நீட்டுக்கு விண்ணப்பித்தது முதல் தேனியில் அட்மிஷன் வரை.. உதித்சூர்யாவாக செயல்பட்டது மும்பை மாணவர்!
சென்னை: நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தது முதல் தேனியில் அட்மிஷன் வரை மும்பை மாணவரே உதித் சூர்யாவாக செயல்பட்டது தெரியவந்தது.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் உதித் சூர்யா. இவர் தேனி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வந்தார். இந்த நிலையில் இவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது அம்பலமானது.
இதனால் உதித் சூர்யாவும், அவரது தந்தை வெங்கடேசன், தாய் கயல்விழி ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். இதையடுத்து கடந்த புதன்கிழமை அவர்கள் அனைவரும் திருப்பதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கேள்வி
இவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் இவர்களை தேனி மாவட்ட சிறையில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் பல்வேறு கெடுபிடிகளை தாண்டி இந்த முறைகேடு எவ்வாறு நடைபெற்றது என்ற கேள்வி எழுந்துள்ளது.
மருத்துவ படிப்பு
இதுகுறித்து வெங்கடேசனிடம் நடந்த விசாரணையில் பல்வேறு திடுக் தகவல்கள் கிடைத்துள்ளன. அவர் கூறுகையில் நீட் தேர்வு நடத்தும் ஏஜென்ட்டை தனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் இன்னொரு மருத்துவர் சரவணன். அவரது மகனையும் இது போல் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்த்துள்ளார்.
நீட் தேர்வு
அவர் கூறிய தகவலின்பேரில் நான் நீட் தேர்வு நடத்தும் ஏஜென்ட்டை அணுகினேன். அந்த ஏஜென்ட்தான் உதித் சூர்யாவுக்கு பதில் தேர்வு எழுதும் மாணவரை தேர்வு செய்துள்ளார். அவர் மும்பைவாசி. தொழில்நுட்ப ரீதியாக மோசடிகளை கண்டுபிடிக்க முடியாத படி பெரிய அளவில் ஆள்மாறாட்டம் செய்துள்ளார்.
சிபிசிஐடி
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தது முதல் மருத்துவ சேர்க்கை வரை போலி உதித் சூர்யாவே சென்றுள்ளார். ஆனால் வகுப்புகளுக்கு மட்டும் உண்மையான உதித் சூர்யா சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். சரவணனின் மகன் பிரவீனும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.