முத்துச்சாமி, சாமிநாதனுக்கு "வெயிட்"டான துறை?.. 2026-இல் கொங்கு மண்டலத்தை அள்ள ஸ்டாலின் ஸ்கெட்ச்!
சென்னை: கொங்கு மண்டலத்தை தங்கள் கோட்டையாக்க அம்மண்டலத்தைச் சேர்ந்த வெள்ளக்கோயில் சாமிநாதன், ஈரோடு முத்துசாமி, கரூர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு முக்கிய துறைகளை ஒதுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றியடைந்த 75 தொகுதிகளில் 44 தொகுதிகள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவையாகும். அதாவது இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு கவுரவமான சீட்டுகளை பெற்று தந்ததே இந்த மண்டலங்கள் என சொல்லலாம்.
கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 10 மேற்கு மாவட்டங்கள்தான் கொங்கு மண்டலங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த கொங்கு மண்டலத்தில் மொத்தம் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
சொன்னார், சொன்னபடி தரமான சம்பவம் செய்தார்.. சபாஷ் வாங்கிய செந்தில் பாலாஜி..காத்திருக்கிறது சிறப்பு!
24 தொகுதிகள்
இந்த 68-இல் 44 தொகுதிகளை அதிமுக கூட்டணியும் 24 தொகுதிகளையும் அதிமுக கூட்டணியும் கைப்பற்றியது. எம்ஜிஆர் காலம் தொட்டே கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என அழைக்கப்பட்டு வந்தது. இங்கு அதிமுகவின் பலமான வாக்கு வங்கியும் இருந்தது. அது போல் ஜெயலலிதாவும் கொங்கு மண்டலத்தை பாதுகாத்து வைத்திருந்தார்.
கட்சியில் முக்கியத்துவம்
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆட்சியிலும் கட்சியிலும் முக்கியத்துவம் கொடுத்து வந்தார். எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, தங்கமணி போன்றோருக்கு அதிமுக ஆட்சியில் முக்கிய இலாக்காக்களை பெற்றனர். அது போல் கட்சியிலும் நல்ல பதவிகளை பெற்றனர். அது போல் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியும் அந்த மண்டல வளர்ச்சிக்கு பல நல்ல திட்டங்களை முன்னெடுத்தார். இதன் மூலம் கொங்கு மண்டலத்தினரின் ஆதரவு அதிமுகவின் பக்கம் இருந்தது.
கொங்கு பெல்ட்
இதனால் இந்த முறை திமுக எவ்வளவு கவனம் செலுத்தியும் கொங்கு பெல்டில் வெறும் 24 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. இந்த தேர்தலில் சென்னை மண்டலத்தில் மொத்த இடங்களையும் திமுக வாரி சுருட்டியது போல் வரும் 2026ஆம் ஆண்டு கொங்கு மண்டல மக்களின் ஆதரவை பெற என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
ஜெயலலிதா
இதற்கு எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வழியை திமுக பின்பற்ற வேண்டும். தற்போது வெற்றி பெற்றுள்ள எம்எல்ஏக்களில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு நல்ல இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொங்கு மண்டலத்தை சேர்ந்த வெள்ளக்கோவில் சாமிநாதன், ஈரோடு முத்துச்சாமி, கரூர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு முக்கிய இலாக்காக்களை ஸ்டாலின் ஒதுக்கி அழகு பார்த்தால் வரும் 2026 இல் கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டையாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.
வெள்ளக்கோவில்
நேற்றைய தினம் வெளியாகியுள்ள உத்தேச அமைச்சரவை பட்டியலில் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு வனத்துறையும் முத்துச்சாமிக்கு வேளாண் துறையும், செந்தில் பாலாஜிக்கு உள்ளாட்சித் துறையும் ஒதுக்கீடு செய்யப்படலாம் என அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த துறைகளே நல்ல துறைகள்தான். எனினும் இதே இலாகாக்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படுமா இல்லை இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த இலாகாக்கள் கிடைக்குமா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பில்தான் தெரியவரும்.