ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. "அந்த 8 பேரும் யார்னு பாருங்க".. திமுகவை சாய்க்க புதுரூட்டில் எடப்பாடி
ஸ்டாலினை விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி
சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி உள்ள நிலையில், திமுகவை சரமாரி விமர்சித்து வருகிறார்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலுக்கான பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது... 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நெல்லை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 6ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான தீவிரத்தில் தமிழக கட்சிகள் களமிறங்கி உள்ளன.

பாமக
அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறவில்லை... இதனால் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை அதிமுக எதிர்கொள்ள தயாராகி உள்ளது.. எனவே, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தையும் துவங்கிவிட்டார். அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்தில் அதிமுகவுக்கு ஓட்டு கேட்டு வருகிறார்.

டெக்னிக்
எப்போதுமே எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பிரச்சாரங்களில் ஒருவித டெக்னிக்கை பயன்படுத்தி வருகிறார்.. அதிமுகவுக்கு ஓட்டு கேட்கிறாரோ இல்லையோ, திமுகவை குறை சொல்லும் போக்கை மறக்காமல் கடைப்பிடிக்கிறார்.. கடந்த முறை தேர்தலின்போது, ஆரம்ப கட்ட பிரச்சாரங்களில் அதிமுகவின் சாதனைகளை சொல்லித்தான் ஓட்டு கேட்டு வந்தார்..

உளவுத்துறை
ஆனால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் சாதகமாகி கொண்டிருக்கின்றன என்று கள ரிப்போர்ட்டுகள் உளவுத்துறையின் மூலம் எடப்பாடிக்கு கிடைத்து கொண்டே இருந்தது.. அதை பார்த்துதான் சற்று ஜெர்க் ஆன எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய பிரச்சார யுக்தியை வேறு திசைக்கு மாற்றினார். அதன்படி திமுகவை டேமேஜ் செய்வது, ஸ்டாலினை கிண்டல் செய்வது, திமுகவின் சீனியர்களை மட்டம் தட்டி பேசுவது, என்று அவரது பாணி மாறியது..

பாஜக
இது அப்படியே தேசிய பாஜகவின் மாடல் ஆகும்.. பாஜகவும் இப்படித்தான், எதிர்தரப்பை தன்னுடைய வழிக்கு கொண்டு வர முனைவது அப்படி இல்லாவிட்டால் அவர்களை டேமேஜ் செய்துவிடுவது என்ற ரூட்டை பிடிக்கும்.. இதற்காக சம்பந்தப்பட்ட எதிர்தரப்பில் இருப்பவர்களின் ஊழல் வழக்குகளை தூசி தட்டி எடுக்க போவதாக மிரட்டல் விடுக்கும். இதைதான் எடப்பாடி பழனிசாமி, சென்ற முறையும் சரி, இந்த முறையும் சரி, கையில் எடுத்து வருகிறார்..

வாடகை டாக்சி
நேற்றுகூட அவர் தன்னுடைய பிரச்சாரத்தில் பேசியபோது, "இன்னைக்கு அமைச்சரவையில் பார்த்தீங்கன்னா, 8 முன்னாள் அமைச்சர்கள் அதிமுகவினர்தான்.. வாடகைக்க புடிச்சிட்டு போய் அமைச்சரவையை அமைச்சிருக்காங்க.. ஏன்னா அந்த கட்சியில் ஆள் இல்லை.. வாடகைக்கு டாக்சியில் போவோம் இல்லையா, அந்த மாதிரி, அமைச்சராக்கியிருக்காங்க.. அப்படிப்பட்ட கட்சி நம்மை பார்த்து அவதூறா பேசிட்டு இருக்கு.. அதான் வேடிக்கையா இருக்கு" என்றார்.

திமுக
திமுகவை ஒன்றுமில்லை என்று கிண்டலடிப்பதால், நிஜமாகவே அந்த கட்சி டேமேஜ் ஆகும் என்று கணக்கு போடுகிறார்.. ஆட்சிக்கு வந்த 100 நாளில் எத்தனையோ வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றினாலும், நிறைவேற்றாமல் இருக்கும் மற்ற வாக்குறுதிகள் எங்கே? என்று கேட்டு மக்களை கேள்வியெழுப்ப வைக்கிறார்.. ஆனால், நிறைவேற்றி முடித்த வாக்குறுதிகள் பற்றி பேச்சையே எடுப்பதில்லை என்பது வேறு விஷயம்.

அதிமுக
அடுத்ததாக, ஸ்டாலின் கோபப்பட்டால் அந்த முன்னாள் அமைச்சர்கள்மீது கோபம் பாயும் என்று எதிர்பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி.. இவர் சொல்லும் முன்னாள் அமைச்சர்கள் என்றைக்கோ அதிமுகவில் இருந்து விலகி திமுகவுக்கு வந்துவிட்டனர்.. இத்தனை காலம் அவர்களை பற்றி ஒருவார்த்தைகூட பேசியதில்லை.. அதிமுக தமைமையின் போக்கு பிடிக்காமல்தான் திமுக பக்கம் அவர்கள் தாவினார்கள் என்பதைகூட யோசித்து பார்க்காமல், முன்னாள் அமைச்சர்கள் பற்றி கிண்டலாக பேசி வருகிறார்.

வழக்கின் போக்கு
இப்போதைய சூழலில், கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் சேர்க்கப்பட்டிருப்பதால், அந்த வழக்கின் போக்கு எப்படி வேண்டுமானாலும் வெடித்து திரும்பும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.. இதனால் கடந்த ஒரு மாதமாகவே எடப்பாடி பழனிசாமி டென்ஷன் மனநிலையில்தான் காணப்பட்டு வருகிறார்.. பதற்றத்துடன்தான் பேட்டிகளையும் தந்தார்.. ஆனால், இதே டென்ஷன், பதற்றத்தை பிரச்சாரத்திலும் வெளிக்காட்டிக் கொள்ள முடிவதில்லை.. அதனால் சிரித்தபடியே கூலாக பிரச்சாரம் செய்து வருகிறார்..

சலிப்பு
பொதுவாக, கட்சியின் ஸ்டார் பேச்சாளர்கள் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப எல்லா மேடைகளிலும் பேசுவார்கள். இதனால் ஒரு தடவைக்கு மேல் கேட்டால் அந்த பேச்சு சலித்துவிடுவதுடன், ஒரு கட்டத்தில் மக்கள் மனதில் அது பதிந்தும்விடும்.. அப்படித்தான் தற்போதைய எடப்பாடியின் பிரச்சாரம் நகர்கிறது.. நக்கல், நையாண்டி, கேலி என்று கலந்து பேசி கொண்டிருப்பது எந்த அளவுக்கு அவருக்கு வெற்றி வாய்ப்பை பெற்று தரும் என்பது இனிமேல்தான் தெரியவரும்.












Click it and Unblock the Notifications