தேர்தல் ஆணையம் ஜனநாயக கடமையில் தவறிவிட்டது.. எங்கள் நியாயத்தை முன்வைப்போம்.. வைகைச்செல்வன் பேட்டி!
தனது கடமையில் இருந்து தேர்தல் ஆணையம் தவறிவிட்டதாக வைகைச்செல்வன் விமர்சித்துள்ளார்.
சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் தனது ஜனநாயக கடமையில் இருந்து தவறிவிட்டதாக அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் விமர்சித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு விதி மாற்றங்களை கருத்தில் கொள்வதில்லை என்று தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
2022ம் ஆண்டு ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் எங்களது தரப்பு சார்பாக வேட்பாளரை தனியாக நிறுத்த விரும்புகிறோம்.
எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடியாது: தேர்தல் ஆணையம் அதிரடி
இபிஎஸ் மனு
ஆனால் அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற எனது கையெழுத்தை வேட்பாளர் படிவத்தில் போடுவதற்கு மற்றும் கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியல் ஆகியவற்றை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மேலும் இரட்டை இலை சின்னத்தையும் எங்களது தரப்புக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முறையிடப்பட்டது.
ஓபிஎஸ் பதில்
இதனைத் தொடர்ந்து எதிர்தரப்பும், தேர்தல் ஆணையமும் மூன்று நாட்களுக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மனு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்தார். அதில், எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அதிமுக பிரதிநிதி என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்ய உரிமை இல்லை.
இபிஎஸ் மனுவை ஏற்கக் கூடாது
பொதுக்குழு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனுவை ஏற்கக்கூடாது. அங்கீகரிக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை சேர்க்க கோருவது ஏற்றுக்கொள்ள முடியாது. எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனு நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தும் வகையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் பதில்
இதனைத் தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு செய்வார். இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரி தங்களை யாரும் அணுகவில்லை. தேர்தல் ஆணையம் ஒரு கட்சியின் செயல்பாடுகளை கண்காணிப்பதோ, முறைப்படுத்துவதோ இல்லை. தேர்தல் ஆணையம் ஒரு கட்சியின் விவகாரங்களில் தலையிடுவதில்லை.
தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை
வாக்காளர் பட்டியலை தயார் செய்வது, தேர்தலை கண்காணிப்பது ஆகியவை தேர்தல் ஆணையத்தின் பணி. இரட்டை இலை தொடர்பான வழக்கு நிலுவையிலுள்ளதால், கடந்த ஜூலை பொதுக்குழு விதிமாற்றங்களை கருத்தில் கொள்வதில்லை. ஜூலையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு முடிவுகளையும் அங்கீகரிக்கவில்லை என்று கூறியுள்ளது. இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இரட்டை இலை சின்னமும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வைகைச்செல்வன் பேட்டி
இதுகுறித்து அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறுகையில், அதிமுக பொதுக்குழு நடத்திக் கொள்ளலாம் என்று உயர்நீதிமன்றம் தான் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் பொதுக்குழு நடத்தப்பட்டது. அந்தப் பொதுக்குழுவில் பழைய பதவிகள் ரத்து செய்யப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது.
தேர்தல் ஆணையம் மீது விமர்சனம்
இதனால் உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலுக்காக தேர்தல் ஆணையத்திடம் பதில் கேட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் தனது ஜனநாயக கடமையில் இருந்து நழுவி விட்டது. பெரும்பான்மையை ஆதரிப்பது தான் உண்மையாக ஜனநாயகம். ஜனநாயகத்தை காப்பாற்ற தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. இருப்பினும் எங்கள் தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் தொடர்ந்து எடுத்து வைப்போம் என்று தெரிவித்தார்.