நானும் ரவுடிதான்..ஆண்டிகள் கட்டிய மடம்..சசிகலா, ஓபிஎஸ் கூட்டணியை கிண்டலடித்த ஜெயக்குமார்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே எங்களின் ஒரே குறிக்கோள் என்றும் அதற்கான ஆலோசனைகளை இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனைக்கூட்டத்தில் ஓபிஎஸ், தினகரன், சசிகலா குறித்து எதுவும் பேசவில்லை என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நானும் ரவுடிதான் என்பது போல ஓ.பன்னீர் செல்வம் நடந்து கொள்வதாக ஜெயக்குமார் தெரிவித்தார். எங்கள் பக்கம்தான் மாவட்ட செயலாளர்கள் உள்ளனர் என்றும் ஓ.பன்னீர் செல்வம் நடத்தியது மாவட்ட செயலாளர் கூட்டம் அல்ல என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக என்றாலே அது எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் கீழ் செயல்படுபவர்கள்தான் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டு பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதேசமயம் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் தான்தான் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறிவரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதம் 4ம் தேதி இறுதி கட்ட விசாரணை நடைபெற உள்ளது.
இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர், எம்எல்ஏக்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
அதிமுக வளர்ச்சி பணிகள், திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது பற்றியும், மக்களவைத் தேர்தலை ஒட்டி பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஓ.பன்னீர் செல்வம் நடத்திய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஏமாற்றத்தின் வெளிப்பாடாகவே பேசி உள்ளார். ஒ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்த போதுதான் உள்கட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது வென்றவர்களை வைத்துத்தான் பொதுக்குழுவும் நடத்தப்பட்டது. இந்த பொதுக்குழுவில் வைக்கப்பட்ட வரவு, செலவு கணக்குகளைத் தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
கட்சியும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வெற்றிச் சின்னமான இரட்டை இலையும் எடப்பாடி பழனிசாமியிடமே உள்ளது. அதனால் ஓ.பன்னீர் செல்வம் தான் தனிக்கட்சித் தொடங்க வேண்டும். அதிமுகவுடன் தான் பாஜக கூட்டணியில் உள்ளது. நானும் ரவுடிதான் என்பது போல ஓ.பன்னீர் செல்வம் நடந்து கொள்கிறார். அவர் நடத்தியது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அல்ல. எங்கள் பக்கம்தான் நிர்வாகிகள் இருக்கின்றனர். ஓ.பன்னீர் செல்வம் பணம் கொடுத்து நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். அவர் நடத்தியது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அல்ல. நான்கு பேர் சேர்ந்து நடத்திய ஆலோசனைக்கூட்டம்தான் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். எங்களைப் பொறுத்தவரை ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ், தினகரன், சசிகலா குறித்து எதுவும் பேசவில்லை என்று கூறினார். நாடாளுமன்ற தேர்தலுக்கான பூர்வாங்க பணிகள் தொடங்குவது குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை வழங்கியதாக கூறினார். மக்கள் திமுக அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். வரவிருக்கு நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தி அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றும் ஜெயக்குமார் கூறினார். அதிமுகவிற்குள் எந்த உட்கட்சி பிரச்சினையும் இல்லை என்று கூறிய ஜெயக்குமார் ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டியது போலத்தான் சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் செயல்படுவதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications