ஆஹா, அதிமுகவில் தம்பிதுரை எப்படி இருக்காரு! எடப்பாடிக்குதான் எதுவும் இல்லை! பாயிண்ட்டை பிடித்த திமுக
சென்னை: "நாடி நரம்புகளில் சமூகநீதி உணர்வு கொண்டவர்தான் தம்பிதுரை. அதனால்தான் 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார். ஆனால் எடப்பாடி அப்படியல்ல" என்று திமுகவின் ராஜீவ்காந்தி விமர்சித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக திமுக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த வழக்கில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடைமுறை குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது.
ஆனால் நீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ள அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைத்துக்கட்சி கூட்டத்தையும் புறக்கணித்துள்ளார். இதனை குறிப்பிட்டு ராஜீவ்காந்தி மேற்குறிப்பிட்டவாறு விமர்சித்துள்ளார்.
மயில் மாவட்டத்தில் செம மழை.. சீர்காழியில் 55 செ.மீட்டரை நெருங்கிய மழை.. வெதர்மேன் அப்டேட்
தீர்ப்பு
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து அதற்கேற்றாற்போல் அரசியலமைப்பு சட்டத்தின் 103வது பிரிவில் திருத்தத்தையும் மேற்கொண்டது. ஆனால் இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதிமுக வரவேற்பு
தீர்ப்பில், 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் அரசின் நடவடிக்கை செல்லும் என்றும் அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என்றும், 2 நீதிபதிகள் செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். பெரும்பான்மை நீதிபதிகள் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளதால் மத்திய அரசின் நடவடிக்கை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படும். ஆனால் இந்த தீர்ப்புக்கு திமுக, விசிக உள்ளிட்டக் கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. மத்திய அரசின் இந்த தீர்மானத்தை ஆதரித்த சிபிஎம், தீர்ப்பில் சில மாற்றங்கள் வேண்டும் என்று வலியுறுத்தியது. அதேபோல பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீர்ப்பை வரவேற்றன. அதிமுகவும் வரவேற்பதாக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
யாசகம் வாங்கவா?
அதிமுகவின் நிலைப்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தி, "உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஏற்பதாக விசித்திரமாக அறிவித்துள்ளது. இந்த சட்டம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதற்கு எதிராக ஆழமான, கடுமையான கருத்துகளை முன்வைத்தவர் அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் மு.தம்பிதுரை. திராவிட இயக்கத்தின் சமூகநீதி உணர்வு நாடி நரம்புகளில் ஏறியதால் இயல்பாகவே கொந்தளித்தார் தம்பிதுரை. இப்போது எடப்பாடி குட்டிக்கரணம், தப்புக்கரணம் போட்டு சரணாகதி அடைவது எதற்காக? தன் சுயநலத்திற்கும் தன் கட்சி பொதுச்செயலாளர் பதவியை மோடியிடம் இருந்து யாசகம் வாங்கவா?" என்று டிவிட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார்.
தம்பிதுரை உரை
தற்போது இந்த ட்வீட் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அப்படி தம்பிதுரை என்னதான் பேசினார் என பலர் கேள்வியெழுப்பி வருகின்றனர். அவர் பேசியதாவது, "நான் சூத்திரன் சமூகத்தை சார்ந்தவன். நாங்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்திருக்கிறோம். இதற்காகதான் திராவிட கட்சிகள் போராடின. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் இருக்கின்றன. பின்னர் எதற்கு 10% இடஒதுக்கீடு? அப்படியெனில் ஏற்கெனவே உள்ள நலத்திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை என்று அர்த்தமா? சட்டமேதை அம்பேத்கர் நிறைய படித்தவர். ஆனால் அவர் சாதியின் காரணமாக பல்வேறு இன்னல்களை சந்தித்தார். எனவேதான் நமது முன்னோர்கள் அரசியலமைப்பை பொருளாதாரத்தின் அடிப்படையில் இல்லாமல், சமூகநீதியின் அடிப்படையில் எழுதினார்கள்.
ரூ.15 லட்சம்
நீங்கள் வேண்டுமானால் இடஒதுக்கீட்டை 70 சதவிகிதமாக அதிகரியுங்கள். தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடு இருக்கிறது. ஆனால் இங்கு இன்னமும் தீண்டாமையும், இரட்டை குவளை முறையும் இருக்கிறது. சாதி இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும். இன்று ஏழையாக இருப்பவர் நாளை பணக்காரராக மாறலாம். அதை எப்படி கணக்கெடுப்பீர்கள்? இந்த சட்டம் ஊழலை அதிகரிக்கும். பிரதமர் மோடி ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 செலுத்துவார் என்று சொல்லியிருந்தாரே. அவ்வாறு செலுத்தியிருந்தால் இந்த இடஒதுக்கீடு கொண்டு வருவதற்கு அவசியமே இருந்திருக்காது." என்று கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.