காங்கிரஸ் இல்லைனா.. திமுக எல்லா தொகுதிகளிலும் தோற்கும்! பற்ற வைத்த தமிழ்நாடு காங். நிர்வாகி!
பெரம்பலூர்: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடக் காங்கிரஸ் தயாராக இருப்பதாக பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.வி.ஜே.சுரேஷ் கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் திமுக எல்லாத் தொகுதிகளிலும் தோல்வி அடையும் என்றும் அவர் கூறியுள்ளது கூட்டணியில் விரிசல் கிளப்புவதாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் இப்போது சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது திமுக காங்கிரஸ் கூட்டணி உறவில் சின்ன விரிசல் ஏற்பட்டுள்ளது போலத் தெரிகிறது. அதாவது முதலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூர் நகரக் காங்கிரஸ் மகளிர் அணித் தலைவராக இருந்த கவிதா, திமுகவில் இணைந்தார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி முன்னிலையில் கவிதா தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டிருந்தார். இது தொடர்பான போஸ்ட்டையும் செந்தில் பாலாஜி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்தார். இதுவே சர்ச்சைக்குக் காரணமாக இருந்தது. செந்தில் பாலாஜி போஸ்ட் காங்கிரஸ் கட்சியினருக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக இருந்தது. பலரும் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக கரூர் எம்பி ஜோதிமணி, காங்கிரஸை செந்தில் பாலாஜி அவமானப்படுத்தியிருப்பதாகவும் இதை எளிதில் கடந்து போக முடியாது என்றும் கூறியிருந்தார்.
இதற்கிடையே பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.வி.ஜே.சுரேஷும் கூறியுள்ள சில காட்டமான கருத்துகளைக் கூறியிருக்கிறார்.. அதாவது திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் பல்வேறு தொகுதிகளிலும் திமுக தோல்வியைத் தழுவும் என அவர் கூறியுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் எந்தளவுக்கு வளர்ந்துள்ளது என்பதைக் காட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடத் தனியாக இருப்பதாகவும் இதன் மூலம் தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வர முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் நிர்வாகி
ஏற்கனவே இந்த விவகாரத்தில் கரூர் எம்பி ஜோதிமணி நேரடியாகவே செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்திருந்தார். காங்கிரஸ் கட்சியினரின் கடும் எதிர்ப்பு காரணமாக ஏற்கனவே செந்தில் பாலாஜி அந்த போஸ்ட்டை நீக்கிவிட்டார். இந்தச் சூழலில் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.வி.ஜே.சுரேஷ்யின் இந்தப் பேட்டி கவனம் ஈர்த்துள்ளது.
தனித்துப் போட்டியிடுவோம்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் மட்டும் கூட்டணியில் இருந்து விலகினால் திமுக எல்லாத் தொகுதிகளிலும் தோல்வி அடையும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் நல்ல நிலையில் வளர்ந்துள்ளது.. காங்கிரஸ் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இதை நிரூபிக்கத் தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளிலும் போட்டியிட நாங்கள் ரெடியாக இருக்கிறோம். அப்போது தான் காங்கிரஸ் பலம் புரியும்.
காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் தான் தமிழ்நாட்டின் மீண்டும் காமராஜர் ஆட்சி நடக்கும். காமராஜர் கொடுத்த நல்லாட்சி மீண்டும் அமையும். இதற்காகத் தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றால்.. அதற்கும் தயாராகவே இருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
கூட்டணி ஆட்சி?
இது மட்டுமின்றி, தமிழ்நாட்டில் இப்போது நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் கூட்டணி ஆட்சி என்ற குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன. காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கூட்டணி ஆட்சி தேவை என்றும் பேச ஆரம்பித்துள்ளன. இவை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது வரும் காலத்தில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நடக்க வாய்ப்புகள் அதிகம்.












Click it and Unblock the Notifications