்டு இருக்கிறது என்பதை உணர்ந்து நம்மை நாமே பாராட்டிக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
அதிமுக மீது விமர்சனம்
இந்த பாசறைக் கூட்டங்களில் அ.தி.மு.க.வை எதிர்த்துப் பேசுவது இல்லையாம், பா.ஜ.க.வை எதிர்த்தே பேசுகிறார்களாம். ஆர்.எஸ்.எஸ்.சை எதிர்த்தே பேசுகிறார்களாம், சங்பரிவார் அமைப்புகளால் தமிழினத்துக்கு ஆபத்து என்று பேசுகிறார்களாம். முகாமுக்கு வந்தவர்களுக்கு அதிமுக எதிரியா, பாஜக எதிரியா என்ற குழப்பம் வந்ததாம். இதனால் பாஜக வளர்ந்து விடுமாம். திமுக தனது அடிப்படைக் கொள்கைகளைப் பேசத் தொடங்கினால் யாருக்கு எரிகிறது தெரிகிறதா? அதிமுகவை பற்றி பேச வேண்டியதுதானே என்று அறிவுரை சொல்கிறார்கள். அதிமுகவின் ஒ - து.ஓ. ஆகிய இரண்டு அணிகளும் பாஜகவின் தொங்கு சதைகள் என்பது ஊருக்குத் தெரியாதா? 'மோடி சொன்னதால் தான் துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டேன்' என்று பன்னீரே சொல்லிவிட்டாரே!
அதிமுக பற்றி முரசொலி
அ.தி.மு.க. பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அ.தி.மு.க. பொதுக்குழுவே நிராகரிக்கும் அளவுக்கு 2000 அதி புத்திசாலிகள் மட்டுமே கொண்ட கட்சி அது என்பதுதான் ஊருக்கு வெளிச்சம் ஆகிவிட்டதே. துரோகத்தால் - தொடங்கப்பட்டு - துரோகத்தால் தொடரும் கட்சி என்று யாருக்கும் தெரியாதா? இந்தக் கட்சியை வைத்துக் கொண்டு பா.ஜ.க. கொல்லைப்புற கட்சியையும் ஆட்சியையும் நடத்தி வருகிறது என்பது ஊருக்கே தெரியும்.
சித்தாந்த எதிரி பாஜக
இங்கே உணர்த்த வேண்டியது பாஜகவை தான். இவர்கள் திராவிட இயக்கத்தின் சித்தாந்த எதிரிகள். அவர்களை அம்பலப்படுத்துவதில் என்ன தவறு?இன்றைக்கு ஒன்றியத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது பா.ஜ.க. அதன் மீது விமர்சனம் வைப்பது என்ன தவறு? காலம் காலமாக தாங்கள் செலுத்தி வந்த ஆதிக்கத்தை அம்பலப்படுத்துகிறார்கள் என்பதால் எரிகிறதா? பா.ஜ.க. என்பது கோவையிலும் கன்னியா குமரியிலும் தான் செல்வாக்காக இருக்கிறது. ஏன் அவர்கள் வளரவில்லை , வளர முடியவில்லை , ஏன் அவர்கள் வளர முடியாது என்பதற்காக காரணங்களை எழுதி பாஜகவுக்கு பல்லக்குத் தூக்கவும். திமுகவின் காலடியை நோண்ட வரவேண்டாம்!" என்றும் விமர்சித்துள்ளது.