"பிகே போனா என்ன.. சுனில் வந்துட்டாரு" - காங்கிரஸ் டாஸ்க் ஃபோர்சில் பிரபல தேர்தல் வியூக நிபுணர்!
சென்னை: பிரபல தேர்தல் வியூக நிபுணர் சுனில், காங்கிரஸ் கட்சியின் டாஸ்க் ஃபோர்ஸ் குழுவில் இடம்பெற்றுள்ளார். இவர் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்காக பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது பற்றி முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக உதய்பூரில் நடந்த காங்கிரஸ் சிந்தனையாளர்கள் மாநாட்டில் காங்கிரஸ் கட்சித் தலைமை பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
அதன்படி, தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், டாஸ்க் ஃபோர்ஸ் குழுவில் இடம்பெற்றுள்ளார் தேர்தல் வியூக நிபுணர் சுனில்.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தயார்..காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்ட 3 குழுக்கள் அமைத்த சோனியா
காங்கிரஸ்
2014 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரை காங்கிரஸ் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதனால் கட்சியை சீரமைக்க தலைமை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மும்முரமாகியுள்ளது. அதன் ஒருபகுதியாக, ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா உட்பட சுமார் 400 தலைவர்கள் கலந்துகொண்டனர். கட்சியை பலப்படுத்துவது, தேர்தல் வியூகங்கள், உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
டாஸ்க் ஃபோர்ஸ்
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் விவகாரங்கள் குழு, டாஸ்க் ஃபோர்ஸ், பாதயாத்திரையை ஒருங்கிணைக்கும் மத்திய திட்டமிடல் குழு ஆகியவற்றை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.
டாஸ்க் ஃபோர்ஸ் எனும் பணிக்குழுவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், அஜய் மக்கான், பிரியங்கா காந்தி, ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, தேர்தல் வியூக நிபுணர் சுனில் கனுகோலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் வியூக நிபுணர்
முன்னதாக, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் சோனியா காந்தியைச் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளையும் அளித்தார். அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் காங்கிரஸில் சேர மறுப்பு தெரிவித்தார். காங்கிரஸுக்கு இப்போதைக்கு தேவை நல்ல தலைமைதான் எனத் தெரிவித்தார். அதோடு, காங்கிரஸ் கட்சியோடு அவர் நடத்திய பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.
தேர்தல் வியூகம்
அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை என்னதான் பல ஆண்டுகள் கட்சியை வழிநடத்தி, தேர்தலைச் சந்தித்து பழம் தின்று கொட்டை போட்ட அனுபவம் இருந்தாலும், இன்றைய நிலையில் மக்களைக் கவர்ந்து தேர்தலில் வெற்றி பெற தேர்தல் வியூக நிபுணர்களையே பெருமளவில் நம்பியுள்ளன.
2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது தேர்தல் வியூக நிபுணர்களின் பங்கு வெளிப்படையாகவே தெரிந்தது. விளம்பரங்களின் மூலம் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவது தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முக்கியமான விஷயமாக தற்போது பார்க்கப்படுகிறது.
சுனில்
2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி ஆட்சிக்கு திட்டம் வகுத்த கொடுத்த பிரசாந்த் கிஷோருடன் அவரது டீமில் இருந்தவர் சுனில். கர்நாடக மாநிலம், பெல்லாரியை பூர்வீகமாக கொண்டவரான சுனில் கனுகோலு, சென்னையில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்காவில் உயர் கல்வி முடித்தவர். அங்கு சிறிது காலம் மேனேஜ்மெண்ட் கன்சல்டிங் பணியிலும் இருந்துள்ளார். இந்தியா திரும்பிய அவர், அரசியல் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் சுனிலுடன் இணைந்து மோடிக்காகப் பணியாற்றினார்.
திமுகவுக்கு
பின்னர் பல்வேறு மாநிலங்களில் பாஜகவுக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த சுனில், சுனில் 2016ல் நடைபெற்ற தேர்தலுக்கு வியூகம் வகுக்க திமுகவால் அணுகப்பட்டார். 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்காக வியூகங்களை வகுத்த சுனில், ஸ்டாலினின் நமக்கு நாமே திட்டத்தின் மூளையாக செயல்பட்டவர். 2018 மக்களவைத் தேர்தலின் போதும் சுனில் திமுகவிற்காக பணியாற்றினார். அப்போது தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலையை திமுக உருவாக்கியதில் சுனில் முக்கிய பங்காற்றியவர். அந்தத் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றதற்கு பின்னணியில் சுனிலின் பங்கு முக்கியமானது.
அதிமுகவிற்கு வியூகம்
ஆனால், திமுக அடுத்த தேர்தலுக்கு பிரசாந்த் கிஷோரை நாடிய நிலையில், நவம்பர் 2019ல் திமுகவிடம் இருந்து சுனில் விலகினார். அடுத்த மாதமே அதிமுகவுக்கு தேர்தல் வியூக பணியாற்ற வந்தார் சுனில். ஐடி விங் பலப்படுத்தப்பட்டு, திமுகவின் ஒவ்வொரு விளம்பரங்களுக்கும் அதிமுக சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டதில் மூளையாகச் செயல்பட்டவர் சுனில். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுகவின் கடைசி நாள் முழுபக்க விளம்பரங்கள் உட்பட அத்தனை ஐ.டி விங், பி.ஆர் வேலைகளும் சுனிலின் திட்டம்தான்.
சுனில் கனுகோலு
இந்நிலையில்தான், நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் டாஸ்க் ஃபோர்ஸ் பணிக்குழுவில் தேர்தல் வியூக நிபுணர் சுனில் கனுகோலு இடம்பெற்றுள்ளார். பிரசாந்த் கிஷோர் ஒத்துழைக்காத நிலையில், சுனிலை தங்கள் பக்கம் சேர்த்துள்ளது காங்கிரஸ். பிரசாந்த் கிஷோரின் முன்னாள் அசோசியேட்டான சுனில் கனுகோலு, ஏற்கனவே, பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்காக தேர்தல் வியூகப் பணியாற்றி, பல்வேறு அதிரடி திட்டங்களைச் செயல்படுத்தியிருப்பதால் அவர் காங்கிரஸ் என்ன மாதிரியான உத்திகளைச் செயல்படுத்துவார் என்பது குறித்து இப்போதே எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.