"அது மட்டும் நடக்க கூடாது!" சசிகலாவின் சேலம் விசிட்.. கச்சிதமாக பிளான் போட்ட எடப்பாடி! கை கொடுக்குமா
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையாக உருவெடுத்துள்ள நிலையில், சொந்த மாவட்டத்திலேயே செக் வைக்கச் செல்கிறார் சசிகலா.
அதிமுகவில் கடந்த சில காலமாகவே உட்கட்சி குழப்பம் நிலவுவது அனைவருக்கும் தெரியும். எடப்பாடி, ஓபிஎஸ் என இருவரும் தலைமைக்கு போட்டிப்போடுவதால் அங்குக் குழப்பமான சூழல் ஏற்பட்டு உள்ளது.
இப்படி தொடர்ச்சியாக அதிமுகவில் ஏற்பட்டு உள்ள குழப்பங்கள் அதிமுக தொண்டர்களுக்குக் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், இருவரும் பிரச்சினையை விடுவதாகத் தெரியவில்லை.

அதிமுக
உண்மையில் அதிமுகவில் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படுவது முதல்முறை இல்லை. கடந்த காலங்களிலும் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டு கட்சியும் பிளவுபட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக ஜெயலலிதா இறந்த போது நடந்த சம்பவங்களை அவ்வளவு எளிதாக அனைவராலும் மறந்துவிட முடியாது. ஜெயலலிதா மறைந்த சமயத்தில் ஓபிஎஸ் முதல்வராக இருந்தாலும், அவருக்குப் பதிலாக அங்கு வர பிளான் போட்டார் சசிகலா.

குழப்பம்
அதிமுகவில் இப்போது இருந்த பலரும் சசிகலாவிடம் கட்சியைத் தலைமை ஏற்க அழைப்பு விடுத்தனர். ஆனால், சரியாக அப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரவே சசிகலாவால் பதவிக்கு வர முடியாமல் போனது. அப்போது ஓ.பன்னீர்செல்வமும் தர்மயுத்தம் எனத் தனியாகக் கிளம்பவே, எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவிக்குக் கொண்டு வரப்பட்டார். தமிழக அரசியலில் கூவத்தூர் காட்சிகளும் அரங்கேறியது இந்த காலகட்டத்தில் தான்.

சசிகலா
முதல்வர் பதவி ஏற்ற எடப்பாடி பழனிசாமி, கொஞ்சக் காலத்திலேயே ஓபிஎஸ் உடன் இணைந்து சசிகலாவை எதிர்க்கத் தொடங்கினார். மேலும், சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த ஆண்டு வரை பெங்களூரில் சிறையில் இருந்ததால் அதிமுக மெல்ல சசிகலா கட்டுப்பாட்டை விட்டுச் சென்றது. மறுபுறம் ஓபிஎஸை வீக் ஆகிவிட்டு, எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள் தனது செல்வாக்கை அதிகரித்தார்.

தேர்தல்
இந்தச் சூழலில் தான் கடந்த ஆண்டு தேர்தலுக்கு சில காலம் முன்பு சசிகலா சிறையில் இருந்து வெளிவந்தார். அப்போதே அவர் அதிமுகவைக் கைப்பற்றி, தமிழக அரசியலில் பெரிய தலைவராக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சசிகலா அமைதியாகிவிட்டார். தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த பிறகு, மீண்டும் அதிமுகவில் தனது செல்வாக்கை அதிகப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

சொந்த மாவட்டத்தில் சேக்
இதற்காக அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தச் சூழலில் தான் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. சசிகலா மற்றும் டிடிவி தினகரனைக் கட்சியில் சேர்க்கலாம் என்று ஓபிஎஸ் கூறினாலும் கூட அதைத் திட்டவட்டமாக மறுத்து ஒற்றை தலைமையைத் தீர்வு எனச் சொல்லி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்தச் சூழலில் ஈபிஎஸுக்கு செக் வைக்கும் வகையில் நாளை சேலத்திற்குச் செல்கிறார்.

சசிகலா பிளான்
நாளை சேலம் வரும் சசிகலா, ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி ஆகிய இடங்களில் ஆதரவாளர்களிடம் பேசுகிறார். மேலும், மாலை 4 மணி அளவில் நான்கு வழிச் சாலையில் அண்ணா பூங்காவில் உள்ள எம்ஜிஆர்- ஜெயலலிதா சிலைகளுக்கு அவர் மாலை அணிவிக்கிறார். அதன் பின்னர் மேலும் சில இடங்களில் ஆதரவாளர்களிடம் பேச உள்ளார். அதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் அவர் அரியானூர், சங்ககிரி வழியாக ஈரோடு செல்கிறார்.

எடப்பாடி திட்டம்
சசிகலாவின் பயணம் எடப்பாடிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. சேலத்திற்கு சசிகலா வரும் போது, அதிமுக நிர்வாகிகள் ஒருவர் கூட அங்கே செல்லக் கூடாது என்பதில் எடப்பாடி உறுதியாக உள்ளார். சொந்த மாவட்டத்திலேயே நிர்வாகிகள் சசிகலாவைச் சந்தித்தால், அது தனது ஆளுமைக்குப் பிரச்சினையாகும் என அவர் நினைக்கிறார். இதனால் சசிகலாவை அதிமுக நிர்வாகிகள் சந்திக்காமல் இருக்கத் தீவிரம் காட்டி வருகிறார்.

முகாம்
திருப்தியில் இருந்து சேலம் வந்த எடப்பாடி, இதனால் அங்கேயே தங்க முடிவு செய்துள்ளார். நேற்று அதிமுக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி எடப்பாடி, அடுத்த இரு நாட்களுக்கு அங்கேயே தங்க முடிவு செய்துள்ளார். இரு நாட்கள் கட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, நிர்வாகிகளை தன் பக்கமே வைத்துக் கொள்ளத் திட்டமிடுகிறார். சசிலா சேலத்தில் இருந்து கிளம்பிய பின்னரே சென்னை செல்ல முடிவு செய்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications