நேற்று நள்ளிரவு நடந்த "அந்த" சம்பவம்.. நிதானித்து ஆற போடும் எடப்பாடி?.. ஓபிஎஸ்ஸுக்கு தூது?
சென்னை: ஒற்றைத் தலைமை என்ற பேச்சை தற்போது நிறுத்திவிடலாமா என்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி யோசனையில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை பார்க்கலாம்.
அரசியலில் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கும். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பார்கள். தற்போது அதிமுகவில் எந்த நேரத்தில் யார் யார் நண்பர்களாவார்கள் , யார் யார் எதிரிகளாவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எப்போது ஒற்றைத் தலைமை என்ற பேச்சு வந்துவிட்டதோ அப்போது இலை மறைவு காய் மறைவாக இருந்த "அண்ணன் தம்பிகள்" சண்டை பகிரங்கமானது. கட்சியை கைப்பற்ற ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் துடித்து வருகிறார்கள்.
ஓபிஎஸ் போஸ்டர் கிழிப்பு.. உச்சத்தை எட்டும் ஒற்றைத் தலைமை விவகாரம்.. ஆத்திரத்தில் ஆதரவாளர்கள்..!
ஒருத்தர்
இவர்கள் இருவரில் யாரேனும் ஒருத்தர் அந்தப் பதவியை அலங்கரிக்க வேண்டும். அதுவும் சண்டை சச்சரவு, பிளவின்றி இந்த பிரச்சினை சுமூகமாக தீர வேண்டும் என மூத்த நிர்வாகிகள் விரும்புகிறார்கள். இந்த நிலையில் நேற்று மாலை முதல் ஓபிஎஸ் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஒற்றைத் தலைமை
இவ்வாறாக இரு தினங்களாக ஒற்றைத் தலைமை குறித்த பிரச்சினை பரபரத்து வரும் நிலையில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருந்தாலும் ஒற்றைத் தலைமை குறித்து தற்போது எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி திடீர் முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
மாவட்டச் செயலாளர்கள்
அதாவது நேற்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்த பேச்சை தொடர்ந்து இன்று விடியற்காலை சென்னை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதை எடப்பாடி பழனிச்சாமி எதிர்பார்க்கவில்லை என கூறப்படுகிறது. தனக்குத்தான் ஆதரவு அதிகம் எனவே தாமே ஒற்றைத் தலைமையாகலாம் என எடப்பாடி பழனிச்சாமி கருதியிருந்தாராம்.
சென்னையில் ஓபிஎஸ்ஸுக்கு போஸ்டர்
ஆனால் ஒரே இரவில் சென்னையில் பெரும்பாலான இடங்களில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது ஈபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சியையும் ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் தொண்டர்களின் ஆதரவையும் "புரியவைத்துவிட்டதாம்". ஓபிஎஸ் கேட்கிறபடி தொண்டர்களால் அதிமுக பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டால் ஓபிஎஸ்ஸுக்கு பேராதரவு கிடைத்துவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பமும் எடப்பாடி பழனிச்சாமியிடம் உள்ளதாம்.
ஒற்றைத் தலைமை
அது மட்டுமல்லாமல் ஒற்றைத் தலைமை பிரச்சினையால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டால் அந்த கேப்பில் சசிகலா தனது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டால் உள்ளதும் போய்விடுமே என்ற எண்ணமும் எடப்பாடியிடம் இருப்பதாக தெரிகிறது. சசிகலாவிடம் கட்சி போய்விட்டால் ஒரேடியாக அவரது குடும்பத்தில் சிக்கிவிடும். தனக்கான செல்வாக்கும் கட்சியில் இல்லாமல் போய்விடும் என்பதால் ஒற்றைத் தலைமை பேச்சை ஆஃப் செய்ய எடப்பாடி பழனிச்சாமி பரிசீலனை செய்துள்ளாராம்.
ஈபிஎஸ் திட்டம்
மேலும் பொதுக் குழு கூட்டத்திற்கு இன்னும் ஒரு வாரம் காலம் இருக்கும் நிலையில் எதற்காக இப்போதே ஏன் இதை பற்றி வெளிப்படையாக பேச வேண்டும் என்றும் எடப்பாடி நினைக்கிறாராம். இதனால் அதிமுகவில் சசிகலாவின் தலையீட்டை தடுக்க நமக்குள் சண்டை வேண்டாம் என்பதே ஈபிஎஸ்ஸின் திட்டமாம். இதை ஓபிஎஸ்ஸிடம் சொல்லி இந்த பிரச்சினையை ஆற போட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்லாரிடம் தூது அனுப்பியுள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி. எனவே ஒற்றைத் தலைமை ஏற்பட வாய்ப்பிருக்காது என்றே தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.