அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 4வது முறை சம்மன்! ஜன.18ஆம் தேதி ஆஜராக உத்தரவு!
சென்னை: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜனவரி 18ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 4வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
இதுவரை 3 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அதனை அரவிந்த் கெஜ்ரிவால் பெரிதாக பொருட்படுத்தவில்லை. கடைசியாக ஜனவரி 3ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில் அன்றைய தினம் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதனால் அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில் 4வது முறையும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக எழுந்த புகாரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். ஓராண்டாக சிறையில் இருந்து வரும் அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை.
இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த கடந்த நவம்பர் 2, டிசம்பர் 21, ஜனவரி 3 ஆகிய 3 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இப்போது 4 வது முறையாக ஜனவரி 18ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது; ''நாடாளுமன்றத் தேர்தலில் நான் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதற்காக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வருகிறது. என்னுடைய மிகப்பெரிய சொத்தே எனது நேர்மை தான். பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சட்டவிரோத சம்மன்களை அனுப்புவதன் மூலம் பாஜக எனது நேர்மையான பிம்பத்தை அழிக்க பார்க்கிறது. ''
''அமலாக்கத்துறை அனுப்பிய அனைத்து சம்மன்களும் சட்டவிரோதமானது. நான் சம்மன்களுக்கு விரிவான விளக்கத்தை அனுப்பியிருக்கிறேன். அதற்கு அமலாக்கத்துறை பதிலளிக்கவில்லை. போலியாக வழக்குப்பதிவு செய்து ஆம்ஆத்மி கட்சி தலைவர்களை சிறையில் அடைக்க பார்க்கின்றனர்.''












Click it and Unblock the Notifications