கல்வி முதல் மருத்துவம் வரை பாமக தேர்தல் அறிக்கையில் என்னென்ன இலவசங்கள்
பள்ளிக்கல்வி இலவசம், மடிக்கணினி இலவசம் உள்ளிட்ட பல இலவச திட்டங்கள் பாமகவின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: சட்டசபைத் தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. எல்.கே.ஜி முதல் பிளஸ் 2 வரை அனைவருக்கும் இலவச கல்வி அளிக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் பாமக வாக்குறுதி அளித்துள்ளது. 60 வயதைக் கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்படும். பொதுத் துறை வங்கிகளில் உழவர்கள் வாங்கிய பயிர்க் கடனில் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சட்டசபைத் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக செய்து வரும் பாமக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் பல இலவச அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 167 அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
மழலையர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும். அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பையும், கல்வித் தரத்தையும் வலுப்படுத்துவதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளுக்கு மாறும் சூழலை உருவாக்க வேண்டும் என்பது தான் அரசின் இலக்கு ஆகும்.
இலவச கல்வி
தமிழ்நாட்டில் ஒரு மாணவருக்கு ஓராண்டுக்கு கல்வி வழங்குவதற்கான அரசின் செலவு இப்போதுள்ள ரூ.32 ஆயிரத்திலிருந்து ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்படும். பள்ளிக் கல்விக்கான ஆண்டு ஒதுக்கீட்டை ரூ.80,000 கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.500 வீதமும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.1000 வீதமும் நிதியுதவி அளிக்கப்படும். 2021 - 2022ஆம் ஆண்டு முதல் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும்.
ஒரே பாடத்திட்டம்
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் மற்றும் தேர்வுமுறை. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக தமிழக அரசின் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். மாணவர்களின் ஆங்கில மொழித் திறனையும், ஆங்கிலத்தில் பேசும் திறனையும் வலுப்படுத்த சிறப்புப் பயிற்சி. தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள 9ஆம் வகுப்பில் இருந்து சிறப்புப் பயிற்சி. அரசுப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தொகுப்பூதிய அடிப்படையிலும் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்.
உயர்கல்வி
உயர்கல்வி கற்பதற்கான பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை. கடன் தொகையை தமிழக அரசே வங்கிகளுக்குச் செலுத்தும். வருமான வரம்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு உயர்கல்வி இலவசமாக வழங்கப்படும். அரசுப் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் 1000 பேரும், மாணவிகளில் 1000 பேரும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உயர்கல்வி பயில அனுப்பப்படுவார்கள். செலவை அரசே ஏற்கும்.
வெளிநாட்டு மருத்துவப்படிப்பு
வெளிநாட்டு மருத்துவப் பல்கலைக் கழகங்கள், தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்களுடன் உயர்கல்வி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும். அதன் மூலம் உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்களில் கற்பிக்கப்படும் உயர்கல்வி தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் கிடைக்கும். சென்னைப் பல்கலைக் கழகமும், அண்ணா பல்கலைக் கழகமும் திறன்சார் அறிவு மையங்களாகத் (Centre of Excellence) தரம் உயர்த்தப்படும்.
நீட் தேர்வுக்கு விலக்கு
தமிழகத்தில் 6 ஒருமைப் பல்கலைக்கழகங்கள் (Unitary Universities) அமைக்கப்படும். ஆராய்ச்சிகளைச் செய்வது மட்டுமே இவற்றின் முதன்மை நோக்கமாக இருக்கும். தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் ஐ.ஐ.டி,க்கு இணையான ஓர் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Tamilnadu Institute of Technology - TIT) அமைக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு சட்டக்கல்லூரியும், ஒரு வேளாண் கல்லூரியும் அமைக்கப்படும்.
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குத் தரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரித்து முடித்து நல்ல தீர்ப்புப் பெறத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 10% இட ஒதுக்கீடு
மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்படுவது போன்று, அண்ணா பல்கலைக் கழகத்திலும், அரசு பொறியியல் கல்லூரிகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்படும். நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த பா.ம.க. போராடும். தமிழகத்தில் உள்ள ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மத்தியப் பல்கலைக் கழகம், தேசியச் சட்டப் பள்ளி உள்ளிட்ட மத்தியக் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் 50% இடங்களை மாநில ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தும்.
இலவச மருத்துவம்
தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும். வருமான வரம்பின்றி அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். கொரோனா பாதிப்புக்குப் பிந்தைய சிகிச்சைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும். 50 வயதைக் கடந்த அனைவருக்கும் முழு மருத்துவப் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், பெரம்பலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
மகப்பேறு கால நிதியுதவி
கடலூர், ஈரோடு மாவட்டங்களில் 2வது அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும். மருத்துவர்கள் ஒன்றாக இணைந்து கூட்டுறவு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளை ஏற்படுத்த ஊக்குவிக்கப்படும். இதற்கான செலவில் 25% அரசு மானியமாக வழங்கப்படும். இந்தக் கல்லூரிகளில் குறைந்தக் கட்டணம் வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்படும். சென்னையில் ரூ.1000 கோடி செலவில் மாநில புற்றுநோய் மருத்துவ மையம் அமைக்கப்படும். கருவுற்றப் பெண்களுக்கான மகப்பேறு கால நிதியுதவி ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்.
வேளாண் விளை பொருட்கள்
தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் அனைத்து வேளாண் விளைபொருட்களும் அரசால் கொள்முதல் செய்யப்படும். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும். வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். வேளாண்மை சார்ந்து 4 அமைச்சகங்கள் ஏற்படுத்தப்படும். உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை இடுபொருள் மானியம் வழங்கப்படும். வேளாண் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2,500 குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு ஓய்வூதியம்
60 வயதைக் கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்படும். பொதுத் துறை வங்கிகளில் உழவர்கள் வாங்கிய பயிர்க் கடனில் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் பயிர்க் கடனுக்கு 15% மானியம் வழங்கப்படும். உழவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை சேமித்து வைக்க உலர்த்தும் வசதியுடன் கூடிய பிரம்மாண்ட கிடங்குகள் அமைக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும். அம்மண்டலங்களில் அந்த மாவட்டத்தில் விளையும் அனைத்து விளை பொருட்களையும் பதப்படுத்தி / மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட 167 வாக்குறுதிகளை அளித்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சி