"எதிர்க்கட்சி மட்டும் இப்போது இருந்திருந்தால்".. பாதி பட்ஜெட் உரையில் பிடிஆர் கிண்டல்! என்ன நடந்தது?
சென்னை: ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்பான பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எதிர்க்கட்சிகள் அவையில் இருந்திருந்தால் இப்போது வெளிநடப்பு செய்திருப்பார்கள் எனத் தெரிவித்தார்.
Recommended Video
கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது.
இந்த நிலையில், நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 2022 - 2023 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்யும் முதல் முழு நீள பட்ஜெட் இதுவாகும்.

குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி
பட்ஜெட் உரையை காண பழனிவேல் தியாகராஜனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். பட்ஜெட் உரையை பிடிஆர் தாக்கல் செய்யத் தொடங்கியபோது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்படும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை பற்றி பேசத் தொடங்கினார்.

அதிமுகவினர் வெளிநடப்பு
சபாநாயகர் அப்பாவு பல முறை தடுத்தும் எடப்பாடி பழனிசாமி பேச்சை நிறுத்தாத நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பாவு இருக்கையிலிருந்து எழுந்தார். இதனை தொடர்ந்து பொய் வழக்கு போடாதே என்று முழக்கமிட்டவாறு அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஊழல் கண்காணிப்பை வலுப்படுத்துவோம்
இதனை தொடர்ந்து நிதிநிலை அறிக்கையை வாசிக்கத் தொடங்கிய பழனிவேல் தியாகராஜன், நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட இருக்கும் பணிகள் மற்றும் திட்டங்களுக்கான நிதியை அறிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், வரும் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையை வலுப்படுத்தும் பணியை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்.

அதிமுகவினரை கலாய்த்த பிடிஆர்
நேர்மையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற முதலமைச்சரின் உறுதியான நிலைபாட்டினால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பேரவைத் தலைவர் அவர்களே! ஒருவேளை எதிர்வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் இப்போது இருந்திருந்தால் இதை கூறிய பிறகு வெளிநடப்பு செய்திருப்பார்களோ என்னவோ!" எனக் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
இதனிடையே அவையிலிருந்து வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளான கல்விக்கடனை தள்ளுபடி செய்யப்படவில்லை, மகளிருக்கான உரிமைத் தொகை திட்டம் நிறைவேற்றப்படவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை திரும்பப்பெறுவதைபோல் நாடகமாடுகிறார். திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது." எனக்குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications