எடப்பாடி எடுத்து வைத்த அதிரடி ‘ஸ்டெப்’.. அவங்களை இழுத்து விடப்போறாராமே.. இது மட்டும் நடந்தா? போச்சே!
சென்னை : உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு வழக்கு இழுத்துக்கொண்டே செல்வதால், விரைந்து தீர்வைப் பெற எடப்பாடி பழனிசாமி ஒரு அதிரடி பிளானில் இறங்கியுள்ளார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
தொடர் விடுமுறையால் நவம்பர் 21ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்ட அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை, மீண்டும் தள்ளித் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.
முடிந்தவரை தாமதப்படுத்துவதே ஓ.பன்னீர்செல்வத்தின் திட்டமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம், தனது வழக்கறிஞர் ஆஜராகவில்லை எனக் கூறி விசாரணையை ஒத்திவைக்கும் உத்தரவைப் பெற்றார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ்ஸின் முயற்சிகளை முறியடித்து, விரைந்து தீர்ப்பைப் பெறும் வகையில், தேர்தல் ஆணையத்தை வழக்கிற்குள் இழுத்துக் கொண்டு வருவதை நோக்கி எடப்பாடி பழனிசாமி 'ஸ்டெப்' எடுத்து வைத்திருக்கிறார் என்கிறார்கள்.
ஏன் இப்படி கேட்டுக்கிட்டே இருக்கீங்க? ஓபிஎஸ் தரப்பிற்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்.. எடப்பாடி குஷி
தேர்தல் ஆணையம் - முடிவெடுக்கவில்லை
அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதலில், ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில், தான் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றியதும் செல்லும் என்பதில் ஈபிஎஸ் தரப்பு உறுதியாக உள்ளது. பொதுக்குழு தீர்மான விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பியுள்ளார் ஈபிஎஸ். ஆனால், தேர்தல் ஆணையம் அதன் மீது இதுவரை முடிவெடுக்கவில்லை.
டெல்லி ஆதரவு
மறுபுறம், ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என்பதில் ஓபிஎஸ் தரப்பும் உறுதியாக உள்ளது. பொதுக்குழு செல்லும் என உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடினார் ஓபிஎஸ். தனக்கு டெல்லியின் ஆதரவும் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு, டெல்லியின் உதவியைப் பெறும் வகையில் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ஓபிஎஸ். ஆனால், சமீபத்தில் ஜி20 ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி அழைப்புக் கடிதம் அனுப்பி ஓபிஎஸ் எண்ணத்தைத் தகர்த்துள்ளது பாஜக.
ஒன்றுமில்லாமல் போய்விடும்
பாஜக, எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டிருப்பதன் மூலம் அவர், அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழுவை ஏற்றுக்கொள்வதாகிறது. பாஜகவின் முடிவு நீதிமன்றத்தைச் சார்ந்து இருந்தால், நீதிமன்றம் அந்தப் பொதுக்குழுவை ஏற்றுக்கொள்வதாக அர்த்தம். அது மட்டும் நடந்தால், ஓபிஎஸ் முன் இருந்த அத்தனை வாய்ப்புகளும் பறிபோகும். இத்தனை மாதங்களாக அவர் மேற்கொண்டு வந்த சட்டப் போராட்டங்களும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும்.
ஓபிஎஸ்ஸின் உடனடி ரியாக்ஷன்
இதன் காரணமாகவே, டெல்லிக்கு உடனடியாக எதிர்வினை ஆற்றினார் ஓபிஎஸ். அதிமுக தலைமை பொறுப்பில் எடப்பாடி பழனிசாமி இல்லை, அதிமுகவுக்கு நான்தான் ஒருங்கிணைப்பாளராக இருந்து வழிநடத்திக் கொண்டிருக்கிறேன், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஒருசிலர் தேர்வு செய்திருப்பதை தலைமை தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை, இனிமேல் இப்படி குறிப்பிடாதீர்கள் என ஓபிஎஸ், மத்திய அமைச்சருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்திருக்கிறார்.
யார் கை ஓங்கும்?
தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை தற்போதைய சூழலில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தான் அதிமுகவில் உச்ச அதிகாரத்தை கொண்டுள்ளனர். ஜூலை 11 பொதுக்குழு செல்லும், அதன் தீர்மானங்கள் செல்லும் என்றால், எடப்பாடி பழனிசாமி அதிகாரம் பெற்றவராக மாறி விடுவார். ஓபிஎஸ் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுவார். பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பு வந்தால், ஓ.பன்னீர்செல்வத்தின் கை ஓங்கும். இதனால், தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறதோ அதைப் பொறுத்தே இந்த வழக்கின் திசை தீர்மானிக்கப்படும்.
எடப்பாடி கணக்கு
இந்நிலையில் தான், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதால், தேர்தல் ஆணையத்தின் மூலம் தங்களுக்கு சாதகமான பலன்களை பெற்றுவிட விடவேண்டும், அதன் மூலம் தீர்ப்பை எளிதாக தம் பக்கம் திருப்பி விடலாம், அதிமுகவை முழுமையாக கன்ட்ரோலுக்கு கொண்டு வந்துவிடலாம் என ஈபிஎஸ் கணக்கு போட்டிருக்கிறாராம். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் டெல்லியில் கடுமையாக முயன்று சில சாதகமான விஷயங்களை நோக்கி காய்நகர்த்தியுள்ளனர் என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.
ஈபிஎஸ் டீம் கணக்கு
அதாவது, வழக்கில் தேர்தல் ஆணையத்தை ஒரு வாதியாகச் சேர்த்து உத்தரவு பெறும் வகையில் வாதங்களை எடுத்து வைக்க ஈபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாம். தேர்தல் ஆணையம் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர், பொதுக்குழு முடிவுகளை ஏற்றுக் கொள்வதா, இல்லையா என தெளிவான பதிலை சமர்ப்பிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும். பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருப்பதால் தங்களுக்கு சாதகமான முடிவையே தேர்தல் ஆணையம் தெரிவிக்கும் என்பது ஈபிஎஸ் தரப்பின் கணக்காம்.
கயிறாகப் பிடித்து
தேர்தல் ஆணையம் முன்வைக்கும் வாதத்தையே கயிறாகப் பிடித்துக்கொண்டு முன்னேறுவது என எடப்பாடி பழனிசாமி பிளான் போட்டிருக்கிறாராம். அதன் மூலம் நீதிமன்ற உத்தரவும் தங்களுக்கு சாதகமாக கிடைக்கும் என்று ஈபிஎஸ் டீம் ஒரு சீக்ரெட் திட்டத்தைத் தீட்டியுள்ளதாம். அதாவது உச்ச நீதிமன்றம் மூலமே தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுத்து தனக்கு சாதகமான முடிவைப் பெற்று அதிமுகவைக் கைப்பற்றும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளார் என்கிறார்கள்.
ஈபிஎஸ் வைத்த வாதம்
அந்தவகையிலேயே நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் ஒரு வாதத்தை வைத்தது ஈபிஎஸ் தரப்பு. ஈபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதை வழக்கை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை, பொதுக்குழு செல்லும் என உத்தரவிட வேண்டும், வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். கட்சி செயல்படாத நிலையில் இருப்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எடப்பாடி மூவ்
தேர்தல் ஆணையம் இன்னும் பரிசீலிக்கவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்திருப்பதால், சுப்ரீம் கோர்ட், தேர்தல் ஆணையம் விளக்கத்தை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கும், அப்படி நடந்தால், தேர்தல் ஆணையம் விரைந்து தாங்கள் தாக்கல் செய்த பொதுக்குழு திருத்தங்கள், நியமனங்களை ஏற்றுக்கொண்டு அறிவிப்பை வெளியிடும் என்பது ஈபிஎஸ் தரப்பு அமைத்திருக்கும் வியூகமாம். எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்ற நேரத்திலேயே சுப்ரீம் கோர்ட்டில் இந்த மூவை செய்திருக்கிறது அவரது அணி.
இது மட்டும் நடந்தால்
எடப்பாடி பழனிசாமி தரப்பின் இந்த பிளான் வொர்க் அவுட் ஆனால், தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் விரைவில் உத்தரவு பிறப்பிக்கக்கூடும். தேர்தல் ஆணையம், பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்கக் கூடும். வழக்கில் தாமதம் ஏற்படுத்த முயன்று வரும் ஓபிஎஸ்ஸின் முயற்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, ஈபிஎஸ்ஸுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஈபிஎஸ், தேர்தலை நடத்தி பொதுச் செயலாளர் ஆகிவிடலாம். ஆனால், இதெல்லாம் அவ்வளவு எளிதில் நடந்துவிடுமா? ஓபிஎஸ்ஸை டெல்லி கைவிட்டு விடுமா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்விகளாக இருக்கின்றன.