‘ஜால்ரா’ சீண்டிய ஈபிஎஸ்.. உரிமைகளை ஆளுநர் பறிப்பதைத்தான் விரும்புகிறீர்களா? - கனிமொழி விளாசல்!
சென்னை : தமிழக உரிமைகளை பறிக்கும் ஆளுநரின் செயல்பாட்டினைத்தான் விரும்புகிறீர்களா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது குறித்து ஆளுநரிடம் எடுத்துரைத்ததாகத் தெரிவித்தார்.
மேலும், ஆளுநரின் செயல்பாடு நன்றாக உள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

ஆளுநரை பாராட்டிய ஈபிஎஸ்
மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஆளுநரின் செயல்பாடு நன்றாக உள்ளது. ஆளுநரை திமுக விமர்சிப்பது வாடிக்கையான ஒன்று. அவர்களுக்கு ஜால்ரா போட்டால் நல்லவர் என்பார்கள். இப்படி தவறானதை சுட்டிக்காட்டினால் ஆளுநர் மோசம் என்பார்கள். திமுக மீது இவ்வளவு புகார்களைக் கூறியுள்ளேன். இதைத் தட்டிக்கேட்க ஒரு ஆள் வேண்டும் அல்லவா? ஆளுநர்தான் திமுகவை தட்டிக்கேட்க முடியும் எனத் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாட்டில் குழப்பம் விளைவிக்க
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள பரமன்குறிச்சியில் நடைபெற்ற தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியை இந்தியாவே திரும்பி பார்க்கிறது. மத்தியிலுள்ள பாஜக அரசு தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அதில் வெற்றி காண துடிக்கிறது. அதற்கு தமிழக மக்கள் இடம் கொடுக்கக் கூடாது என்றார்.

அதற்காகவே பதவிகள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலினும், மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சனும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார். கட்சிக்காக அவர்கள் ஆற்றிய பணிகளுக்காகவே அந்த பதவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கனிமொழி தெரிவித்தார்.

உரிமைகளை பறிப்பவரை பாராட்டுவதா?
மேலும், தமிழக ஆளூநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துக்கு பதிலளித்த கனிமொழி, அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக உரிமைகள் ஆளுநரிடம் அடகு வைக்கப்பட்டிருந்ததாக விமர்சித்தார். தமிழக உரிமைகளை பறிக்கும் ஆளுநரின் செயல்பாட்டினை அதிமுகவினர் பாராட்டுவதாக குற்றம்சாட்டிய கனிமொழி, தமிழக உரிமைகள் பறிக்கப்படுவதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விரும்புகிறாரா எனக் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications