நான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: உதயநிதியை பார்த்து தாம் பொறாமைப் படும் வகையில் அவர் வளரவேண்டும் என்றும், வளர்வார் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளது எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணிக்கு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்த்த சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியத்துக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
234 தொகுதிகளிலும் மொத்தம் 30 லட்சம் இளைஞர்களை புதிதாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சென்னை தெற்கு மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் இளைஞர்கள் திமுக இளைஞரணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதிய உறுப்பினர்கள்
திமுக இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் புதிதாக 30 லட்சம் இளைஞர்களை கட்சியில் இணைக்க நடவடிக்கை மேற்கொண்டார். பல இடங்களுக்கு அவரே நேரடியாக சென்று இளைஞர்கள் இனைப்பு முகாம்களை தொடங்கி வைத்து நிர்வாகிகளுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்தார்.

இலக்கை கடந்து
சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ம.சுப்பிரமணியம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது மாவட்டத்திற்கு கொடுப்பட்டிருந்த இலக்கையும் தாண்டி ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை திமுக இளைஞரணியில் இணைத்தார். இதற்கான அண்ணா அறிவாலய வளாகத்தில் எளிமையான முறையில் ஒரு பாராட்டு விழா நடத்தப்பட்டு நினைவுப்பரிசு அளிக்கப்பட்டது.

ஸ்டாலின் பங்கேற்பு
அந்த விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த தனது தந்தை கருணாநிதி தனக்கு வைத்த அனைத்து போட்டிகளிலும் தாம் வெற்றி பெற்றதாகவும், அதைப் போல் உதயநிதியும் வெற்றிப்பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார். மேலும், தன்னுடைய உழைப்பை பார்த்து பல முறை கருணாநிதி வியந்ததுண்டு எனவும் குறிப்பிட்டார்.

வளர்வார்
மேலும், உதயநிதியை பார்த்து தாம் பொறாமைக் கொள்ளும் வகையில் அவரது செயல்பாடுகள் இருக்கும் என்றும், அவர் அந்தளவுக்கு தன்னை வளர்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications