2 புள்ளியை வச்சே கோலம் போட்ட ஓபிஎஸ் டீம்! அந்த பணம் எடப்பாடி கொடுத்தது தானாம்! ஆஹா! அப்படியா சங்கதி?
சென்னை : எடப்பாடி பழனிசாமியை விட்டு பெரும்பாலான நிர்வாகிகள் விலகத் தயாராகிவிட்டனர். அதைத் தடுப்பதற்காகவே அவசர அவசரமாக ஆலோசனை கூட்டத்தை கூட்டி எடப்பாடி பழனிசாமி பணப் பட்டுவாடா செய்தார். அப்படி கொடுக்கப்பட்ட பணத்தில்தான் ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்டதாக கூறப்படுகிறது எனக் கூறி பகீர் கிளப்பி இருக்கிறார் ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ்.
கடந்த டிசம்பர் 21ஆம் தேதி ஓபிஎஸ் அணியினர் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து 27ஆம் தேதி ஈபிஎஸ் அணியினர் மா.செக்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரு தரப்பினரும் போட்டி போட்டு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக, ஓபிஎஸ் தரப்பு மா.செக்கள் கூட்டம் நடத்தி எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த நிலையில், ஈபிஎஸ் தரப்பு கூட்டத்தை நடத்தியது.

அவசர அவசரமாக
வரும் ஜனவரி 4ஆம் தேதி அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் இரு தரப்பும் அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் தரப்பு நடத்திய கூட்டத்திற்கு போட்டியாகவே எடப்பாடி தரப்பும் முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்ததாகக் கூறப்படுகிறது. ஓபிஎஸ் தரப்பினர் இன்னொரு குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர். ஈபிஎஸ் அணியில் இருந்து பலரும் ஓபிஎஸ் அணிக்கு தாவ தயாராவதை அறிந்தே ஈபிஎஸ் அனைவரையும் அழைத்துப் பேசியுள்ளார் என்று கூறி வருகின்றனர்.

மா.செக்கள் கூட்டம்
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதியன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி, எல்.எல்.ஏக்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்காக தமிழக முழுவதுமிருந்தும் கட்சி நிர்வாகிகள் திரளாக வருகை தந்திருந்தனர். ஓவ்வொரு மாவட்டச் செயலாளர்களும், தங்களது ஆதரவாளர்களையும் சென்னைக்கு அழைத்து வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் அதிமுக தலைமை அலுவலகம் முன்பு திரண்டு நின்றதால், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் அலுவலகத்திற்குள் நுழைவதே பெரும்பாடாகிவிட்டது.

ஈபிஎஸ் ஆதரவு நிர்வாகியின் பணம் திருட்டு
இந்தக் கூட்டத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமியை வழிநெடுக அதிமுக தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாகமாக வரவேற்றனர். கூட்ட நெரிசலில் இடித்துப் பிடித்துத்தான் உள்ளே வந்து சேர்ந்தனர். இந்நிலையில், அதிமுக தலைமைக் கழகத்திற்கு வந்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தென்காசி தெற்கு ஒன்றிய துணை செயலாளர் உச்சிமாகாளி என்பவரிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் திருடப்பட்டது. இந்த திருட்டு தொடர்பாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதிமுக தலைமை அலுவகத்திலேயே நடந்த இந்த திருட்டு சம்பவம், அக்கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த 1 லட்சம் திருட்டு போனது பற்றி ஓபிஎஸ் அணியினர் ஒரு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

ஓபிஎஸ் ஆதரவாளர்
இதுபற்றிப் பேசிய ஓ.பன்னீர்செல்வம் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ், "அதிமுக தலைமை கழகத்தில் கூட்டம் கூட்டியதற்காக எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் அல்ல. எடப்பாடி இல்லாத அதிமுகவை கட்டமைக்க ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முயற்சி பலன் அளித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை விட்டு பலர் விலகும் முடிவை தடுக்கவே மாவட்ட செயலாளர் கூட்டம் நடத்தப்பட்டது. ஓபிஎஸ்ஸின் நிலைப்பாடுதான் நியாயமானது என தொண்டர்கள் அறிந்துள்ளனர். அதிமுக பிளவால் திமுக தேர்தல்களில் வெல்லும் என்பது தான் வரலாறு சொல்லும் பாடம். எடப்பாடி பழனிசாமியால் அதிமுக தலைமை கழகம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அதிமுக தலைமைக் கழகத்தை சட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்போம். " எனத் தெரிவித்தார்.

பணப் பட்டுவாடா
மேலும், ஓ.பன்னீர்செல்வம் ஒற்றுமைக்கு குரல் கொடுத்தார். மனசாட்சி உள்ள தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் ஒரு மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ஒரு மெளன புரட்சி தொடங்கியுள்ளது. கடைக்கோடி தொண்டர்களும் ஓபிஎஸ்ஸின் நிலைப்பாடுதான் நியாயமானது என ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இதனால் பலரும் எடப்பாடி பழனிசாமியை விட்டு விலகுவதற்கான சூழல் உருவாகி வருகிறது. இதற்காகவே அவசர அவசரமாக கூட்டத்தை கூட்டி எடப்பாடி பழனிசாமி பணப் பட்டுவாடா செய்தார். அப்படி கொடுக்கப்பட்ட பணத்தில்தான் ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது என மருது அழகுராஜ் கூறியுள்ளார்.

அதிர்ச்சி
எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின்போது நிர்வாகியிடம் இருந்து ரூ. 1 லட்சம் பணம் திருடப்பட்டது சலசலப்புகளை ஏற்படுத்திய நிலையில், அவர் எதற்கு கூட்டம் நடைபெறும்போது 1 லட்சம் ரூபாயை கையில் வைத்திருந்தார் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. இந்நிலையில், அந்தப் புள்ளிகளை கனெக்ட் செய்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு நிர்வாகிகளுக்கு பட்டுவாடா செய்த பணம் தான் திருடப்பட்டு விட்டது என கொளுத்திப் போட்டுள்ளது ஓபிஎஸ் தரப்பு. இது எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு பெரிய ஷாக் கொடுத்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications