தேர்தல் அறிக்கையில் ஸ்பெஷல் அறிவிப்புகள் - இந்துக்களின் ஓட்டுக்களை கவர திமுக திட்டம்
இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக என்ற பிம்பத்தை உடைக்கும் வகையில் தேர்தல் அறிக்கையில் ஸ்பெஷல் அறிவிப்புகளை வெளியிடப்போகிறதாம் திமுக.
சென்னை: சட்டசபை தேர்தலுக்கு படு பரபரப்பாக தயாராகி வருகிறது எதிர்கட்சியான திமுக. தேர்தல் அறிக்கை தயாரிக்க குழுவை நியமித்து வேலையை தொடங்கி வைத்து விட்டது. திமுக என்றாலே இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பிம்பம் உள்ளது. இந்த பிம்பத்தை உடைக்கும் வகையில் தேர்தல் அறிக்கையில் இந்துக்களின் ஓட்டுக்களை கவர நிறைய ஸ்பெஷல் அறிவிப்புகள் வெளியாக உள்ளதாக அறிவாலயம் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபைத் தேர்தல் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும். கொரோனா காலமாக இருந்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளை செய்ய தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. விரைவில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது.
ஆளும் அதிமுக கடந்த சில மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. நலத்திட்ட உதவிகளை வழங்கி தினசரியும் மக்களை சந்தித்து வருகிறார் முதல்வர் பழனிச்சாமி. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் தங்களின் தொகுதிகளை தக்கவைக்க படு பரபரப்பாக பம்பரமாக சுற்றி வருகின்றனர்.
திமுகவின் வியூகம்
2011ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டு காலமாக எதிர்கட்சியாகவே இருக்கும் திமுக இந்த முறையாவது ஆளுங்கட்சியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறது. அதற்காக பல வியூகங்களுடன் களமிறங்குகிறது. முக்கியமாக மக்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கையை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை எப்படி
ஒவ்வொரு தேர்தலின் போதும் தங்களின் தேர்தல் அறிக்கையை ஹீரோ என்று வர்ணிப்பார் மு.க.ஸ்டாலின். திமுக தலைவராக பதவியேற்ற பின்னர் அவர் சந்திக்கும் முதல் சட்டசபைத் தேர்தல் என்பதால் எப்படியும் வென்று ஆளுங்கட்சியாக அமரவேண்டும் என்று பகீரத பிரயத்தனம் செய்து வருகிறார் ஸ்டாலின். இதற்காக பிகே தலைமையில் குழு களமிறங்கியுள்ளது.
ஆன்மீக அரசியல் செய்ய முடிவு
இந்துக்களின் வாக்குகளை அதிக அளவில் கவரவும்,ஆன்மீக தலைவர்களின் ஆசியை பெறவும் முடிவு செய்துள்ள திமுக பல ஸ்பெஷல் அயிட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக சேர்க்கப் போகிறார்களாம். நிறைய கோவில்களை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளார்களாம்.
எல்லாமே இலவசம்
சாமி தரிசனம் செய்ய கட்டணம் இல்லை, இலவச பிரசாதம், கோவில்களில் பணி செய்யும் குருக்கள், பூசாரிகளுக்கும், பஜனை பாடுபவர்களுக்கும் உதவி தொகையை அறிவிக்கப்போகிறார்களாம். பிரபல கோவில்களில் இலவசமாக தங்கும் விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டித்தரப்படும் என்றும் அறிவிக்கப்போகிறார்களாம்.
ஜெயலலிதா ஸ்டைல்
ஜெயலலிதா இருந்த வரைக்கும் பெண்கள், மாணவர்கள், இளைஞர்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கையை தயாரிப்பார். கடந்த தேர்தலின் போது தாலிக்கு தங்கம் அறிவிப்பு அனைவரையும் கவர்ந்தது, பல கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதே பாணியை தற்போது திமுகவும் கையில் எடுக்கப்போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.