சத்தம் இல்லாமல் தமிழகத்தில் கடந்த வாரம் ஒரு அரசியல் புயல் வீசியது தெரியுமா?
Recommended Video
சென்னை: கஜா புயல் நடத்திய கோரத் தாண்டவத்திற்கு நடுவே, தமிழக அரசியலிலும் ஒரு புயல் வீசி சத்தமில்லாமல் அடங்கி தற்காலிகமாக கரையை கடந்துள்ளது.
அனைவரது கவனமும் கஜா பக்கம் இருக்கும் போது இங்கே சென்னையில் மையம் கொண்ட, ஒரு அரசியல் புயல் அறிவாலயத்தில் கரையை கடந்து சென்றுள்ளது.
இந்தப் புயலின் மையப்புள்ளி திமுக பொருளாளர் துரைமுருகனிடமிருந்து துவங்கியது.
கூட்டணியில் இல்லை
தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்த துரைமுருகன், வைகோவின் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை திமுக கூட்டணியில் இல்லை என்று தெரிவித்த ஒரு கருத்து தமிழக அரசியலையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. காங்கிரஸ், முஸ்லீம் லீக் கட்சிகள்தான் கடந்த லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இருந்தவை என்பதை மறைமுகமாக துரைமுருகன் இவவாறு குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
வைகோ
ஆறு மாதங்கள் முன்பாகவே திமுக கூட்டணியில் இருப்பதாக கூறிக்கொண்டு கைகோர்த்தவர் வைகோ. ஆனால் திமுக தரப்பில் இருந்து இதுவரை கூட்டணி என்று வாய் திறக்கவே இல்லை. ஒரு பக்கம் ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என்று வைகோ கூறினாலும், மதிமுக மாநாட்டுக்கு, தான் செல்லாமல், துரைமுருகனை அனுப்பி வைத்தார் ஸ்டாலின்.
திருமாவளவன்
இதேபோலத்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சியுடன் தனி ஆவர்த்தனம் நடத்தி வருகிறார் என்று திமுகவில் சலசலப்பு உள்ளது. போதாத குறைக்கு டிடிவி தினகரனுடன் அவருக்கு நெருக்கம் இருப்பதாக திமுக தலைமையிடம் திரி கொளுத்தி போட்டு வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் தான் துரைமுருகனின் பேட்டி, மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடுவே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆளும் கட்சி குஷி
அதேநேரம் அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் துரைமுருகனின் பேட்டியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர். வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி பலம் இழந்து விடும் என்று அவர்கள் பூரிப்படைந்தனர். இந்த நிலையில்தான் முதலில் திருமாவளவன் அறிவாலயம் சென்று ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதன் பிறகு அன்று இரவே வைகோ ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
நம்பிக்கை கீற்று
இருவரும் அறிவாலயத்தை விட்டு வெளியே வரும்போது நம்பிக்கை ஒளி முகத்தில் தெரிந்தது. திருமாவளவன் பேட்டி அளிக்கும் போது தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி உறுதி செய்யப்படும் என்று நான் கூறியதைத்தான் துரைமுருகனும் கூறியுள்ளார். இதில் சங்கடப்பட ஏதுமில்லை என்றார். வைகோவுக்கும் கூட்டணி குறித்த ஆசுவாசம் அளிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
பரபரப்பு
துரைமுருகனின் பேட்டியைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் மட்டுமல்லாது ஆளும் கட்சியினர் மத்தியிலும் கூட பரபரப்பு ஏற்பட்டு இருந்தது. எதையும் யோசிக்காமல் பேசக்கூடியவர் அல்ல துரைமுருகன் என்பதால், கடந்த ஒருவாரமாக தமிழக அரசியலில் சத்தமில்லாமல் வீசிவந்த புயல் அறிவாலயத்தில் நடந்த அடுத்தடுத்த சந்திப்புகளுக்குப் பிறகு சற்று அடங்கியுள்ளது. இனியாவது துரைமுருகன் சும்மா இருப்பாரா அல்லது ஏதாவது ஒரு திரியை கொளுத்தி போடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.