பொங்கல் ஸ்பெஷல் ரெசிபி: கலவை குழம்பை மண் பானையில் சமைத்து.. பூசணி இலையில் சாப்பிட்டால்.. வேற லெவல்
சென்னை: தமிழர் திருநாளாம், பொங்கல் பண்டிகை அன்று பெரும்பாலும் எல்லார் வீட்டிலும் செய்யப்படும் உணவு கலவை குழம்பு ஆகும். இதை குறித்த செய்முறை விளக்கத்தை இங்கு பார்ப்போம்.
பொங்கல் பண்டிகை தைத்திருநாள், தமிழர் திருநாள் என பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. தை மாதம் பிறக்கும் நாள்தான் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி தை பொங்கல் கொண்டாடப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப இந்த தை மாதம் மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் நிறைய விழாக்கள் நடத்தப்படுகின்றன.
பொங்கல் பண்டிகை- போகி, தை பொங்கல், மாட்டு பொங்கல் ,காணும் பொங்கல் என 4 வகைப்படும். இதில் போகி மார்கழி மாதம் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. பழையன கழிதல் புதியன புகுதல் என்ற பழமொழிக்கேற்ப போகி மேளத்தை சிறுவர்கள் அடித்து நெருப்பு மூட்டி அதில் பழைய பொருட்களை எரித்து குளிர்காய்வார்கள்.

அதிகாலை எழுதல்
தை பொங்கல் பண்டிகை அன்று அதிகாலையில் எழுந்து வீடு வாசல்களை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் பொங்கல் பண்டிகைக்கான உணவு பொருட்களை சமைக்க வேண்டும். இதை சூரிய பகவானுக்கு படையலிட வேண்டும். ஆண்டுதோறும் தானியங்கள் உற்பத்தி தங்கு தடையின்றி கிடைப்பதால் விளைந்த பொருட்களை சூரியனுக்கு படைத்து கொண்டாடுவர்.

முக்கிய உணவு
அந்த வகையில் உணவு வகையில் முக்கியமாக இடம் பெறுவது சர்க்கரை பொங்கல், பச்சரிசி பொங்கல், கலவை குழம்பு, வெந்தயக் கீரை மசியல் ஆகும். இந்த உணவு வகைகளை ஒவ்வொருவரின் பாரம்பரியத்திற்கேற்ப மாறுபடும். அந்த வகையில் கலவை குழம்பை எப்படி செய்வது என பார்க்கலாம். கலவை என்றாலே எல்லாம் கலந்தததுதான். தை மாதத்தையொட்டி நிறைய காய்கறிகளும் தானியங்களும் உற்பத்தி செய்யப்படும் என்பதால் அவற்றை சமைத்து சூரியனுக்கு படைக்க வேண்டும். அந்த வகையில் கலவை குழம்பை எப்படி செய்வது என பார்க்கலாம்.

கலவை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
வெங்காயம்- 4
தக்காளி- 5
இஞ்சி- பூண்டு பேஸ்ட்- 2 டீஸ்பூன்
உருளை கிழங்கு - 250 கிராம்
கருணைக் கிழங்கு- 150 கிராம்
சர்க்கரை வள்ளிக் கிழங்கு- 100 கிராம்
கேரட் பீன்ஸ் - தலா 300 கிராம்
அவரைக்காய் - 250 கிராம்
கத்தரிக்காய்- 150 கிராம்
முருங்கைகாய் -2 எண்ணிக்கை
மஞ்சள் பூசணிக்காய்- ஒரு பெரிய பத்தை
பச்சை மொச்சைக்காய் உரித்தது - 500 கிலோ
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
மிளகாய் தூள்- 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சம் பழம்- அரை மூடி
புதினா, கொத்தமல்லி- சிறிதளவு
கடலை பருப்பு- 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2

தாளிக்க தேவையானவை
கடுகு - ஒன்றரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் அல்லது சூரிய காந்தி எண்ணெய் தேவைக்கேற்ப
பெருங்காயம் - சிறிதளவு
கருவேப்பிலை - அரை கைப்படி

செய்முறை விளக்கம்
மேற்கண்ட காய்கறிகளில் தோல் சீவ வேண்டியவற்றை தோல் சீவிவிட்டு சதுரமாக வெட்டிக் கொள்ள வேண்டும். மஞ்சள் பூசணிக்காய் குழைந்து விடும் என்பதால் சற்று பெரிய துண்டுகளாக நறுக்க வேண்டும். முதலில் அகன்ற மண்சட்டியில் எண்ணெய் விட்டு அதில் கடலை பருப்பையும் காய்ந்த மிளகாயையும் போட்டு பொரிந்தவுடன் நீளவாக்கில் நறுத்திய வெங்காயத்தை வதக்க வேண்டும். அதன்பின்னர் தக்காளியை போட்டு வதக்கவும். இவை இரண்டும் நன்றாக வதங்கியதும் ஆற வைத்து மிக்ஸியில் வைத்து அரைத்து கொள்ள வேண்டும்.

அம்மிக்கல்
ஆட்டுக் கல், அம்மி இருந்து அதில் அரைத்தால் சுவையாக இருக்கும். பின்னர் அதே மண் சட்டியில் குழம்புக்கு தேவையான எண்ணெய்யை விட்டு அது காய்ந்ததும், அரைத்த விழுதை போட்டு வதக்கவும். ஏற்கெனவே வதக்கி அரைத்தவை என்பதால் நீண்ட நேரம் வதக்க தேவையில்லை. பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட வேண்டும். அதன் பச்சை வாடை போனதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

கிழங்கு வகைகள்
பின்னர் முதலில் கடினமான கிழங்கு வகைகளை போட்டு வதக்கவும். அது சற்று எண்ணெயில் வதங்கியதும் மற்ற காய்கறிகளையும் மொச்சை பயிறையும் போட்டு வதக்கி தேவையான அளவுக்கு தண்ணீர் விட வேண்டும். காய்கறிகள் அனைத்து வெந்தவுடன் கடையில் வெட்டி வைத்த மஞ்சள் பூசணிக்காயை போட வேண்டும். இது சில நிமிடங்களில் வெந்து விடும். எல்லா காய்கறிகளும் வெந்ததும் குழம்பின் திக்னெஸ் பார்த்துவிட்டு அதில் புதினா, மல்லித் தழை தூவி இறக்கவும். பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து அதில் பெருங்காயம் போட்டு அது பொரிந்ததும் கருவேப்பில்லை போட வேண்டும். இந்த தாளிப்பை எடுத்து குழம்பில் கொட்டி அதன் மேல் எலுமிச்சை சாறு பிழிந்து மூடிவிட வேண்டும். உடனே கலக்க கூடாது. படைக்கும் போது குழம்பை கிளறிவிட வேண்டும். அனைத்து காய்கறிகளையும் சேர்ப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். குழந்தைகளுக்கும் சத்தான உணவை கொடுத்தோம் என்ற திருப்தியும் ஏற்படும்.

மண் பாத்திரம்
தினந்தோறும் நான்ஸ்டிக் பாத்திரத்திலும் அலுமினிய பாத்திரத்திலும் சமைத்து வருகிறோம். பொங்கல் பண்டிகை அன்றாவது மண் சட்டிகளை பயன்படுத்தி சமையல் செய்து பாருங்கள். சுவை அதிகமாக இருக்கும், உடலுக்கும் நன்மை பயக்கும். இந்த உணவை பெரிய பூசணி இலையில் (கழுவிவிட்டு) வைத்து சூரிய பகவானுக்கு படைத்து அந்த இலையிலேயே சாப்பிட வேண்டும். பூசணி இலை கிடைக்காதவர்கள் வாழை இலையை பயன்படுத்தலாம். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்!












Click it and Unblock the Notifications