ஆளுநரை 'ரம்மி ரவி' என்று சொல்லலாமா? தமிழ்நாட்டை தமிழ்நாடுனு தான் சொல்லணும்.. சீறிய திமுக எம்பி!
சென்னை : தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு திமுக கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், திமுக எம்.பி செந்தில் குமார், "ஆளுநர் ரவியை, கவர் ரவி, பிளேடு ரவி, ரம்மி ரவி என்றெல்லாம் எப்படி அழைக்கக் கூடாதோ அதேபோல, தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிடக் கருத்தியலுக்கும், திமுகவின் கொள்கைகளுக்கும் எதிராகப் பேசி வருவது சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. ஆளுநர் ரவியின் பேச்சுகளை திமுகவினர் கண்டித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் இருந்தால் தமிழ்நாடு மட்டும் அதை வேண்டாம் என எதிர்ப்பதாகவும், தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
இதற்கு திமுகவினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் ரவியின் கருத்துக்கு எதிராக 'தமிழ்நாடு வாழ்க' என சமூக வலைதளங்களில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அல்ல தமிழகம்
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "பிரதமர் மோடியின் சிந்தனையால் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதுவும் மிகக்குறுகிய காலத்தில் திட்டமிட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. பாரதத்தின் பகுதியே தமிழகம்." எனப் பேசினார்.

ரம்மி ரவி என அழைக்கலாமா?
ஆளுநர் ரவியின் இந்தக் கருத்து இதுதொடர்பாக தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார் தனது ட்விட்டர் பதிவில்,
"ரவி அவர்களை
கரவி
கவரவி
கவர் ரவி
கவர்ன ரவி
ரவுடி ரவி
பட்டாகத்தி ரவி
பிளேடு ரவி
கஞ்சா ரவி
பான்பராக் ரவி
மாட்டு ரவி
ரம்மி ரவி
என்று எல்லாம் எப்படி அழைக்க கூடாதோ..
அதே போல தான்
நம் மாநிலத்தை
தமிழ்நாடு என்று மட்டும் தான் குறிப்பிட வேண்டும்.
Understand
புரியுதா?" எனத் தெரிவித்துள்ளார்.

திமுக கண்டனம்
முன்னதாக, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆளுநர் பேச்சைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். "தமிழ்நாட்டில் பிரிவினையையும், மோதல்களையும், குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் உள்ளே நுழைந்து நாள்தோறும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் செயல்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் போய்ப் பேச வேண்டியதை, ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு அவர் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது. இவருக்குத் தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக ஆகும் ஆசை இருந்தால், ஆளுநர் பதவியை விட்டுவிட்டு வந்து, இது போன்ற அபத்தங்களைப் பேசட்டும்." என அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் என்றால் ஆளுநக்கு கசப்பு
மேலும், "தமிழ்நாடு வளர்ந்துவிட்டதே என்ற ஆத்திரத்தில் ஆளுநர் இப்படி பேசுகிறாரோ என்ற ஐயமே எழுகிறது. அதனால்தான் திராவிட ஆட்சியின் மீது அவருக்குக் கோபம் வருகிறது. 'திராவிடம்' என்ற சொல்லைப் பார்த்து இவர் வயிறு ஏன் எரிகிறது? தமிழ்நாடு - தமிழன் - தமிழ் என்பவை ஆளுநர் ரவிக்கு கசப்பானவையாக இருக்கின்றன. எனவே இவற்றை விட்டு விலகிச் செல்லும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். ஏற்கனவே தமிழ்நாட்டில் பா.ஜ.கவிற்கு ஒரு மாநில தலைவர் இருப்பதால், தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்துகொண்டு இன்னொரு மாநில பாஜக தலைவராக செயல்பட்டு தமிழர்களுக்கே எதிராக ரவி பேசிக் கொண்டிருக்காமல் அரசியல் சட்டப்படி பணியாற்றுவதே அவருக்கு சிறந்தது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications