குஜராத் இமாலய வெற்றி.. பாஜக நல்லாட்சிக்கு கிடைத்த பரிசு.. மோடிக்கு வாழ்த்துச் சொன்ன ஓபிஎஸ், ஈபிஎஸ்!
சென்னை : குஜராத்தில் அமோக வெற்றி பெற்று ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கவிருக்கும் பாஜகவுக்கு அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் 156 இடங்களில் வென்று பாஜக அமோக வெற்றி பெற்றிருக்கிறது. அம்மாநிலத்தில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறார் பூபேந்திர படேல்.
இந்நிலையில், குஜராத்தில் பாஜக பெற்றுள்ள இமாலய வெற்றி குறித்து பதிவிட்டுள்ள ஓபிஎஸ், ஈபிஎஸ், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திருச்சி சூர்யாவை தொடர்ந்து அமர் பிரசாத் ரெட்டி மீது மேலும் ஒரு பாஜக ஆதரவாளர் 'கபடி பண மோசடி' புகார்
நாடே எதிர்பார்த்த குஜராத் முடிவு
குஜராத் சட்டமன்றத் தேர்தல் நாடெங்கிலும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா இருவரின் சொந்த மாநிலம் குஜராத். அது மட்டுமல்லாமல் பிரதமர் மோடி பிரதமராவதற்கு முன்னர் குஜராத்தில் முதல்வராகப் பதவி வைத்தவர். பாஜக, குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறது. அந்த வகையில் குஜராத்தின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது.
மும்முனை மோதல்
குஜராத்தில் இந்த முறையும் ஆட்சியைக் கைப்பற்ற தீவிரமாக களம் இறங்கி இருந்தது பாஜக. காங்கிரஸ் கட்சி, பாஜக கோட்டையைத் தகர்க்க களமிறங்கிய நிலையில், ஆம் ஆத்மி கட்சியும் குஜராத்தில் தீவிரமாக இறங்கியது. டெல்லி, பஞ்சாப், கோவாவை தொடர்ந்து குஜராத்தில் தங்களது தடத்தைப் பதிக்க நினைத்தது ஆம் ஆத்மி. இதனால் குஜராத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி இருந்தது.
குஜராத் வெற்றி
கடந்த டிசம்பர் 1ஆம் தேதி மற்றும் 7ஆம் தேதி என்று இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் பாஜக, குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளில் வெற்றி பெற்று மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் குஜராத்தில் ஏழாவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைக்கிறது பாஜக. பாஜகவின் இந்த குஜராத் வெற்றியை நாடங்கிலும் உள்ள பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.
2024 தேர்தலுக்கு முன்னோட்டம்
குஜராத்தில் தற்போது பாஜக பெற்றிருக்கும் வெற்றி பாஜகவின் முந்தைய சாதனைகளை எல்லாம் முறியடித்திருக்கிறது. வரவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த குஜராத் தேர்தல் வெற்றியைச் சுட்டிக் காட்டுகின்றனர் பாஜகவினர். இந்த நிலையில் குஜராத் தேர்தலில் பாஜக வென்றிருப்பதால் பாஜகவிற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கூட்டணி கட்சி தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் வாழ்த்து
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குஜராத்தில் பாஜக பெற்றுள்ள வெற்றிக்காக பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
மோடி - அமித்ஷா - நட்டா
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு பாஜக குஜராத்தில் பெற்ற மகத்தான வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மிக அதிக இடங்களில் வெற்றி பெற்று குஜராத் மாநிலத்தில் எந்த சட்டமன்றத் தேர்தலிலும் இல்லாத வகையில் அதிக இடங்களை வென்று தொடர்ந்து ஏழாவது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைப்பதற்கு வாழ்த்துகள், இது நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்திருக்கிறார்.
மோடி மீதான நம்பிக்கை
அதேபோல அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், "குஜராத் சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து ஏழாவது முறையாக பாஜக அமோக வெற்றி பெற்றிருப்பது பிரதமர் மீது இருக்கும் மாநில மக்களின் நம்பிக்கையை தெளிவுபடுத்துகிறது. இந்த வரலாற்று வெற்றிக்காக பிரதமர் நரேந்திரமோடிஜிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.