"டார்கெட்" எடப்பாடி.. ஒரு பக்கம் ஆர்.எஸ் பாரதி.. இப்போ அறப்போர் இயக்கம்.. பறந்து வந்த ஊழல் புகார்!
சென்னை: அதிமுகவை கைப்பற்ற ஒரு பக்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி.. தற்போது பல்வேறு ஊழல் வழக்குகளையும் எதிர்கொண்டு வருகிறார். ஏற்கனவே டெண்டர் முறைகேட்டில் திமுக சார்பாக இவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில் வேறு சில டெண்டர்களிலும் எடப்பாடிக்கு எதிராக புகார் வைக்கப்பட்டு உள்ளது.
அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2018லேயே ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
பல்வேறு நெடுஞ்சாலை துறை டெண்டர்களை தனது உறவினர்களுக்கு கொடுத்து ஊழல் செய்தார் என்று புகார் வைக்கப்பட்டது.

எவ்வளவு
மொத்தம் 4800 கோடி ரூபாய் அளவிற்கு இதில் முறைகேடு நடந்தாக புகார் வைக்கப்பட்டது. அதன்படி வண்டலூர் - வாலாஜா சாலை 4 வழிச் சாலையை 6 வழிச் சாலையாக மாற்றுவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் வைக்கப்பட்டது. இதில் 200 கோடி ஒப்பந்தம் எஸ்பிகே அண்ட் கோ செய்யப்பட்டதில் முறைகேடு செய்யப்பட்டதாக புகாரில் கூறப்பட்டது. அதோடு பல்வேறு கோட்ட சாலைகளை மேம்படுத்துவதில், புதிய சாலைகள் போடுவதில் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

எடப்பாடி
இந்த ஒப்பந்தத்தில் முரைமேடு நடந்துள்ளது. ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவினாசிபாளையம் 4 வழிச் சாலை 715 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1500 கோடியில் டெண்டர் விடப்பட்டுள்ளது. அதேபோல் . திருநெல்வேலி-செங்கோட்டை-கொல்லம் 4 வழிச் சாலை விரிவாக்க 720 கோடி ஒப்பந்தம் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதிலும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்று புகார் வைக்கப்பட்டது.

முறைகேடு
ரூ4,800 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு நடைபெற்றதாக ஆர். எஸ் பாரதி தரப்பில் புகார் வைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இதில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்த நிலையில் உச்ச நீதிமன்றம் இதில் இடைக்கால தடை விதித்தது. இந்த உச்ச நீதிமன்ற இடைக்கால தடை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 2-ந் தேதி விசாரணைக்கு வரும் தலைமை நீதிபதி என்வி ரமணா தெரிவித்து உள்ளார்.

டெண்டர்
இப்போது திடீரென வேறு சில டெண்டர்கள் தொடர்பாக அறப்போர் இயக்கம் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளது. அதன்படி நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் எடப்பாடி பழனிசாமி முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 2020ல் 3 டெண்டர் தஞ்சை கூட்டத்தில் வழங்கப்பட்டது. இதில்தான் முறைகேடு நடந்துள்ளது.

அறப்போர் இயக்கம்
இந்த 3 டெண்டர் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. ஏற்கனவே டெண்டர் வழக்கில் எடப்பாடி பழனிசாமி சிக்கி உள்ளார். தற்போது அறப்போர் இயக்கத்தின் புகாரில் எடப்பாடி பழனிசாமி சிக்கி இருக்கிறார். அடுத்தடுத்து இவர் மீது டெண்டர் வழக்குகள் போடப்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமி என்ன செய்வார்.. சட்ட ரீதியாக இதை எப்படி எதிர்கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications