ஓட்டுநர், நடத்துனர்கள் போதையில் பணிக்கு வந்தால் டிஸ்மிஸ்.. சிறை.. அரசு போக்குவரத்து கழகம் அதிரடி
சென்னை: ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின் பொழுது மது அருந்திய நிலையில் பணிபுரியக் கூடாது. மது அருந்திய நிலையில் பணிபுரிவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஆகியோர் பணி நேரத்தின்போது மது அருந்திவிட்டு பேருந்துகளை இயக்குவதாகவும் பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
கோவையில் சில மாதங்களுக்கு முன்பு அரசு போக்குவரத்துக்கழக டிரைவர் ரகு போதையில் பேருந்தை இயக்கினார். பஸ் தாறுமாறாக ஓடி கார் மீது மோதியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அச்சமடைந்த பயணிகள் பேருந்து டிரைவரை பரிசோதித்த போது அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து டிரைவர் ரகுவை தொடர்ந்து பஸ்சை இயக்கவிடாமல் அங்கிருந்த பொதுமக்கள் துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சட்டப்படி குற்றம்
இந்தநிலையில் போக்குவரத்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சிலர் பணியின் போது மது அருந்திய நிலையில் பணிபுரிவதாக புகார் பெறப்படுகிறது. மது அருந்திய நிலையில் பணிபுரிவது சட்டப்படி குற்றமாகும்.

மது அருந்தக்கூடாது
மது அருந்திய நிலையில் பயணிகளிடையே நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுவதுடன் பயணிகளுக்கு போக்குவரத்து கழகம் மீதான நம்பிக்கை குறைவதுடன் தொடர்ந்து இதன் காரணமாக பயணிகள் பேருந்தில் பயணிப்பதை தவிர்க்க வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின் பொழுது மது அருந்திய நிலையில் பணிபுரியக் கூடாது.

பணியில் இருந்து டிஸ்மிஸ்
மது அருந்திய நிலையில் பணிபுரிவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்டவர் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை, அடிப்படை சம்பளம் குறைப்பு, பணி நீக்கம் மேற்கொள்ளப்படும்' என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொறுப்பு தேவை
எனவே, பணியாளர்கள் மேற்படி குற்றத்திற்கான பின் விளைவுகளை அறிந்து பணியில் ஒழுங்கீனத்திற்கு இடம் கொடுக்காமல் பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் எச்சரிக்கைக்கு பின்னராவது போக்குவரத்துக்கழக டிரைவர் கண்டக்டர்கள் போதையில் பணிக்கு வராமல் இருக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பு. பல நூறு உயிர்களை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள டிரைவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications