கர்நாடகாவில் நடப்பது அருவருப்பு.. தமிழகத்தில் அது நடக்காதுனு நம்புவோம்.. டாக்டர் பரூர் அப்துல்லா
சிவகங்கை: இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணியலாம் என அரசியலமைப்பு சட்டமே சொல்லியிருக்கும் போது அதை தடுக்க நாம் யார் என சிவகங்கை அரசு பொது மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பதிவில் கூறுகையில் ஹிஜாப் உரிமை குறித்தும் அதை நம் நாட்டில் பிறந்த மாற்று சமய சகோதரர்களில் சிலர் எதிர்ப்பதும் அதனால் பல சச்சரவுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இதில் முதலில் அரசியல் சட்டம் என்ன கூறுகிறது?
நமது நாட்டில் பிறரின் சுதந்திரத்திற்கு பாதகம் ஏற்படாதவாறு அவரவர் சமய நம்பிக்கைகளை கடைபிடிக்க சட்ட உரிமை உண்டு. பிறப்பால் இந்துவோ, இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ, சீக்கியரோ, ஜைனரோ அவரவர் சமய நம்பிக்கைகளை பிற சமயத்தாருக்கும் பொது சமூகத்துக்கும் ஊறு விளைவிக்காமல் கடைபிடித்துக் கொள்ள நம் சட்டம் உரிமை வழங்கியுள்ளது.

பருவ வயதை எட்டிய பெண்கள்
இந்த வகையில் இஸ்லாமிய சமயத்தில் பருவ வயதை எட்டிய பெண்கள் ஹிஜாப் எனும் கண்ணியமான உடையை அணிந்து கொள்வர். ஹிஜாப் என்பது கண்ணியமான உடை எனும் பொருளில் எடுத்துக் கொள்ளலாம். தளர்வான ஆடையை ஹிஜாப் என்று கொள்ளலாம். தலையைச் சுற்றி முக்காடு போன்று அணிந்து உடலை தளர்வான ஆடை கொண்டு மறைப்பது "ஹிஜாப்" ஆகும். இது இஸ்லாம் சமயத்தை கடைபிடிக்கும் பெண்களுக்கு அந்த சமயம் எடுத்துக் கூறும் வழிகாட்டுதல் ஆகும். இதில் நிகாஃப் என்பது ஹிஜாபுடன் சேர்த்து கண்கள் தவிர முகத்தையும் சேர்த்து மறைப்பதாகும். மேற்சொன்னவைகளில் இஸ்லாமிய பெண்களில் பலர் ஹிஜாப் அணிவதையும் பலர் நிகாஃப் சேர்த்து அணிவதையும் காண முடிகிறது. இதில் பள்ளிகளில் யூனிஃபார்ம் எனும் சீருடை வழக்கில் இருக்கும் போது ஏன் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிகின்றனர் என்று கோசமிட்டு மாற்று சமய சகோதரர்கள் கொடி பிடிக்கிறார்கள்.

இஸ்லாமியர்கள்
ஒரு பெண்ணை பல சகோதரர்கள் கூட்டாக துரத்தி வருகிறார்கள். நான் இங்கு கூற வருவது. அவரவர் சமய நம்பிக்கைகள் அவரவர்க்கு. இந்த நாட்டில் இஸ்லாமியத் தாய்க்குப் பிறந்து இந்துவாக வளரும் சகோதரர்களை நான் அறிவேன். இந்து தாய்க்குப் பிறந்து இஸ்லாமிய சகோதரியாக வளர்பவர்கள். இன்னும் இந்த இரு சமயங்களுக்கிடையே நிகழும் பல திருமணங்கள் - சமய மாற்றங்களை நாம் தினமும் கடந்தே வருகிறோம். அவரவர்க்கு அவரவர் தேவை பொருட்டு அவரவர் வாழ்வியல் பொருட்டு சிந்தனை பொருட்டு அவரவருக்கான முடிவெடுக்கும் முழு சுதந்திரமும் நமது நாட்டில் இருக்கிறது. இதில் ஒரு சமயம் போதிக்கும் விசயத்தில் ஆரோக்கியமான கருத்துகளைக் கூறி இது தேவையா? இது தேவையில்லையா? என்பது குறித்து கண்ணியமான உரையாடல் நிகழ்த்தப்பட வேண்டும். அவ்வாறான பாரபட்சமற்ற உரையாடல்கள் மூலம் பெறப்படும் கருத்துகளை அவரவர் உள்வாங்கிக் கொண்டு மாற்றமடைவதும் அல்லது அவரது சிந்தனைகள அப்படியே தொடர்வதும் அவரவர் சிந்தனை சக்திக்குட்பட்டது.

கல்விக் கூடங்கள்
ஆனால் ஒரு விசயத்தைப் பற்றி நன்கு சிந்தித்து அதில் இருந்தும் ஒருவர் விடுபட முயலும் போது சமயத்தின் பேர் சொல்லியோ வேறு எந்த சக்தியும் அதை தொடர்ந்து அவர் மீது நிர்பந்திப்பதும் தவறு. அது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது. நம் நாட்டில் இந்து மத சகோதர சகோதரிகள் தங்கள் சமய நம்பிக்கைப்படி திருநீறு / நாமம்/ பட்டை / ருத்ராக்ஷம் அணிய உரிமை உண்டு. இதை இஸ்லாமிய / கிறித்தவ கல்விக்கூடங்கள் தடுத்தால் அது தவறு.

காலணி கூட அணிய மாட்டார்கள்
ஐயப்பன்/ முருகன் போன்ற தெய்வங்களுக்கு மாலை போடும் போது கருப்பு நிற / காவி நிற துண்டு அணிந்து பள்ளிகளுக்கு எனது நண்பர்கள் வருவதை நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்கள் காலணி அணிந்திருக்க மாட்டார்கள். அதே போல கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் ஜெபமாலை அணிந்திருப்பார்கள். இஸ்லாமிய சகோதரர்களில் சிலர் தொப்பி அணிந்திருப்பார்கள்.
சகோதரிகள் ஹிஜாப் / அபாயா அணிந்திருப்பார்கள். பெண்கள் மட்டும் பயிலும் பள்ளிகளில் பள்ளிக்குள் செல்லும் வரை ஹிஜாப் அணிந்து உள்ளே சீருடையில் பங்கேற்பார்கள். ஆண்களும் இருக்கும் பள்ளியில் ஹிஜாப் அணிந்து கொள்ளும் சுதந்திரம் அவர்களுக்கு உண்டு. இதையெல்லாம் யாரும் எப்போதும் வேற்றுமையை வளர்ப்பதாக நினைத்ததே இல்லை. நான் இதுவரை பல பள்ளிகளில் பயின்றுள்ளேன். ஆனால் ஒரு இஸ்லாமியப் பள்ளியில் கூட பயின்றதில்லை. மதுரையில் இந்து சமயத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் பள்ளியில் பிரதிவாரம் வெள்ளிக்கிழமை கந்த சஷ்டி கவசம் பாடியிருக்கிறேன்.

நெற்றியில் விபூதி
வரிசையாக அனைவரது நெற்றியிலும் திருநீரும் குங்குமமும் வைப்பார்கள். அதை எனது பெற்றோரோ பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. மதுரை வீதிகளில் சிறு கோயில்களின் அன்னதானங்களில் உணவு சாப்பிட்டிருக்கிறேன். தூக்குச் சட்டியில் கூல் வாங்கிக் குடித்திருக்கிறேன். இன்னும் எனக்கு பல ஹிந்து சமய பாடல்கள் அத்துப்படி. மீனாட்சியம்மன் கோவிலுக்கு அதன் கருவறை தவிற அடிக்கடி குடும்பத்துடன் செல்லோம். யாருமே எங்களை வினோதமாக பார்த்ததில்லை. இப்படியாக பல்வேறு சமய நம்பிக்கைகளை மதிக்கும் நன்மக்களாகவே நாம் வளர்ந்திருக்கிறோம். சமயங்களில் நம்பிக்கை இல்லாதோர் ஹிஜாப் பெண்ணடிமைத்தனம் என்ற ஒரே கோணத்தில் மட்டுமே இதை அணுகுகிறார்கள். அது தவறாகும். இப்போது இஸ்லாமியப் பெண்கள் படிக்கத் துவங்கி விட்டார்கள்.
அவர்களுக்கு வேண்டியதை அவர்கள் முடிவு செய்கிறார்கள். அவர்கள் மீது திணிக்கப்படாமல் தாமாகவே தங்களது விருப்பப்படி ஹிஜாபையோ அபாயாவையோ நிகாஃபையோ தேர்ந்தெடுக்கும் உரிமையை நம் தேசத்தின் சட்டம் அவர்களுக்கு வழங்குகிறது.

தடுக்க நாம் யார்
இதில் அதைத் தடுக்க நாம் யார்? மேலும் சிலர் - பள்ளிகளில் யாருமே திருநீறும் அணியக்கூடாது. நாமமும் போடக்கூடாது. ஹிஜாபும் அணியக்கூடாது. என்றும் இது தான் யூனிஃபார்ம் எனும் சீருடைக்கு அர்த்தம் என்று கடும்போக்குடன் கூறுகிறார்கள். நான் கேட்க விரும்புவது ஒருவர் அணியும் திருநீறு பக்கத்தில் இருப்பவருக்கு பாதிப்பு தராதவரை. ஒருவர் அணியும் ஜெபமாலை பக்கத்தில் இருப்பவர் மீது குத்தாதவரை ஒருவர் அணியும் ஹிஜாபும் அருகில் உள்ள தோழி கண்ணுக்கு உருத்தாதவரை இங்கு அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டதே. அனைத்து வேற்றுமைகளையும் ஒழித்து விட்டு வன்முறை மூலம் அல்லது அடக்குமுறை மூலம் போலியான ஒற்றுமையை உருவாக்குவது ஃபாசிசம் / நாசிசம் அதுவா நமக்கான தேவை? எனக்கு எனது இந்து நண்பன் மாலை போட்டு காவி துண்டு அணிந்திருப்பது உருத்தவே செய்யாது. அவனுக்கும் நான் கைலி அணிந்து தொப்பி போடுவதோ எனது சகோதரியின் மாற்று மத தோழிக்கு எனது சகோதர ஹிஜாப் அணிவதோ உருத்தவே செய்யாது. பிறகெங்கு வந்தது இந்த பிரச்சனை?

பெண்ணடிமைத்தனம்
இங்கு பலர் பெண்ணடிமைத் தனம் பேசுகிறார்கள். ஆனால் அவர்களுக்கே தெரியாமல் நன்கு படித்த சிந்திக்கத் தெரிந்த சுயமாக தன் சொந்தக்காலில் நிற்கும் பெண் அவளது ஆடை குறித்து முடிவெடுப்பதையும் பெண்ணடிமைத்தனம் என்று கூறி அவள் மீது நிர்பந்திப்பது எதை? ஹிஜாப் தேவையா இல்லையா, தாலி தேவையா இல்லையா, சேலை தேவையா இல்லையா என்பதை முடிவெடுக்கும் உரிமையை பெண்களிடமே விட்டுவிடுவோம். அவர்கள் பெறும் சிறந்த கல்வி சிந்திக்கும் திறன் பொருளாதார தன்னிறைவு போன்றவற்றின் பலனாக அவர்களுக்கு எது தேவை என்ற முடிவை அவர்கள் எடுப்பார்கள். இதில் பெரும்பான்மை விவாதங்களை எதிர்பாலினமான நாம் தான் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று கூட தோன்றுகிறது. ஹிஜாப் தொடர்பான இந்த மாற்று மத சகோதரர்களின் போராட்டத்திலும் பெரும்பான்மை ஆண்கள் தான் இருக்கிறார்கள்.

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம்
பெண்களுக்கு அவரவர் உரிமையை நிலைநாட்டும் உரிமை இருக்கிறது நண்பர்களே. நாம் நம் வேலையை ஒழுங்காகப் பார்த்தாலே போதும் என்று தோன்றுகிறது. என்னைப் பொருத்தவரை ஹிஜாப் வேண்டாம் என்று ஒரு பெண் முடிவெடுத்தால் அவளை நிர்பந்திப்பதும் தவறு. அவளை ஒழுக்கங்கெட்டவள் என்று கூறுவது குற்றம். அதுவே ஹிஜாப் வேண்டும் என்று முடிவெடுத்த பெண்ணை நீ அதை அணியக்கூடாது என்பதும் குற்றம். அவரவர் தேர்வு அவரவர்க்கு. கர்நாடகாவில் நிகழ்ந்து வரும் இந்த வன்முறை அவசியமற்றது. அருவருக்கத்தக்கது. அது போன்ற ஒன்று நம் தாய்த்தமிழ்நாட்டில் நடக்கவே நடக்காது என்று உறுதியாக நம்புகிறேன். காரணம் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் சரி.. எந்த சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி.. அடிப்படையில் தமிழன் பிறர் உணர்வை மதிக்கத் தெரிந்தவன். இது உண்மையும் கூட. இவ்வாறு தனது பதிவில் டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications