வெந்து தணிந்தது காடு! சன் டேக்கு வணக்கத்த போடு! புரட்டாசியால் களையிழந்த காசிமேடு! மீன் விலை விர்ர்!
சென்னை: புரட்டாசி மாதம் இன்று தொடங்கியதை அடுத்து, சென்னை காசிமேடு உள்ளிட்ட பல்வேறு மீன்கள் விற்பனைக் கூடத்தில், விடுமுறை தினமான இன்று, அசைவ பிரியர்களின் வழக்கமான கூட்டமின்றி, வெறிச்சோடி காணப்பட்டது.
விஷ்ணு பகவானுக்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதம் பார்க்கப்படுகிறது. இந்துக்கள் வழிபடுவதில் சிறப்பான மாதம் என அழைக்கப்படும் புரட்டாசி மாதத்தில், பெரும்பாலான மக்கள், அசைவ உணவை உண்ணாமல் விரதம் இருப்பது வழக்கம்.
இந்த மாதத்தில் அசைவ பிரியர்கள் கூட மீன், இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவை உண்பதற்கு ஆர்வம் காட்ட மாட்டார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த புரட்டாசி மாதம் இன்று தொடங்கியுள்ளது.
அம்மனுக்கு மீன் படைக்க சென்னை காசிமேடு துறைமுகத்தில் குவிந்த அசைவ பிரியர்கள்!
காசிமேடு மீன் சந்தை
இதனால் எப்போதும் திருவிழா போல் காட்சியளிக்கும் சென்னை காசிமேடு மீன்பிடித் சந்தையில், பொதுமக்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்தனர். குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை என்றால், அசைவ பிரியர்களால் நிரம்பி வழியும் காசிமேடு மீன் மார்க்கெட், தற்போது அங்கும் இங்குமாய் சிலரை தவிர, கூட்டம் இன்றி காணப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் இன்றி மீன் வியாபாரமும் மந்த நிலையிலேயே உள்ளது.
மீன்களின் விலை
புரட்டாசி மாதம் தொடங்கிய போதிலும், காசிமேடு மீன்மார்க்கெட்டில் மீன்களின் விலை அதிகமாகவே உள்ளது. வஞ்சரம் மீன் ரூ.1500 வரை விற்பனை செய்யப்படுகிறது. சங்கரா ரூ.400-க்கும், கடம்பா ரூ.400-க்கும், இறால் ரூ.1000-க்கும், வவ்வால் ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், பாறை, நெத்திலி உள்ளிட்ட மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது. புரட்சி மாதம் தொடங்கிய நிலையிலும், மீன்களின் விலை உயர்ந்திருப்பதால், காசிமேடு மீன்மார்க்கெட்டுக்கு வந்த சில அசைவ பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
காஞ்சிபுரம் மீன் மார்க்கெட்
இதேபோல், காஞ்சிபுரம் மீன் சந்தையிலும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடியது. பொதுவாக வார விடுமுறையான ஞாயிற்றுக் கிழமைகளில், காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரிக்கரை மீன் சந்தையில், அசைவ பிரியர்களின் வருகையால் கூட்டம் அலைமோதும். ஆனால் தற்போது புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால், மீன்பிடி சந்தையை மக்கள் கூட்டமின்றி களையிழந்து காணப்பட்டது.
மீன்களின் விலை உயர்வு
மேலும், சந்தைக்கு மீன் வரத்தும் குறைந்துள்ளதால், மீன்களின் விலை கடும் ஏற்றத்தைக் கண்டுள்ளது. ஒரு கிலோ சங்கரா மீன் ரூ.230-க்கும், வன்ஜிரம் ரூ.500-க்கும், வவ்வால் மீன் ரூ.500க்கும் விற்பனையாகிறது. இதேபோல், இறால் ரூ.300 வரையிலும், நெத்திலி, கனவா உள்ளிட்ட மீன்கள் ரூ.300 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. சீலா, பெரிய சுறா, நெத்திலி உள்ளிட்ட மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது. புரட்டாசி மாதம் என்பதால், மீன்களின் விலை கணிசமாக குறைந்திருக்கும் என மீன் சந்தைக்கு வந்த ஒரு சிலர், விலை ஏற்றத்தால் புலம்பியபடியே மீன்களை வாங்கிச் சென்றனர்.