திமுக மா.செ.க்கள் தேர்தல்.. கோலோச்சும் குறுநில மன்னர்கள் மாற்றப்படுவார்களா? பெரும் எதிர்பார்ப்பு!
சென்னை: திமுகவில் மாவட்ட செயலாளர்கள் தேர்தல் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவைப் பொறுத்தவரையில் 25, 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட செயலாளர்கள் பெரிய அளவில் மாற்றப்படாத நிலையில் இம்முறை மாற்றங்கள் இருக்கும் என்பது அக்கட்சியினரின் பெரும் நம்பிக்கை.
திமுகவில் மாவட்ட செயலாளர் பதவி என்பது மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இணையானது என்கிற பேச்சுவழக்கு உண்டு. திமுகவில் மாவட்ட செயலாளர் பதவி என்பது மாநில நிர்வாகிகளுக்கு இணையானதாகவும் பார்க்கப்படுகிறது.
பாஜக ஸ்கெட்ச் எம்.எல்.ஏவுக்கு இல்ல.. அமைச்சருக்காம்.. 'இதான் சங்கதி’- புட்டுப்புட்டு வைக்கும் திமுக!
30 ஆண்டுகளாக மா.செ.க்கள்
திமுகவைப் பொறுத்தவரையில் கருணாநிதி காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள்தான் சுமார் 30 ஆண்டுகளாக தொடர்ந்து அப்பதவியிலேயே இருந்து வருகின்றனர். இந்த மாவட்ட செயலாளர்களில் பலரும் அமைச்சர்களாகவும் இருக்கின்றனர். கிட்டத்தட்ட திமுகவின் குறுநில மன்னர்களாகவே இந்த மா.செ.க்கள் இத்தனை ஆண்டுகாலம் இருந்து வந்துள்ளனர்.
மா.செ.க்கள் ஆதிக்கம்
திமுகவில் மாவட்ட செயலாளர்களை தாண்டி வேறு ஒருவரது வளர்ச்சி என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாது. மாவட்ட செயலாளர் விருப்பம் இல்லாத ஒருவர் தேர்தலில் சீட் வாங்கவும் முடியாது; அப்படி வாங்கினாலும் வெல்லவும் முடியாது. இதுதான் ஏற்க முடிகிறதோ இல்லையோ கள யதார்த்தம்.
மா.செ.க்கள் தேர்தல்
இந்நிலையில்தான் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் பதவிகளுக்கான தேர்தலை அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.வரும் 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலைப் பொறுத்தவரை திமுக தரப்பில் நாம் விசாரித்த போது, சீனியர்கள் சிலர் இம்முறை மாற்றப்பட உள்ளனர். திமுக இளைஞரணியில் இருந்து சிலர் மாவட்ட செயலாளர்கள் பதவிகளுக்கு புரமோசன் ஆக இருக்கின்றனர் என்கின்றனர். இதற்கு ஏற்பத்தான் மாவட்ட அமைப்பு முறைகளிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளனராம். இதனால் 15 புதுமுகங்கள் உறுதியாக மா.செ.க்களாக வருவர்.
என்ன செய்யப் போகிறார்கள் மா.செ.க்கள்?
அப்படி சீனியர் மா.செ.க்கள் மாற்றப்படும் போது, எதிர்வரும் லோக்சபா தேர்தல் உள்ளிட்டவைகளில் அவர்களது ஒத்துழைப்பு குறித்த கேள்வி எழாமல் இல்லை. திமுக ஆட்சியில் இருக்கும் நிலையில் மா.செ.க்கள் தங்களை மாற்றுவதை எப்படி எளிதாக எடுத்துக் கொள்வார்கள்? என்கிற இன்னொரு கேள்வியும் எழுகிறது. ஆகையால் அமைச்சர் பதவியில் இருப்பவர்களில் சிலரது மா.செ.க்கள் பதவிகளை மட்டும் பறித்து அங்கு புதுமுகங்களை கொண்டு வருவது என்கிற யுக்தியை கையில் எடுக்கிறதாம் திமுக தலைமை. இதில் எழும் சலசலப்புகளைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறதாம் அறிவாலயம்.