ஆஹா.. வேறலெவல் கணக்கு.. அசுர பலத்துடன் எடப்பாடி தொகுதியில் களம் காணும் பழனிசாமி!
சென்னை: 2016ம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் தனித்து போட்டியிட்ட பாமக இரண்டாம் இடத்தை பிடித்தது. இப்போது அதிமுக கூட்டணியால் இடம் பெற்றுள்ளதால் எடப்பாடியில் செம்ம வாக்கு வங்கியுடன் முதல்வர் பழனிசாமி களம் காண்கிறார். எனவே அவரது வெற்றி உறுதி என அடித்துச் சொல்கிறார்கள் அதிமுகவினர்.
சேலம் என்பது தமிழகத்தின் மிகமிக முக்கியமான நகரம், பெங்களூரு, கோவை, திருச்சி, சென்னை, வேலூர் என அனைத்து நகரங்களையும் அருகே இணைக்கும் முக்கியமான மையப்புள்ளி சேலம்.
இந்த சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள தொகுதி எடப்பாடி. இங்கு வன்னியர்கள் வாக்கு மிக அதிகம். கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் இப்போது அவருக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
கமல்ஹாசன் கூட்டணிக்கு.. ஸ்டாலின்-எடப்பாடி
1989 வரலாறு
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி 1971ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது திமுக வெற்றி பெற்றது. அதன்பிறகு 1977 மற்றும் 1980களில் அதிமுகவே வெற்றி பெற்றது. அதன் பிறகு 1984ல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதன்பிறகு 1989ம் ஆண்டு முதல்முறையாக பழனிசாமி எடப்பாடி தொகுதியில் அதிமுக ஜெயலலிதா அணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுக சார்பில் போட்டியிட்டு எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.
3 முறை பாமக வெற்றி
ஆனால் 1996ம் ஆண்டு பாமக வெற்றி பெற்றது. 2001ம் ஆண்டும் பாமகவே வெற்றி பெற்றது. இந்த இரண்டு முறையும் எல் கணேசன் என்பவர் வெற்றி பெற்றார். 2006ம் ஆண்டு காவேரி என்பவர் பாமக சார்பில் பெற்றி பெற்றார். ஆனால் 2011ம் ஆண்டு முதல் அதிமுக வசம் எடப்பாடி தொகுதி மாறியது.
2011ல் வெற்றி
2011ம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் பழனிசாமி, 104585 வாக்குகள் பெற்று (56.74 சதவீத வாக்குகள்) அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் கார்தே 69848 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். மற்ற வேட்பாளர்கள் சொற்ப வாக்குகளே பெற்று டெபாசிட் இழந்தனர்.
பாமக இரண்டாம் இடம்
2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே 98,703 வாக்குகள் பெற்று எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக (தனித்து களம் இறங்கியது) வேட்பாளர் அண்ணாதுரை 56681 வாக்குகள் பெற்று (25.12 சதவீதம்) பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். திமுகவின் முருகேசன் 55149 வாக்குகள் பெற்று 3வது இடத்தையே பிடித்தார்.
எடப்பாடி பழனிசாமி
இந்த கணக்குகளை எல்லாம் பார்க்கும் போது, பாமக அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய பலம் ஆகும். அதிமுகவின் வாக்குகள், பாமகவின் வாக்குகளை சேர்க்கும் போது மிகப்பெரிய வாக்கு வங்கி எடப்பாடி தொகுதியில் முதல்வருக்கு கிடைக்கும் என்பது உறுதி என்கிறார்கள் அதிமுகவினர். இந்த முறை எடப்பாடி தொகுதியில் முதல்வர் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று உற்சாகமாக பேசுகிறார்கள் அதிமுகவினர். திமுக இந்த தொகுதியில் 1971ம் ஆண்டுக்கு பின் ஒரு முறை கூட வெற்றி பெற்றது இல்லை. இதை மாற்ற இந்த முறை கடுமையாக முயற்சிக்கும். எனவே யார் வெல்வார்கள் என்பது மே 2ம் தேதி முடிவு தெரிந்துவிடும்.