தமிழக அரசை நடத்துவது மோடி... கனிமொழி விமர்சனம்
சென்னை: தமிழக அரசை நடத்துவது எடப்பாடி பழனிசாமி இல்லை என்றும், பிரதமர் மோடிதான் மத்திய அரசோடு சேர்த்து தமிழக அரசையும் நடத்துவதாக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட மூங்கில்பட்டு, பனைபுரம், மதுரப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் இதனைக் கூறினார். மேலும், தற்போது தமிழகத்தில் செயல்படாத அரசு தான் உள்ளதாகவும், அனைத்து துறைகளிலும் ஊழல் மிகுந்துள்ளதாகவும் புகார் தெரிவித்தார். ஆட்சி நன்றாக இருந்தால் தான் முதலீடுகள் வரும், ஆட்சி முறையாக இல்லாத போது எப்படி தமிழகத்திற்கு முதலீடுகள் வரும் என வினவினார்.
மேலும், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது எந்த வெளிநாட்டுக்கும் செல்லாமலேயே முதலீடுகளை தமிழகத்தை நோக்கி வர வைத்தார் என்றும், மாநில வளர்ச்சிப்பணிகளுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை செலவிடாத ஒரே மாநிலம் தமிழகம் தான் எனவும் கனிமொழி கூறினார். மூன்றாயிரத்து 677 கோடி ரூபாய் செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப்போட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள செயல்படாத அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கு அச்சாரமாக, இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும், ஆளுங்கட்சிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என தனது பிரச்சாரத்தில் கனிமொழி கேட்டுக்கொண்டார்.
இதனிடையே கடந்த மே மாதம் நடைபெற்ற 21 தொகுதி இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலின் போது கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. அதேபோல் அண்மையில் நடந்த வேலூர் மக்களவை தேர்தலிலும் கனிமொழி பிரச்சாரம் செய்யாதது குறிப்பிடத்தக்கது. பல மாதங்களுக்கு பிறகு கனிமொழி தனது தொகுதியான தூத்துக்குடியை தாண்டி வெளியிடத்தில் நேற்று பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.