அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை...வேகமெடுக்கும் அதிமுக- ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி
சென்னை: அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி சந்தித்து, தமிழக அரசு அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாக புகார் அளிக்க இருக்கிறாராம்.
சட்டசபை தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக இதுவரை காணாத பெருந்தோல்வியை சந்தித்துள்ளது. அதிமுகவின் இரட்டை தலைமை மீதான அதிருப்தி, அதிமுக உட்கட்சி மோதல், ஊழல் முறைகேடு வழக்குகள், கோடநாடு கொலை கொள்ளை விவகாரம் என திரும்பிய அத்தனை திசையும் அதிமுகவுக்கு எதிராகவே இருக்கிறது. இதுதான் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு மரண அடி கிடைக்கவும் காரணம் என சொல்லப்படுகிறது.
8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது!
140 மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெறும் 2 இடங்களை மட்டுமே அதிமுகவால் கைப்பற்ற முடிந்ததை அக்கட்சித் தொண்டர்களால் இன்னமும் ஜீரணிக்க முடியாமல்தான் இருக்கிறது. அதிமுகவின் இரட்டை தலைமைகளான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையேயான அதிகார மோதல் அக்கட்சி தொண்டர்களை மிகவும் சோர்வடைய செய்துவிட்டது. அதனால்தான் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்குப் பின்னர் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்கிற குரலும் வலுத்து வருகிறது.
ஓபிஎஸ் அறிக்கை அரசியல்
அதிமுக தொண்டர்களிடையே ஏற்பட்டிருக்கும் இந்த தொய்வை எப்படியாவது சரி கட்டும் வகையில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் வழக்கமான அறிக்கை அரசியலை கையில் எடுத்து செயல்பட்டு வருகின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு என தினந்தோறும் ஒரு அறிக்கை வெளியிட்டு தமிழக அரசை சாடி வருகிறார். இத்தனைக்கும் திமுக அரசுடன் இணக்கமாக இருப்பவராக சொல்லப்படுகிறவர்தான் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் அவரே தமிழக அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் இடைவிடாமல் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
சசிகலாவின் திடீர் தலையீடு
இது ஒருவகையில் அதிமுகவின் இருப்பை வெளிக்காட்டக் கூடியதாக சற்றே அக்கட்சியினருக்கு ஆறுதல் தரக் கூடியதாக இருக்கலாம். இன்னொரு பக்கம் சசிகலாவின் திடீர் திடீர் அரசியல் நடவடிக்கைகள் அதிமுக தொண்டர்களை ரொம்பவே குழப்பம் அடையவும் வைத்திருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார் சசிகலா. சென்னை தியாகராய நகர் ஆற்காடு சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.நினைவு இல்லத்துக்கு போய் அதிமுக கொடியை ஏற்றினார் சசிகலா. அங்கே திறக்கப்பட்ட கல்வெட்டில், கழகப் பொதுச்செயலாளர் என சசிகலா பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
Recommended Video
கடிதம் எழுதும் சசிகலா
பின்னர் ராமாவரம் எம்.ஜிஆர். தோட்டத்துக்குப் போய் அங்கேயும் அமர்க்களப்படுத்தினார் சசிகலா. சசிகலாவை வரவேற்க அமமுகவினர்தான் போனார்கள் என்று அதிமுக தரப்பு சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் சசிகலா வெகு கவனமாக அமமுக பொதுச்செயலாளர் தினகரனை தம்முடன் வராதபடி பார்த்துக் கொண்டார். அத்துடன் இல்லாமல் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருடன் இணைந்து செயல்பட்டு அதிமுகவை காப்பாற்றுவோம் எனவும் பேசியிருக்கிறார் சசிகலா. இதனால் அதிமுகவுக்குள் சசிகலா எப்போது வேண்டுமானாலும் நுழைந்துவிடுவாரோ என்கிற சூழ்நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார். இப்போது அரசியல் தலைவர்கள் பாணியில் தொண்டர்களுக்கு கடிதம் எழுதும் பணியையும் தொடங்கி இருக்கிறார் சசிகலா.
அதிமுக பொன்விழா ஆண்டு
இன்னொருபக்கம், ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி நடத்திய அதிமுக பொன்விழா ஆண்டு அப்படி ஒன்றும் களைகட்டவில்லை. கட்சியின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்களுக்கு பெருந்திரளாக தொண்டர்கள் சென்னையில் திரளவும் இல்லை. ஏன் மாநில நிர்வாகிகள் பலரும் கூட தங்களது மாவட்டங்களிலேயே இருந்து கொண்டு அதிமுக கொடி ஏற்றி கடமையை முடித்துக் கொண்டனர். இந்த பின்னணியில்தான் நாங்களும் இருக்கிறோம்; நாங்களும் ஆக்டிவ் அரசியல் செய்கிறோம் என்பதை காட்ட வேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் அதிமுகவின் இரட்டை தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி
இதனால் இனிவரும் நாட்களில் ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் தரப்பு அரசியல் நடவடிக்கைகளை தீவிரம்காட்டுவது என முடிவு செய்திருக்கிறதாம். இதன் ஒருபகுதியாகவே ஓ.பி.எஸ்.-ன் ஆக்ரோஷ அறிக்கைகள், தொண்டர்களைத் தக்க வைக்கும் வகையிலான ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றனவாம். இதன் அடுத்த கட்டமாக ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை எடப்பாடி பழனிசாமி சந்திக்க திட்டமிட்டுள்ளாராம். அப்போது, தமிழக அரசு லஞ்ச ஒழிப்பு துறை மூலம் மேற்கொண்டு வரும் சோதனைகள் அனைத்துமே அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் என முறையிடவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருக்கிறாராம். இப்படி அப்படி என எதையாவது செய்து தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும்; இல்லை எனில் சசிகலா பக்கம் இயல்பாகவே தொண்டர்கள் சாய்ந்துவிடுவார்கள் என்கிற அச்சத்துடனேயே இத்தகைய சந்திப்புகள், அறிக்கைகள் என்கிற யுக்தியை அதிமுகவின் இரட்டை தலைமை கையில் எடுத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.