தொடரும் மழை.. 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
சென்னை: தொடர் மழை காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் என 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9-10ம் தேதி மாண்டஸ் புயல் சென்னையையொட்டி மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. ஆனால் கரையை கடந்த பின்னரும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
புயலின் மீதமுள்ள மழை மேகங்கள்தான் இந்த மழைக்கு காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடதமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக்கரம் சுழலுதா.. மழை முடிஞ்சதா.. இரட்டிப்பு சந்தோஷ அறிவிப்பு.. நாளை முதல் 4 நாட்கள்.. அலர்ட் மக்களே
தொடர் மழை
இந்நிலையில் நேற்று காலை முதல் மழை தொடர்ந்து பெய்த காரணத்தினால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையை பொறுத்த அளவில் இயல்பான அளவு மழை பொழிவு இருந்திருக்கிறது. கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் நேற்று(டிச.12) வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 40 செ.மீ அளவுக்கு மழை பொழிந்துள்ளது. சென்னையை பொறுத்த அளவில் இயல்பான அளவை விட 16 சதவிகிதம் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. அதாவது சென்னையில் இக்காலகட்டத்தில் இயல்பாக 74 செ.மீ மழை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு 86 செ.மீ என மழை பொழிந்துள்ளது.
புதிய மேலடுக்கு சுழற்சி
தற்போது வரை மழை நீடித்து வருவதால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் என 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த அளவில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அதிகபட்சமாக 6.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இன்று வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி உருவாவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல அரபிக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாகிறது.
நீர் திறப்பு
தொடர் மழை காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரிகள் அனைத்தும் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதன் காரணமாக பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரியை பொருத்த அளவில் தொடர் மழை மற்றும் கண்டலேறு அணையிலிருந்து வரும் கிருஷ்ணா நீர் ஆகியவற்றின் காரணமாக நீர் வரத்து விநாடிக்கு 8,200 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஏரியிலிருந்து விநாடிக்கு 7,500 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த ஏரியை பார்வையிட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், ஏரியின் கரைகளை பலப்படுத்தி கூடுதல் நீரை சேகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தார்.
செம்பரம்பாக்கம்
இதற்கடுத்து செம்பரம்பாக்கம் ஏரி. இந்த ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏரிக்கு நீர் வரத்தும் அதிகரிக்க தொடங்கியது. மொதம் இருக்கும் 24 அடியில் 22 அடி வரை நீர் நிரம்பியது. இதனையடுத்து முதலில் விநாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் ஏரிக்கான நீர் வரத்து விநாடிக்கு 4,297 அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஏரியிலிருந்து விநாடிக்கு சுமார் 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆந்திர மாநிலம் நகிரி அருகே உள்ள பிச்சாட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,300 கனஅடி வரை அதிகரித்தால் அணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடி வரை நீர் திறக்கப்பட்டுள்ளது.