பெட்ரோல், டீசல் விலை குறையப்போகுது மக்களே.. பொருளாதார ஆய்வறிக்கையில் ஹேப்பி நியூஸ்
பெட்ரோல், டீசல் விலை குறையப்போகுது மக்களே.. பொருளாதார ஆய்வறிக்கையில் ஹேப்பி நியூஸ்
சென்னை: நாளை மத்திய அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், ராஜ்யசபாவில் இன்று 2019-20 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதை தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் உருவாக்கியுள்ளார். பட்ஜெட்டுக்கு முந்தைய நாள், நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவது என்பது வழக்கமான ஒரு நிகழ்வாகும்.
இந்த நிதியாண்டில் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்பதை காட்டக்கூடிய ஒரு கண்ணாடியாக இது அமையும். பட்ஜெட்டிலும் கூட இந்த பொருளாதார ஆய்வறிக்கை தாக்கத்தை ஏற்படுத்தும்.
கச்சா எண்ணை விலை குறையும்
பட்ஜெட் எந்த பாதையில் செல்லும் என்பதை பொருளாதார ஆய்வறிக்கை தான் தீர்மானிக்கும். இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் 2019-20 ஆம் நிதியாண்டில் கச்சா எண்ணெய் விலை குறைவடையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. விவசாயத் துறையில் மாநில செலவினங்கள் அதிகரித்து வருகிறது. வரி வசூல் பாதிப்படையும் வாய்ப்புள்ளது. எனவே நிதி விவகாரத்தில் இந்தியாவுக்கு சவால் காத்துள்ளது.
8 சதவீத வளர்ச்சி தேவை
2025 ஆம் ஆண்டிற்குள், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற, இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை 8% ஆக வைத்திருக்க வேண்டும். பொது நிதி பற்றாக்குறை 2019ம் நிதியாண்டில் 5.8% ஆக இருந்தது. இது கடந்த 2018 நிதியாண்டில் 6.4% ஆக இருந்தது. இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
பண வீக்கம் குறையும்
கச்சா எண்ணெய் விலைகள் குறைந்துவிட்டால் அது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது மக்களின் பணத்தை மிச்சப்படுத்தவும் உதவும், என்று அவர் மேலும் கூறினார். லோக்சபா பொதுத் தேர்தல் நேரத்தில்தான், பெட்ரோல், டீசல் விலை நிலையாக இருந்தது. மற்ற நேரங்களில் தொடர்ந்து அவற்றின் விலை அதிகரித்து வந்தது. எனவே, நாட்டு மக்களுக்கு, பொருளாதார ஆய்வறிக்கையின் கணிப்பு, ஒரு பெரிய நிவாரணமாகும்.
விலை குறைய காரணங்கள்
அமெரிக்கா, ஷேல் ஆயில் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் உலகளாவிய தேவை குறைந்துள்ளது போன்றவை, கச்சா எண்ணெய் விலையை குறைக்க கூடும் என்று தெரிகிறது. இந்தியாவை பொறுத்தளவில், தனது பெட்ரோல், டீசல் தேவையில் சுமார் 80 சதவீதத்தை இறக்குமதி மூலமே ஈடுகட்டுகிறது. எனவே கச்சா எண்ணெய் விலை குறைந்தால் அது அரசுக்கு பலன் தரும்.
கடந்த ஆட்சியில் இப்படி
மோடி அரசின் முதல் 5 ஆண்டு பதவிக்காலத்தில், சர்வதேச எண்ணெய் விலையேற்றமும், பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரி விதிப்பும் சேர்ந்து பொதுமக்களுக்கு சுமையாக மாறின. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், பெட்ரோல், டீசல் மீதான வரி விகிதத்தை குறைக்க அரசு, மறுத்ததால் உள்நாட்டு சில்லரை விலையிலும் தொடர்ந்து அதிகரிப்பு இருந்தது. விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.