முதல்வர் காருக்கு பின், வேகமாக அணிவகுத்த கார்கள்.. குறுக்கே வந்த மாடு.. தூத்துக்குடி அருகே விபத்து
சென்னை: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி காருக்கு பின்னால் சென்ற வாகனம் மாடு மீது மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
சட்டசபை தேர்தலையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுக்க சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் அவர் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதன் பிறகு, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி செல்வதற்காக முதல்வர் காரில் சென்றார். அவரது காரின் முன்பும், பின்பும் பாதுகாப்புக்காக பல போலீஸ் வாகனங்கள் சென்றன. கட்சிக்காரர்கள் வாகனங்களும் வரிசையாக சென்றன.

எஸ்யூவி வகை கார்கள்
அதில் இரண்டு எஸ்யூவி வகை வாகனங்கள் ஒன்றுக்கொன்று முந்திக் கொள்ள முயன்றபோது, மாடு குறுக்கே வந்ததால் இரண்டு வாகனங்களும் பக்கவாட்டில் மோதிக்கொண்டன. அதில் ஒரு வாகனம், சாலை தடுப்பின் மேல் ஏறி நின்றது. இன்னொரு வாகனம் முன்பகுதி கடுமையாக சேதம் அடைந்தது.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முந்திச் செல்ல முயற்சி
முன்பகுதி கடுமையாக சேதம் அடைந்து இருந்த வாகனத்தின் முன்புற பகுதியில் பெரிய ரோஜாப் பூ மாலை கட்டி தொங்க விடப்பட்டிருந்தது. அதிவேகமாக பல வாகனங்களும் ஒன்று கொண்டு முந்திக் கொண்டு, முதல்வர் வாகனத்தின் பின்னால் செல்ல வேண்டும் என்று முந்திச் செல்ல முயன்றதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஏன் தடுக்கவில்லை?
சாலையின் இரு பக்கமும் பாதுகாப்புக்காக அடிக்கு ஒரு போலீஸ்காரர்கள் என்ற வகையில் நின்றனர். கான்வாய்க்கு குறுக்கே யாரும் அல்லது எந்த தடையும் புகுந்துவிட கூடாது என்பதுதான் இவர்கள் பணி. ஆனால் பணிக்கு நின்ற போலீஸ்காரர்கள், மாடு குறுக்கே சென்றதை தடுக்க தவறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதல்வர் கார்
நல்லவேளையாக முதல்வர் பயணித்த காருக்கு இதனால் பாதிப்பு எதுவும் இல்லை. அதேபோல பாதிக்கப்பட்ட கார்களில் பயணித்தவர்கள் உயிருக்கும் ஆபத்து இல்லை என்று காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications