23-ம் தேதி பேரணி... கமலுக்கு முறைப்படி நேரில் அழைப்பு விடுத்த திமுக
சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான பேரணியில் பங்கேற்குமாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக முறைப்படி நேரில் அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ம.நீ.ம. தலைமை அலுவலகத்திற்குச் சென்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் கமலை சந்தித்து பேரணிக்கான அழைப்பிதழை அளித்தனர்.
திமுக விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட கமல், ம.நீ.ம. நிச்சயம் கலந்துகொள்ளும் என உறுதியளித்துள்ளார்.
திமுகவின் போராட்டத்தில் முதல் முறையாக கை கோர்க்கும் கமல்ஹாசனின் மநீம!
திமுக அழைப்பு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 23-ம் தேதியன்று (திங்கள்கிழமை) சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது திமுக. அதில் கலந்துகொள்ளுமாறு கூட்டணிக்கட்சிகள் அனைத்துக்கும் அழைப்பு விடுத்த ஸ்டாலின், இப்போது கூட்டணி அல்லாத கட்சியான மக்கள் நீதி மய்யத்திற்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
மகிழ்ச்சி
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யமும் கலந்துகொள்ளும் என கமல்ஹாசன் நேற்றுமாலை அறிவித்தது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. பெருந்தன்மையோடு கமல் இவ்வாறு முடிவெடுத்ததால், அதனை வரவேற்கும் வகையில் ஆர்.எஸ்.பாரதியிடம் முறைப்படி அழைப்பிதழை கொடுத்து அனுப்பினார் ஸ்டாலின்.
வரவேற்பு
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமலை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, ஸ்டாலினின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன், நீங்கள் நிச்சயம் பேரணியில் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்ட நிச்சயம் தனது கட்சி இந்த விவகாரத்தில் திமுகவுக்கு துணை நிற்கும் எனக் கூறியுள்ளார்.
நிர்வாகிகள்
கமலிடம் அழைப்பிதழ் அளிப்பதற்கு முன்பு ம.நீ.ம. நிர்வாகிகள் அருணாச்சலம், உமாதேவி, தங்கவேல் உள்ளிட்டோருடனார்.எஸ்.பாரதியும், பூச்சி முருகன் நடப்பு அரசியல் நிலவரங்கள் பற்றி மனம் விட்டு பேசியுள்ளனர்.