சென்ட்ரலில் ஆவி பிடித்தல் நல்ல முயற்சிதான்.. ஆனால் அபாயங்கள் அதிகமாச்சே.. மருத்துவர்கள் விளக்கம்!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட ஆவி பிடிக்கும் திட்டத்தால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசும், அரசு அதிகாரிகளும், தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், என்ஜிஓக்கள் என தங்களால் இயன்றதை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று பெரிதும் பேசப்படுவது பேஷியல் ஸ்டீம். அதாவது ஆவி பிடித்தல், வேது பிடித்தல். இதில் துளசி, மஞ்சள், கற்பூரவல்லி, நீலகிரி தைலம், நொச்சி இலை உள்ளிட்ட மூலிகைகளை கலந்து ஆவிபிடித்தால் சுவாச பாதை சீராகும் என்கிறார்கள்.
இந்த நல்லெண்ணத்தில் நேற்றைய தினம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் 10 பேர் ஆவி பிடிக்கும் புதிய முயற்சி கொண்டு வரப்பட்டது. இதை ரயில்வே பாதுகாப்பு படையினர் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. ரயிலில் இருந்து வரும் பயணிகள் நேராக வந்து இந்த ஆவி பிடித்தலை செய்துவிட்டு பின்னர் வீடு திரும்புகிறார்கள்.
இதன் மூலம் அவர்களின் வாய், தொண்டையில் இருக்கும் கொரேனா வைரஸ் கிருமிகள் அழியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நல்லதொரு முயற்சியாக கொண்டு வரப்பட்ட திட்டம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது ஒரே நேரத்தில் 10 பேர் ஆவி பிடிக்கும் போது அதில் யாராவது ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருந்தால் மற்ற அனைவருக்கும் பரவுமே என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவர்கள் சிலரிடம் கேட்ட போது, மக்கள் அதிகம் கூடும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இது போல் ஆவி பிடித்தல் முயற்சியை கொண்டு வந்தது பாராட்டுதலுக்குரிய விஷயமாகும். ஆனால் அதே வேளையில் இப்படி ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் ஆவி பிடித்தால் சிக்கலாகும்.
வீடுகளில் தனித்தனியே ஆவி பிடிப்பது வேறு, இப்படி மொத்தமாக ஆவி பிடிப்பது வேறு. இவ்வாறு ஒரு 10 பேர் ஆவி பிடித்த பிறகு அந்த கருவிகள் கட்டாயம் சுத்தப்படுத்த வேண்டியது அவசியமாகும். ஒரு வேளை ஆவி பிடிப்பவரின் வியர்வை துளியோ வாயை திறக்கும் போது அதிலிருந்து எச்சிலோ அந்த கருவியில் விழுந்திருந்தால் அது மற்றவர்களுக்கு அபாயத்தை தரும் என்கிறார்கள்.
ஆவி பிடிக்கும் முயற்சி நல்ல முயற்சிதான். ஆனால் 6 அடி தூரமாவது சமூக இடைவெளி அவசியம். ஆவி பிடிக்கும் கருவிகள் ஒவ்வொரு பயன்பாட்டுக்கு பிறகும் சுத்தப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ஆவி பிடிக்கும் முயற்சியில் இது போன்ற பாதுகாப்பு அம்சங்களை புகுத்த வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications