அதான் களத்தில் கனிமொழி இருக்காங்க.. அப்புறம் எதுக்கு விசிட்? உதயநிதி மீது திமுக சீனியர்கள் அதிருப்தி
சென்னை: சாத்தான்குளம் பிரச்சனையில் லோக்சபா எம்.பி. கனிமொழி முகாமிட்டு பணியாற்றும் நிலையில் திடீரென இளைஞரணி செயலாளர் உதயநிதி அங்கு பயணம் மேற்கொண்டது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் கருணாநிதி இருந்த போதே மகள் கனிமொழி ராஜ்யசபா எம்.பி.யாக்கப்பட்டார். ஆனாலும் டெல்லி பணிகளுடன் ஒதுங்கிக் கொண்டவராக இருந்தார் கனிமொழி. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறைவாசமும் அனுபவித்தார்.
கனிமொழி எம்பி
பின்னர் திமுகவின் மகளிரணி செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். தூத்துக்குடி லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யுமானார் கனிமொழி. அத்துடன் நிற்காமல் தூத்துக்குடியில் பிரச்சனை எது என்றாலும் முதல் நபராக அங்கே போய் களத்தில் நிற்கிறார் கனிமொழி.
களத்தில் நின்ற கனிமொழி
சாத்தான்குளத்தில் போலீசார் தாக்குதலில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பத்தில் நீதிக்காக போராடியவர் கனிமொழி. அடுத்தடுத்த நடவடிக்கைகள் மூலம் கனிமொழியின் செயல்பாடுகள் திமுகவின் மத்தியில் பெரும் மதிப்பையும் பெற்றிருந்தன. இதனால் இப்படி கொரோனாவைப் பற்றி கவலைப்படமால் கனிமொழி பயணம் மேற்கொள்கிறாரே என்கிற ஆதங்கத்தை கடிதம் வழியாகவும் திமுக நலம் விரும்பிகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
சாத்தான்குளத்தில் உதயநிதி
இந்த நிலையில் திடீரென சாத்தான்குளத்துக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி சென்று பாதிக்கப்பட்டோர் குடும்பத்தை பார்த்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார். இப்போது திமுகவினர் , உதயநிதியின் சாத்தான்குளம் பயணத்தை சிலாகித்துக் கொண்டிருக்கின்றனர். இது அப்பட்டமாக கனிமொழியை கடுப்பேற்றும் நடவடிக்கைதான் என அதிருப்தியை காட்டுகின்றனர் திமுக சீனியர்கள்.
சீனியர்கள் அதிருப்தி
ஒவ்வொரு முறையும் திமுகவில் கனிமொழி ஸ்கோர் செய்யும் போதெல்லாம் உதயநிதி தலையிடுவதும் அது திசை மாறுவதும் வாடிக்கை என்கின்றனர் திமுக சீனியர்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போதும் சரி, தேர்தல் பிரசாரத்தின் போதும் சரி.. கனிமொழிக்கு இமேஜ் கூடுகிறது என்றால் உடனே உதயநிதியை ஒரு லாபி இறக்கிவிட்டு ஆட்டையை கலைப்பதையே வாடிக்கையாகவும் வைத்திருக்கிறார்கள் என்கின்றனர்.