தீரன் சின்னமலை 265-வது பிறந்தநாள்... மு.க.ஸ்டாலின்... கொங்கு ஈஸ்வரன் மரியாதை
சென்னை: பிரிட்டிஷ் ஆதிக்கத்தை நெஞ்சுரத்தோடு எதிர்த்து போராடிய தீரன் சின்னமலையின் 265-வது பிறந்தநாளை ஒட்டி அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய ஸ்டாலின், அதிகாரம் நிலைத்தால் போதும் என எண்ணாமல் நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி போராடி இன்னுயிர் நீத்த மாவீரன் என புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், தூக்கு கயிறை முத்தமிடும் போதும் லட்சியம் மாறாமல் நின்றவர் தீரன் சின்னமலை என்றும், அவர் பெயரை சொல்லி வீரம் பெறுவோம், அவர் நினைவை போற்றி கொள்கை வெல்வோம் எனக் கூறியுள்ளார் ஸ்டாலின். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அம்பேத்கர் படத்திற்கும் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வைத்து தான் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இன்று தீரன் சின்னமலை படத்தையும் அங்கு வைத்து தான் அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் சென்னை அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தில் தீரன் சின்னமலை படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். ஆண்டுதோறும் சங்ககிரி அருகே உள்ள ஓடாநிலையில் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா கொங்கு மண்டல பகுதி மக்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் வழக்கமான கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு காலத்தில் தலைவர்கள் சிலைகளுக்கும், படத்திற்கும் அரசு சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்துவார்கள் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications