அதிருப்தி திமுக மாஜி நிர்வாகிகளுக்கு எடப்பாடி தூது! வளைத்து பிடித்து ஆட்களை திரட்டும் தனி டீம்!
சென்னை: திமுக உட்கட்சித் தேர்தலில் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றத்தில் இருக்கும் பிரமுகர்களுக்கும், பதவியை பறிகொடுத்த மாஜி திமுக நிர்வாகிகளுக்கும் எடப்பாடி பழனிசாமி தூது விடும் படலத்தை தொடங்கியிருக்கிறார்.
ஆளுங்கட்சிக்காரர்கள் எப்படி அதிமுகவுக்கு போவார்கள் அதுவும் திமுக ஆட்சி நடந்து வரும் சூழலில் என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
ஆனால் ஆளுங்கட்சி செய்து கொடுக்காததை நாங்கள் செய்து கொடுக்கிறோம் என்றும் பதவிகள் தருகிறோம் எனவும் எடப்பாடி டீம் சில பல உறுதிமொழிகளை அள்ளி வீசி வருகிறதாம்.
அந்த வகையில் தேனி மாவட்டத்தில் முதலில் ஆப்ரேஷனை தொடங்கியிருக்கும் எடப்பாடி பழனிசாமி டீம், திமுக உட்கட்சி தேர்தலுக்கு பிறகு அதிருப்தியில் இருப்பவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கரத்தை வலுப்படுத்துவதற்கான அனைத்து வேலைகளையும் சத்தமின்றி செய்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருக்கும் நிர்வாகிகளை தனது பக்கம் இழுப்பதற்கான வேலைகளை ஒரு பக்கம் கவனித்தாலும் மற்றொரு பக்கம் ஆளுங்கட்சியான திமுகவிலிருந்தே முன்னாள் நிர்வாகிகளை வளைப்பதற்கான காய்களையும் நகர்த்தி வருகிறாராம்.

தேனி மாவட்டம்
குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் இந்த முயற்சி தேனி மாவட்டத்தில் ஓரளவு ஒர்க் அவுட் ஆகி வருவதாகவே தெரிவிக்கப்படுகிறது. இதேபோல் இன்னும் சில மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமியின் தூதர்கள் கீழ்மட்ட அளவில் உள்ள திமுக முன்னாள் நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம். ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் ஆச்சு, இதுவரை உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது என்ற கேள்வியை தான் எடப்பாடி டீம் முதல் வீசுகிறதாம்.

மாற்றுக்கட்சி
இதனால் அதிருப்தியில் உள்ள கீழ் மட்ட அளவிலான திமுக முன்னாள் நிர்வாகிகள் எடப்பாடியின் அழைப்பு குறித்து யோசிக்க ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்குள் மாற்றுக்கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்களை வளைத்துப் பிடித்து அதிமுகவில் இணைப்பதற்கான அனைத்து வேலைகளையும் எடப்பாடி பழனிசாமி டீம் பக்காவாக செய்து வருகிறது. இதேபோல் அமமுகவிலிருந்தும் கணிசமான அளவில் நிர்வாகிகளை இழுக்க மெனக்கெட்டு வருகிறது அந்த டீம்.

தொடர்ந்து தொடர்பில்
அதிமுகவை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் அக்கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்கள் என்பதும் அவர்கள் ஒரு கோரிக்கை உதவி என்று வந்தால் அதைச் செய்து கொடுப்பதற்கான முயற்சிகளில் இறங்குகிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் திமுக இன்னும் கவனம் செலுத்த வேண்டியது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications