ஐ ஜாலி.. லீவு விட்டாச்சே! சொந்த ஊருக்கு படையெடுத்துச் செல்லும் மக்கள்! திணறும் சென்னையின் சாலைகள்!
சென்னை : தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயனிகளால் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல மணி நேரமாக கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதியான இன்று தேசப்பிதா காந்தியடிகள் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கிறது. ஞாயிற்றுக் கிழமையான இன்று வார விடுமுறையாக உள்ளது.
மேலும் வருகிற 4ஆம் தேதி ஆயுத பூஜையம், 5ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளன. 2022ம் ஆண்டிற்கான பொது விடுமுறையின் கீழ் இந்த இரண்டு நாட்களும் ஏற்கனவே பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டன.

தொடர் விடுமுறை
இந்நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை முதல் வரும் 5ம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவித்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஏற்கனவே விடுமுறை நாட்களாக உள்ள நிலையில், 3ம் தேதிக்கு கூடுதலாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3ம் தேதிக்கு பதில் அடுத்த வாரம் 8-ம் தேதி வேலை நாளாக என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கும் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

படையெடுக்கும் மக்கள்
இதன் காரணமாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து காந்தி ஜெயந்தி ஆயுத பூஜை பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவதற்காக தென் மாவட்டங்களுக்கு சென்னை வாசிகள் கூட்டம் கூட்டமாக பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்
இதேபோல் தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பல இடங்களில் வாகன போக்குவரத்து வழக்கத்தை விட அதிகரித்து ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. நள்ளிரவாகியும் போக்குவரத்து வேகமடையாமல் சுணக்கமாகவே இருந்தது. குறிப்பாக அதிகமான வாகனங்கள் வருவதால் பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் அவதி
பெருங்களத்தூர் மேம்பாலம் மீதும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தொடர் விடுமுறை பயன்படுத்தி ஆம்னி பேருந்து அதிகமான கட்டணம் வசூலிப்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து தடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.அதன்படி, சென்னையில் இருந்து நாள்தோறும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 2,050 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications