அடமானம் வைத்து லோன் வாங்கிய முதிய தம்பதி.. வீட்டுக்கடன் EMI கட்டல.. ஒரே வாரத்தில் தலைகீழ் மாற்றம்
சென்னை: வயதான தம்பதி இருவரும் சாலையோரத்தில் தங்கி உள்ளனர்.. இவர்களுடன் ஆடு, மாடுகளும் தங்கி உள்ளன.. இந்த தம்பதிக்கு உதவுவதற்கு யாருமே இல்லை.. மழையில் நனைந்தபடியே இவர்கள் சாலையோரம் விழிபிதுங்கி கிடக்கிறார்கள்.. இப்படியொரு துயரம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.. என்ன காரணம்? யாரிந்த தம்பதி?
ஹாசன் மாவட்டம், அரகலகூடு தாலுகா கொரடகெரே கிராமத்தை சேர்ந்தவர் சன்னய்யா.. 80 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் ஜெயம்மா... 75 வயதாகிறது..

இந்த தம்பதிக்கு ஒரே மகன்... அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால், அவரது சிகிச்சைக்காக 2023ம் ஆண்டு தங்களுக்குச் சொந்தமான வீட்டை ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து, 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றனர். ஆரம்பத்தில் ஓராண்டு வரை கடன் தவணைகளை முறையாக செலுத்தி வந்துள்ளனர்.
வீடு அடமானம் கடன்
ஆனால், மருத்துவச் செலவுகள் அதிகரித்ததும், வருமானம் இல்லாத நிலையிலும், கடும் பண நெருக்கடி ஏற்பட்டதால், கடந்த சில மாதங்களாக தவணைத் தொகையைச் செலுத்த முடியாத சூழல் உருவானது. இந்நிலையில், அந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் நீதிமன்ற உத்தரவு பெற்றதாக சொல்லி, இந்த தம்பதியை வீட்டிலிருந்து ஒரு வாரத்துக்கு முன்பு வெளியேற்றி விட்டார்கள்..
அந்த வீட்டுக்கு பூட்டு போடப்பட்டதுடன், மாட்டுக் கொட்டகைக்கும் 'சீல்' வைத்து விட்டார்கள்.. தங்களுக்கு சொந்தமான வீட்டிலிருந்து வெளியேற சில மணி நேரம் கூட இந்த தம்பதிக்கு அவகாசம் வழங்கப்படவில்லையாம்.. உடமைகளை முழுமையாக எடுத்து செல்லவும் அனுமதிக்கப்படவில்லையாம்..
வீட்டுக்கடன் - சாலையோரம் ஒரு வாரம்
வீடு பூட்டப்பட்ட பிறகு, செல்ல வேறு இடமின்றி, அந்த தம்பதி தாங்கள் வளர்த்து வந்த பசு மாடுகளுடன் சாலையோரத்திலேயே தங்கும் சூழலுக்கு ஆளானார்கள்.. நடுரோட்டில் கற்களை அடுக்கி அடுப்பு வைத்து சமைத்து சாப்பிடுகிறார்கள்.. கால்நடைகளை அங்கேயே கட்டி வைத்து அவைகளுடன் உட்கார்ந்துள்ளனர்.. வெயிலிலும் மழையிலும், இந்த வயதான காலத்தில் சாலையோரம் தள்ளப்பட்டுள்ளனர்..
வீட்டோடு சேர்ந்து மாட்டுக் கொட்டகையும் பூட்டப்பட்டதால், கால்நடைகளுக்கு தீவனம் வைக்க இடமின்றி, பசு மாடுகளும் கடந்த ஒரு வாரமாக பசியால் தவிப்பதாக கண்ணீர் மல்க கூறுகிறார்கள்..
"எங்களுக்கே இடமில்லை, தண்ணீர் இல்லை.. இந்த மாடுகளை எங்கே கொண்டு போவது?" என்று அவர்கள் கண்கலங்கி கேட்கும் குரல், காண்போரை உலுக்கி எடுக்கிறது..
அரசுக்கு கண்ணீர் கோரிக்கை
வயதையும் கருத்தில் கொள்ளாமல், மனிதநேயமின்றி நிதி நிறுவனம் இவர்களிடம் இவ்வாறு நடந்து கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது, அக்கம் பக்கத்தினர் உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை உதவிகளை தருகிறார்கள்.. ஆனாலும் அதிகாரிகள் தரப்பிலிருந்து இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என்கிறார்கள் பொதுமக்கள்..
செல்ல இடமில்லாமல், வாழ்நாள் முழுவதும் உழைத்து கட்டிய வீட்டை இழந்து, வீதியில் உட்கார்ந்து அழுது கெஞ்சும் நிலைமை வந்துவிட்டதே? எங்களுக்குச் சொந்தமான வீட்டைத் திறந்து மீண்டும் எங்களிடமே ஒப்படைக்க வேண்டும், இல்லையெனில் அரசு எங்களுக்கு ஒரு வழி காட்ட வேண்டும் என்று முதிய தம்பதி கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீர்வு என்ன
தனியார் நிதி நிறுவனங்களின் அத்துமீறல்களுக்கு எதிராக முதியவர்கள் முறையற்ற ஜப்திக்கு எதிராக உடனடியாக புகார் அளிக்கலாம், முதியோர் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் கோட்டாட்சியரிடம் முறையிடலாம் நிதி நிறுவனத்தின் அச்சுறுத்தல்கள் குறித்து வங்கி குறைதீர்ப்பாளரிடம் புகார் செய்யலாம். இப்படி வழிமுறைகள் உள்ளன என்றாலும் அதிகாரிகள் இதில் தலையிட்டு முதிய தம்பதியின் கோரிக்கையை சரி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications